பிரபல இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில், ஆர்யா நடிப்பில் உருவான ’அரண்மனை 3’திரைப்படம் அக்டோபர் 14 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தை குஷ்புவின் அவ்னி சினிமேக்ஸ் தயாரித்துள்ளது.
இப்படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, ஆன்ட்ரியா. சாக்ஷி அகர்வால், சுந்தர் சி. மறைந்த நடிகர் விவேக், யோகி பாபு, குஷ்பு, கோவை சரளா, மனோபாலா உள்பட ஏராளமானவர்கள் நடித்துள்ளனர்
இப்படத்தின் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது தற்போது விவாத பொருளாக மாறியுள்ளது.
ஏனென்றால், ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஆகும். நடந்து முடிந்து சட்டப்பேரவை தேர்ததில் உதயநிதியும், குஷ்புவும் தான் நேருக்கு நேர் போட்டியிடுவார்கள் என பரவலாக பேசப்பட்டு வந்தது.
இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்ற பாணியில் அரசியல் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். ஆனால், மாறாக திமுக வேட்பாளராக இருந்த டாக்டர் எழிலனுக்கு எதிராக ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்பு களமிறக்கப்பட்டார். இந்த தேர்தலில் குஷ்பு தோல்வி அடைந்து ஏமாற்றத்தைத் தான் அளித்தார்.
பெரியார் மீதான பற்று காரணமாக, திமுகவில் பயணத்தைத் தொடங்கிய குஷ்பு, சில கருத்து வேறுபாடுகள் காரணமாக அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.காங்கிரஸில் முக்கிய பங்கு வகித்தாலும், சில காரணங்கள் காரணமாக, அவர் பாஜகவில் இணைந்தார்.
நினைத்தபடியே பாஜகவின் வேட்பாளராக குஷ்பு களமிறக்கப்பட்டார். ஆனால், சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியைத் தழுவியதால், அவர் மீண்டும் கட்சி மாறப்போவதாகத் தகவல் வெளியானது. இதனை குஷ்பு முற்றிலும் மறுத்துவிட்டார்.
இந்நிலையில், தற்போது அவர் படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதிக்குக் கொடுத்துள்ளதால், அவர் மீண்டும் திமுகவில் இணையப் போகிறாரா என்ற கேள்வியை இணைய வாசிகள் எழுப்பி வருகின்றனர். ஆனால், சினிமா வேறு அரசியல் வேறு என்றும், அதையும் இதையும் ஒப்பிட்டுக் கொள்ள வேண்டாம் எனவும் திரைத்துறையினர் பலர் கூறிவருகின்றனர்.
ஏற்கனவே அரண்மனை 3 படத்திலிருந்து சிங்கிள் டிராக் பாடல் ஒன்றும், பல்வேறு புகைப்படங்களும் வெளியாகி இணையத்தில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது. விரைவில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் எனத் தெரிகிறது.