கனரக வாகனங்களை உற்பத்தி செய்யும் வஜ்ரம் என்னும் நிறுவனத்தின் புதிய அறிமுகமாக, உலகிலேயே அதிக எரிபொருள் திறன் கொண்ட ஒரு வண்டியை அடுத்த 45 நாட்களுக்குள் தயாரிக்கப்பதாக ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தை நம்பி பல மக்கள், லட்சக்கணக்கில் அந்நிறுவனத்தின் பங்குச்சந்தையில்(stock market) முதலீடு செய்கிறார்கள்.
ஆனால் அப்படி தயாரிக்கப்பட்ட அந்த வண்டி கார்பன் எமிசன் தேர்விலேயே தோல்வியடைகிறது. இதை உலகிற்கு தெரியப்படுத்தாமல் வியாபாரம் செய்து விடலாம் என்று நினைக்கிறார் வில்லன். ஆனால் வில்லன் கூட்டத்தில் இருக்கும் ஒருவன் இதை உலகிற்கு தெரியப்படுத்த ,அதை ரகசிய போலீஸ்(secret agent) அதிகாரியான ஹீரோ எப்படி கையாள்கிறார், என்ற ஹீரோ - வில்லன் ஆடுபுலி ஆட்டமே கலகத் தலைவன்.
ஹீரோவாக வரும் உதயநிதி,இந்த படத்திற்கு எவ்வளவு தேவையோ அந்த அளவிற்கான நுட்பமான நடிப்பை அழகாக வெளிப்படுத்தியுள்ளார். ரகசிய அதிகாரிக்கான (secret agent) உடல் மொழியும்,கம்பீரமும் பக்காவாக பொருந்தி இருக்கிறது. உதயநிதியின் முந்தைய படங்களில் பெரும்பாலும் சண்டைக் காட்சிகள் இல்லை என்பதாலோ என்னவோ இப்படத்தின் சண்டைக் காட்சிகளில் மிரட்டி இருக்கிறார்.
அவருடைய ஆக்சன் காட்சிகள் மாஸ், ரொமான்டிக் காட்சிகளில் சுமார். பல இடங்களில் நடிப்பதையும் தாண்டி அந்த கதாபாத்திரமாகவே மாறி இருப்பது சிறப்பு. எப்போதுமே,வில்லன் எவ்வளவு பலமாக காட்டப்படுகிறானோ அந்த அளவிற்கு படமும் பலமாக அமையும் என்பதை பல படங்களில் நாம் பார்த்திருக்கிறோம் அந்த வகையில் இப்படத்தின் வில்லன் "ஆரவிற்கு" பிரமாண்டமாக கதாபாத்திரம், அவர் வரும் இடங்கள் எல்லாம் பதைபதைப்பு. அவருடைய வில்லத்தனமான நடிப்பும் பல இடங்களில் ரசிக்க வைக்கிறது.
ஆரவ்,தமிழ் சினிமாவில் ஒரு தரமான வில்லனாக வரும் அத்தனை அம்சமும் இப்படத்தில் வெளிப்படுகிறது. பாடல், காதல், ரொமான்ஸ் என்று மட்டுமில்லாமல் இப்படத்தில் பல இடங்களில் நிதி அகர்வால் நடிப்பதற்கான வாய்ப்பு அமைந்துள்ளது. அதை சிறப்பாகவும், உண்மையாகவும் செய்திருக்கிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ரி- என்ட்ரி கொடுத்திருக்கும் ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசை பல இடங்களில் "சூப்பர்",சில இடங்களில் "சுமார்". பாடல்கள் படத்தின் விறுவிறுப்பிற்கு தடங்கல் இல்லாமல் இருப்பது சிறப்பு.
தொடர்ந்து நல்ல படங்களில் நடித்து வரும் கலையரசனுக்கு மற்றுமொரு சிறப்பான கதாபாத்திரம் அதை பக்காவாக செய்திருக்கிறார். மகிழ் திருமேனி படம் என்றாலே ஒருவித பரபரப்பும்,விறுவிறுப்பும் இருக்கும் அதேபோல இப்படத்திலும், கார்ப்பரேட் நிறுவனங்கள் எவ்வாறு மறைமுகமாக மக்களை ஆள்கின்றன என்பதை துணிவுடனும், ரசிக்கும்படியாகவும் கதை சொல்லியிருக்கிறார்.
படம் நான் லீனியராக(Non linear) சொல்லப்பட்டிருந்தாலும், சிறப்பான திரைகதையின் மூலம் அனைவருக்கும் கதைக்களம் புரியும்படி செய்து அசத்தியிருக்கிறார் மகிழ். படத்திற்கு மற்றுமொரு பலமாக இருப்பது தில் ராஜுவின் ஒளிப்பதிவும், ஸ்ரீகாந்தின் எடிட்டிங்கும். பல இடங்களில் விறுவிறுப்பிற்குபஞ்சம் இல்லாமல் கதை செல்கிறது குறிப்பாக ரயில்வே ஸ்டேஷன் காட்சிகள் எல்லாம் அட்டகாசம்.மொத்தத்தில், சிறிய சமூக கருத்துடைய ஒரு நல்ல திரில்லர் படம் பார்த்த நிறைவை தருகிறான் இந்த கலகத் தலைவன்
நவீன் குமார்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.