விருமன் படத்தில் இடம்பெற்றுள்ள மதுரை வீரன் என்று தொடங்கும் பாடலை அந்த படத்தின் நாயகி அதிதி பாடியுள்ள நிலையில், இந்த பாடலை முதலில் பாடியது சூப்பர் சிங்கர் ராஜலட்சுமிதான் என்பது தெரியவந்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கார்த்தி நடிப்பில் தற்போது தயாராகியுள்ள படம் விருமன். இயக்குநர் முத்தையா இயக்கியுள்ள இந்த படத்தில், பிரகாஷ்ராஜ், ராஜ்கிரன், சரண்யா பொன்வண்ணன், வடிவுக்கரசி, சூரி, மனோஜ் பாரதி ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தின் மூலம் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நாயகியாக நடித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள நிலையில், படம் நாளை (ஆகஸ்ட் 12) வெளியாக உள்ளது. இதனிடையே இப்படத்தில் இடம்பெற்றுள்ள மதுரைவீரன் என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இந்த பாடல் மூலம் அதிதி ஷங்கர் முதல் படத்திலேயே பாடகியாகவும் அறிமுகமாகியுள்ளார்.
ஆனால் இந்த பாடலை முதலில் பாடியவர் சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி செந்தில் என்பது தெரியவந்துள்ளது. விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நாட்டுப்புற பாடல்கள் பாடி பிரபலமான ராஜலட்சுமி, தமிழ் சினிமாவில் பல படங்களில் பாடல்கள் பாடியுள்ளார். மேலும் இவரது கணவரும் சூப்பர் சிங்கர் பட்டம் வென்றவருமான செந்தில் கனேஷ் ராஜலட்சுமி இருவருக்கும் சினிமாவில் அடுத்தடுத்து பாடல் பாடும் வாய்ப்பு கிடைத்து வருகிறது.
அந்த வகையில் சார்ளி சாப்ளில் 2 படத்தில் இடம்பெற்ற சின்ன மச்சான், மற்றும் அல்லு அர்ஜூனின் புஷ்பா படத்தில் இடம்பெற்ற வாயா சாமி உள்ளிட்ட படங்கள் ராஜலட்சுமி குரலில் பட்டி தொட்டி எங்கிலும் பட்டையை கிளப்பியது. அதேபோல் விருமன் படத்தில் இடம்பெற்றுள்ள மதுரைவீரன் பாடல் பட்டையை கிளம்பும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த ராஜலட்சுமிக்கும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
முதலில் ராஜலட்சுமி குரலில் பதிவு செய்யப்பட்ட இந்த பாடல் தற்போது அதிதி குரலில் வெளியாகியுள்ளது. இதனால் சர்ச்சை அதிகரித்துள்ள நிலையில், இயக்குனர் ஷங்கரின் மகள் என்பதால் இந்த பாடல் வாய்ப்பு அவருக்கு அளிக்கப்பட்டதாக பலரும் விமர்சிக்க தொடங்கிவிட்டனர். ஆனால் இந்த பாடல் தனது குரலில் வெளியாகாதது தனக்கு வருத்தம் இல்லை என்று ராஜலட்சுமி குறிப்பிட்ள்ளார்.
இது தொடர்பாக பேசியுள்ள அவர் சினிமாவில் இவ்வாறு நடப்பது சகஜம், நான் பாடிய பாடல் இப்போது அதிதி குரலில் வெளியாகியுள்ளது அவ்வளவுதான். ஒரு பாடல் யார் படினால் நன்றாக இருக்கும் என்பதை இயக்குனர் தான் முடிவு செய்ய வேண்டும். அப்படி மதுரை வீரன் பாடலுக்கு அதிதியின் குரல் பொறுத்தமாக இருந்ததால் பாட வைத்துள்ளனர்.
அவரும் அருமையாக பாடியுள்ளார். நானும் பாடலை கேட்டேன். சரியான ஆளுக்குதான் வாய்ப்பு கொடுத்துள்ளார்கள். இதற்காக அதிதியை விமர்சிப்பது வருத்தமாக உள்ளது என்று கூறியுள்ளார். ராஜலட்சுமியின் இந்த பெருந்தன்மையை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.