‘மெர்சல்’ படத்திற்கு ஆதரவு அளித்து, மிகப்பெரிய வெற்றிப்படமாக மாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் விஜய்.
“மெர்சல் திரைப்படம் தீபாவளி விருந்தாக வெளியாகி, மக்களின் பாராட்டுக்களுடன் நல்ல வரவேற்பைப் பெற்று மிகப்பெரிய வெற்றிப்படமாக ஓடிக் கொண்டிருக்கிறது. மாபெரும் வெற்றியடைந்துள்ள மெர்சல் திரைப்படத்திற்கு, சில எதிர்ப்புகளும் வந்தன.
இதற்குப் பதில் அளிக்கும் வகையில், என் கலையுலகைச் சார்ந்த நண்பர்களான நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், திரையுலக அமைப்புகளான தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தேசிய அளவில் பிரபலமான அரசியல் தலைவர்கள், மாநில கட்சிகளின் தலைவர்கள், கட்சி பிரதிநிதிகள், பத்திரிகை, தொலைக்காட்சி, இணையதளம், பண்பலையைச் சேர்ந்த ஊடக நண்பர்கள், எனது நண்பர், நண்பிகள் (ரசிகர்கள், ரசிகைகள்), பொதுமக்கள் அனைவரும் எனக்கும், ‘மெர்சல்’ படக்குழுவினருக்கும் மிகப்பெரிய ஆதரவு தந்தார்கள்.
மேலும், ‘மெர்சல்’ திரைப்படத்தை மாபெரும் மாபெரும் வெற்றிபெறச் செய்ததற்கும், ஆதரவு கொடுத்ததற்கும் அனைவருக்கும் இத்தருணத்தில் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சென்னை, அடையாறில் உள்ள தன் வீட்டு முகவரி அச்சிடப்பட்ட இந்த லெட்டர் பேடில், விஜய்யின் பெயர் சி ஜோசஃப் விஜய் என்றே உள்ளது. அத்துடன், லெட்டர் பேடின் மேற்பகுதியில் ‘ஜீசஸ் சேவ்ஸ்’ என்று அச்சிடப்பட்டுள்ளது. பாஜகவின் தேசியச் செயலாளரான ஹெச்.ராஜா, ‘ஜோசஃப் விஜய்யின் மோடி வெறுப்பே ‘மெர்சல்’ படம்’ என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.