Tamil Copy Cat Songs: பாடல்களை வேறு மொழியில் இருந்து காப்பி அடிப்பது, அதே மொழியில் வெளியான பழைய பாடல்களின் ட்யூனை ‘சுட்டு’ லேட்டஸ்ட் பாடலில் சேர்ப்பது போன்றவைகள் எல்லா மொழி பாடல்களிலும் பரவலாகக் காணலாம்.
தமிழைப் பொறுத்தவரை இப்படி பல பாடல்களை பட்டியலிடலாம். அந்த வகையில் இதுவரை நாம் ரசித்துக் கேட்ட இன்னும் பல பாடல்கள் காப்பியடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. தாமிரபரணி திரைப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் இடம் பெற்றிருக்கும் ’கறுப்பான கையால என்ன பிடிச்சான்’ என்ற பாடல் மிகவும் பிரபலமானது. இன்றுவரை எவர் கிரீனாக கேட்கப்படுவது. ஆனால் இந்தப் பாடலையும், ‘கற்பூர நாயகியே கனகவல்லி’ என்ற எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய பாடலையும் நன்றாக கவனித்துப் பாருங்கள். வார்த்தைகள் தான் வேறு வேறே தவிர, ட்யூன் நிறைய இடத்தில் ‘சிங்க்’ ஆகும்.
’தெறி’ படத்தில் ஜி.வி பிரகாஷ் இசையில் இடம்பெற்றிருக்கு ‘செல்லாக்குட்டியே’ பாடலையும், இளையராஜா இசையில் ‘வறுமையின் நிறம் சிவப்பு’ படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘சிப்பி இருக்குது முத்து இருக்குது’ பாடலையும் நன்றாக கவனித்தால் இரண்டுக்குமான ஒற்றுமையை எளிதில் தெரிந்துக் கொள்ளலாம். ’சென்னை 28’ படத்தில் யுவன் இசையில் இடம்பெற்ற ’ஜல்சா பண்ணுங்கடா’ பாடல் மிகப் பிரபலமானது. இந்தப் பாடலை ’மாலையிட்ட மங்கை’ படத்தில் டி.ஆர்.மகாலிங்கம் பாடிய ‘செந்தமிழ் தேன்மொழியாள்’ பாடலுடன் ஒப்பிட்டுப் பாருங்கள் இரண்டும் எந்தளவுக்கு நெருக்கம் எனத் தெரிய வரும்.
அதோடு அருணாச்சலம் படத்தில் இடம்பெற்ற ‘மாத்தாடு மாத்தாடு மல்லிகை’ பாடலின் ட்யூன் மலையாள பாடலிலும் காப்பியடிக்கப்பட்டுள்ளது. இதை எல்லாம் தொகுத்து ‘குருநாதா’ என்ற ஃபேஸ்புக் பேஜில் வீடியோவாக வெளியிட்டிருக்கிறார்கள். தற்போது இந்த வீடியோ பலரால் பகிரப்பட்டு வருகிறது.