நடிகை வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்ட நிலையில், அவருடைய கணவர் முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலேயே வனிதாவை திருமணம் செய்துகொண்டார் புகார் கூறப்பட்டு சர்ச்சையானது. இந்த நிலையில், வனிதா, நான் யார் குடும்பத்தையும் கெடுக்கவில்லை; யாரையும் ஏமாற்றவில்லை. யாருக்கும் துரோகம் பண்ணவில்லை” என்று வீடியோ வெளியிட்டுள்ளார்.
நடிகர் விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகை வனிதா சில படங்களில் நடித்தார். சினிமாவில் பெரிய அளவில் வாய்ப்புகள் வராததால் அவர் சினிமாவில் இருந்து சிறிது ஒதுங்கியிருந்தார். ஆனால், அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளைப் பற்றி ஊடகங்களில் செய்திகள் வெளியாகி சர்ச்சை ஏற்பட்டு வந்தன.
ஏற்கெனவே இரண்டு முறை திருமணம் செய்துகொண்டு விவாகரத்து பெற்ற வனிதாவுக்கு இரண்டு கணவர்கள் மூலமும் குழந்தைகள் உள்ளன. இந்த சூழலில்தான் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற வனிதா, தனது வெளிப்படையான குணம், இயல்பால் சர்ச்சைக்குள்ளானார். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி சுவாரசியமாக இருப்பதற்கு வனிதா முக்கிய காரணமாக இருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு வனிதாவுக்கு தொலைக்காட்சிகளில் நடிக்கும் வாய்ப்புகள் வந்தன.
இந்த நிலையில்தான் நடிகை வனிதா விஜயகுமார், பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணத்தில் வனிதாவின் மகள்களும் மகிழ்ச்சியாக கலந்துகொண்டனர். வனிதாவின் திருமணத்துக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர். சிலர் அவர் மூன்றாவது திருமணம் செய்துகொண்டது பற்றி சர்ச்சைக்குரிய விமர்சனம் செய்தனர்.
அதே நேரத்தில், வனிதா திருமணம் செய்துகொண்ட பீட்டர் பால் அவர் ஏற்கெனவே திருமணம் ஆனவர் என்றும் அவர் அவருடைய முதல் மனைவியை விட்டு 7 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகிறார் என்றும் கூறப்பட்டது. முதல் மனைவிக்கு கல்லூரி படிக்கும் வயதில் மகனும் பள்ளியில் படிக்கிற ஒரு மகளும் உள்ளனர் என்ற தகவலும் வெளியானது. மேலும், அவர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலேயே வனிதாவை திருமணம் செய்துகொண்டதாக பீட்டர் பாலின் மனைவி போலீசில் புகார் அளித்தார்.
இதனால், வனிதா விஜயகுமாரின் திருமணம் பற்றி நெட்டிசன்கள் பலரும் கடுமையாக விமர்சனம் செய்தனர். சிலர் வனிதா ஏமாந்துவிட்டதாகவும் சிலர் வனிதா வேறொருவரின் புருஷனை அபகரித்துவிட்டதாகவும் விமர்சித்தனர். இந்த நிலையில், நடிகை வனிதா விஜயகுமார், தன்னுடைய ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்காகவும், தன்னை விமர்சிப்பவர்களுக்காகவும் வீடியோ ஒன்றில் பதிலளித்துள்ளார்.
அந்த வீடியோவில், நடிகை வனிதா விஜயகுமார், தனது கணவர் பீட்டர் பால் பற்றி தனக்கு நன்றாகத் தெரியும். அவரும் சினிமா துறையில் இருப்பவர் என்பதால் அவரைப் பற்றி எல்லாம் தெரியும். அவருக்கு ஏற்கெனவே திருமணமாகி அவருக்கு குழந்தைகள் உள்ளனர். அவரக்ளுக்கு இடையே சண்டை ஏற்பட்டு அவர் கடந்த 7 ஆண்டுகளாக தனியாகத்தான் வாழ்ந்து வருகிறார். இந்த சூழலில்தான் நாங்கள் திருமணம் செய்துகொண்டுள்ளோம். நான் யார் குடும்பத்தையும் கெடுக்கவில்லை. யாரையும் ஏமாற்றவில்லை. யாருக்கும் துரோகம் செய்யவில்லை என்று கூறியுள்ளார்.
மேலும், வனிதா தனது சகோதரிகளைப் பற்றியும் கடுமையாக விமர்சித்தார். அதில் “என் சொத்து எல்லாம் ஏமாற்றினார்கள். என் சகோதரிகளைப் பற்றி எனக்குத் தெரியும். என் அப்பாவே என்னை ஏமாற்றினார். வனிதா தப்பு செய்யவில்லை. தப்பான முடிவு எடுக்கவில்லை. நான் உண்மையாக இருக்கிறேன். ஒரு வேளை நான் இறந்துபோனால், மீடியாக்கள் நல்லா எழுதுவீர்கள். உங்களுடைய அனுதாபம் எனக்கு தேவையில்லை. நீங்கள் அனுதாபப்படுவதால் பீட்டர் பாலின் முதல் மனைவிக்கு அவருடைய புருஷன் கிடைக்கப்போறதில்லை.
எங்களுடைய திருமணம் சட்டப்படி பதிவு செய்யப்படும். அவரைப் பற்றி விசாரிக்காமல் நான் திருமணம் செய்யவில்லை. எனக்கு எல்லாமே தெரியும். நான் ஏமாறவில்லை. நாங்கள் சந்தோஷமாக இருக்க ஆசைப்படுகிறோம். இவ்வளவு நல்லா திருமணம் நடந்ததால் திருஷ்டி பட்டுவிட்டது. இந்த பிரச்னையையும் நான் வென்று வருவேன். பீட்டர் பால் பற்றி அவருடைய முதல் மனைவி பொய் சொல்கிறார்கள். அதனை நம்பாதீர்கள். நான் தவறான பெண் கிடையாது. ஒருவரின் தனிப்பட்டை வாழ்க்கையைப் பற்றி எதுவும் தெரியாமல் தேவையில்லாமல் பேச வேண்டாம். உங்களுடைய வேலையை மட்டும் பாருங்கள்” என்று வனிதா அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.