மீண்டும் வைரலான விஷாலின் திருமணச் செய்தி தொடர்பாக, அவரது தரப்பிலிருந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
நடிகர் விஷாலுககும் ஆந்திராவைச் சேர்ந்த தொழிலதிபரின் மகள் அனிஷாவுக்கும் திருமணம் செய்து வைக்க விஷாலின் பெற்றோர் முடிவு செய்துள்ளதாகவும். இதற்கு விஷாலும் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. மேலும், விரைவில் ஹைதராபாத்தில் விஷால் - அனிஷா திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாகவும் கூறப்பட்டது.
மேலும், இது தொடர்பாக விஷால் தரப்பிலிருந்து மறுப்பும் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், "எனது திருமணம் குறித்து இத்தகைய தவறான செய்திகள் எப்படி வெளியாகிறது என்று வியப்பாக உள்ளது. தவறைத் திருத்திவிடுங்கள். இது நியாயமே இல்லை. இது எனது தனிப்பட்ட வாழ்க்கை. எனக்கு திருமணம் நிச்சயமானால் நானே அதை முறைப்படி அதிகாரபூர்வமாக மகிழ்ச்சியுடன் அறிவிப்பேன்" எனப் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், விஷால் திருமணம் செய்யவுள்ள அனிஷா இவர் தான் என்று ஒரு பெண்ணின் புகைப்படம் வெளியானது. அதனைத் தொடர்ந்து விஷால் மனைவி இவர் தான் என்று பலரும் செய்திகள் வெளியிடவே, சமூகவலைத்தளத்தில் அப்பெண்ணின் புகைப்படம் டிரெண்டானது.
இந்த நிலையில், "நடிகர் விஷாலின் திருமணம் தொடர்பாக ஒரு பெண்ணின் புகைப்படத்துடன் விஷாலின் மணமகள் என்று வெளி வந்து பரவிக் கொண்டிருக்கும் செய்தி முற்றிலும் தவறானது. உண்மைக்கு புறம்பானது. திருமணம் நிச்சயமானால் முறைப்படி அறிவிப்பு வெளியாகும். மேலும் திருமணம் பற்றி அதிகாரப்பூர்வமான அறிவிப்பு அளிக்கப்பட்ட பின் செய்திகளை வெளியிடுங்கள்" என்று வேண்டுகோள் விஷால் தரப்பில் இருந்து மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.