பிகில் படத்திற்கு பிறகு தளபதி விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ள இந்த படத்தை மாநகரம் கைதி ஆகிய படங்களை இயக்கிய இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். கடந்த ஏப்ரல் மாதமே வெளியாக வேண்டிய இந்த படம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் வெளியாகாமல் தடை செய்யப்பட்டது.
தற்போது ஊரடங்கு உத்தரவில் தளர்வு செய்யப்பட்டு படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் தியேட்டர்கள் திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பொங்கல் தினத்தில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த வாரம் மாஸ்டர் படம் சென்சாருக்கு அனுப்பப்பட்டு சான்றிதழும் பெறப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பொங்கல் தினத்தில் இந்த படம் வெளியாகும் என கடந்த வாரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும கொரோனா தொற்று பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு ஜனவரி 31-ந் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் மாஸ்டர் படத்திற்கு போதுமான ரசிகர்கள் வருவார்களா என்பது பெரும் சந்தேகத்தை கிளப்பியது.
இது தொடர்பாக கடந்த இரு தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வரை சந்தித்த தளபதி விஜய் மாஸ்டர் படம் வெளியாகும்போது தியேட்டர்களில் 100 சதவீத இருக்கை்ககு அனுமதி அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். இதன் மூலம் விஜயின் கோரி்ககை நிறைவேற்றப்பட்டால், அதனைத் தொடர்ந்து பல படங்ளை வெளியிட தமிழக திரைத்துறையினர் முடிவு செய்திருந்தனர்.
ஆனால் தற்போது விஜய்யின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஊரடங்கை ஜனவரி 31-வரை நீடித்துள்ள தமிழக அரசு சின்னத்திரை மற்றும் திரைப்பட படப்பிடிப்புகளில் பணியாற்றும் பணியாளர்களின் உச்ச வரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதனால் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைக்கு அனுமதிக்கப்பட்டதில் மாற்றம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பால் திரைத்துறையினர் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"