மோடி அரசுக்கு எதிராக இன்று நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடித்த படத்தை வைத்து மோடிக்கு அட்வைஸ் செய்யப்பட்ட சம்பவம் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
இன்றைய தினத்தில் உலகளவில் பேசப்பட்டு வரும் விஷயம் என்னவென்றால் அது நாடாளுமன்றத்தில் மோடி அரசுக்கு எதிராக நடத்தப்படும் நம்பிக்கை வாக்கெடுப்பு. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தர மறுத்த மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தது.
இன்று காலை 11 மணிக்கு இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் மக்களவையில் தொடங்கியது. முதலில் உரையாற்றிய தெலுங்கு தேசம் கட்சி எம்.பி ஜெய தேவ் கல்லா மோடிக்கு தெலுங்கு படத்தை வைத்து அட்வைஸ் செய்தார். நாடாளுமன்றத்தின் பணக்கார எம்பிகளில் ஒருவராக அறியப்படும் ஜெய தேவ் கல்லா, 2014 நாடாளுமன்ற தேர்தலில் தனது சொத்து மதிப்பு ரூ. 683 என்று குறிப்பிட்டிருந்தார்.
அதுமட்டுமில்லாமல், எம்.பி ஜெய தேவ் கல்லா, தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகர் கிருஷ்ணாவின் மருமகன் ஆவர். கிருஷ்ணாவின் மகனும், தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபு இவரின் மைத்துனர். சமீபத்தில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான 'பரத் அனே நேனு' சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து இருந்தது. இதில் மகேஷ் பாபு அரசியல்வாதியாக நடிப்பில் அசத்தியிருந்தார்.
தனது மைத்துனர் படத்தை வைத்தே, எம்.பி ஜெய தேவ் கல்லா , மோடிக்கு அட்வைஸ் செய்தார். படத்தில் வரும் மகேஷ் பாபு தனது தாயிற்கு செய்த சத்தியத்தை மீறாமல் வாழ்ந்து, மக்களுக்கு பிடித்த அரசியக் தலைவராக வெற்றி காண்பார். இதை வைத்து மோடியை சாடி பேசிய எம்.பி ஜெய தேவ் கல்லாவின் பேச்சை தெலுங்கு தேச கட்சியினர் கைத்தட்டி ரசித்தனர்.
அதே நேரத்தில் தனது குடும்ப படத்தை பற்றி பெருமையாக பேசி எம்.பி ஜெய தேவ் கல்லா, தேவையில்லாத விளம்பரத்தை தேடிக் கொள்வதாக பாஜவினர் விமர்சித்துள்ளனர்.