விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பெரும் வரவேற்பைப் பெற்ற சீரியாலாக உள்ளது. நகரமயமாக்கலில், வேலை, சம்பாத்யம், பிரைவசி, தனிமனித விருப்பம் என்று தமிழ்ச் சமூகத்தின் குடும்ப அமைப்பு கூட்டுக் குடும்ப வடிவத்தில் இருந்து தனிக் குடும்பமாக மாறி பல தசாப்தங்கள் ஆகிவிட்டது. ஆனால், இன்னும் கூட்டுக் குடும்பத்தின் அவசியமும் அதன் அனுகூலமும் தனிக் குடும்பங்களுக்கு தேவையாக உள்ளது. அதனை மையமாக வைத்து கூட்டுக் குடும்பத்தில் உள்ள நன்மைகள், பிரச்னைகள் என எல்லாவற்றையும் குடும்ப உறவுகளின் வழியே சொல்லப்படும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தமிழ மக்களை ஈர்த்ததில் வியப்பில்லை.
அதனால், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் விஜய் டிவியிலேயே மக்கள் அதிகம் விரும்பும் சீரியல்களின் பட்டியலில் இடம்பெற்றது. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரமான முல்லை வேடத்தில் நடித்து வந்த விஜே சித்ரா கடந்த டிசம்பர் மாதம் பூந்தமல்லி அருகே நசரேத் பேட்டையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சித்ராவின் மரணம் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிககளை அதிர்ச்சிக்குள்ளாகியது.
விஜே சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவருடைய கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டார். சித்ராவின் மரணத்தில் பல புதிர்களுக்கு இன்னும் விடைகிடைக்காத நிலையில், போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
சித்ராவின் மரணத்தால், விஜய் டிவி பார்வையாளர்களிடையே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பின்னடைவை ஏற்பட்டுள்ளது என்றும் முல்லை கதாபாத்திரத்தில் சித்ராவைத் தவிர வேறு யார் நடித்தாலும் அவரை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று சமூக ஊடகங்களில் பலவிதமாகப் பேசப்பட்டது.
சித்ரா இறந்ததால் அவருக்கு பதிலாக பாரதி கண்ணம்மா சீரியலில் அறிவு கதாபாத்திரத்தில் நடித்த காவ்யா முல்லையாக அறிமுகப்படுத்தப்பட்டார். முதலில் அவரை ஏற்றுக்கொள்ள தயங்கிய ரசிகர்களும் அவரை ஏற்றுக்கொள்ளத் தொடங்கிவிட்டனர். காவ்யாவும் முல்லை கதாபாத்திரத்தில் செட் ஆகிவிட்டார். இதனால், விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மீண்டும் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்துவிட்டது என்று கூறுகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"