கொரோனா விதிமுறைகளை மீறி, பொது நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டதற்காக மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனிடம் தமிழக சுகாதாரத்துறை விளக்கம் கேட்க திட்டமிட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான கமல்ஹாசன், அமெரிக்காவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு திரும்பிய பின்னர், நவம்பர் 22 அன்று அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து கமல்ஹாசன், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார்.
பின்னர் சனிக்கிழமை (டிசம்பர் 4) அன்று கமல்ஹாசன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். டிஸ்சார்ஜ் ஆன பின்னர், கமல்ஹாசன் அவர் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றார்.
இந்நிலையில், கொரோனா விதிமுறைகளை மீறி, நேரடியாக படப்பிடிப்புக்குச் சென்ற கமல்ஹாசனிடம் தமிழ்நாடு சுகாதாரத் துறை விளக்கம் கேட்க முடிவு செய்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பிறகு ஏழு நாட்களுக்கு வீட்டிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அரசாங்கத்தின் பாதுகாப்பு விதிமுறைகள் கூறுகின்றன.
இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜே.ராதாகிருஷ்ணன் கூறுகையில், “கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டவர்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றாலும், மருத்துவமனையில் குணமடைந்த பிறகு ஏழு நாட்கள் வீட்டிலேயேயும் தனிமைப்படுத்தப்பட வேண்டும். ஏழு நாட்களாக கமல்ஹாசன் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொள்ளவில்லை, மாறாக பிக்பாஸ் ஷூட்டிங்கிற்குச் சென்றிருந்தார். எனவே, அவரது செயலுக்கு விளக்கம் கேட்டு சுகாதாரத்துறை அவருக்கு நோட்டீஸ் அனுப்பவுள்ளது என்று கூறினார்.
கமல்ஹாசன் மருத்துவமனையில் இருந்தபோது, நடிகை ரம்யா கிருஷ்ணன் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒரு வாரம் தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil