Yogi Babu : பிரபல நகைச்சுவை நடிகர், யோகி பாபு கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி தனது சொந்த ஊரிலுள்ள குல தெய்வக் கோயிலில் வைத்து, மஞ்சு பார்கவி என்பவரை திருமணம் செய்து கொண்டார். தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக தனது சக நடிகர்களையும், நண்பர்களையும் திருமணத்துக்கு அழைக்க முடியவில்லை என்று வீடியோ ஒன்றையும் வெளியிட்டார்.
இதனையடுத்து, ஏப்ரல் 9-ஆம் தேதி பிரமாண்டமான வரவேற்பு நடத்தவும் திட்டமிட்டிருந்தார் யோகிபாபு. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் மற்றும் பிற கோலிவுட் பிரபலங்களையும் தனது திருமண வரவேற்புக்கு அழைத்திருந்தார். இருப்பினும், கொரோனா வைரஸ் தொற்று நோயால் தற்போது நாடு முழுவதும் லாக் டவுனில் உள்ளது. இந்நிலையில் இந்த திருமண வரவேற்பு நடக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. காரணம் இந்த தேசிய ஊரடங்கு ஏப்ரல் 14 வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், "திருமண வரவேற்பை ஏப்ரல் 9 அன்று பிரமாண்டமாக நடத்த திட்டமிருந்தேன். ஆனால் தற்போதைய சூழ்நிலையைப் பார்த்தப் பிறகு என்ன செய்வது என்று தெரியவில்லை" என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். கொரோனாவிலிருந்து தப்பிக்க ஒரே வழி சமூக விலகல் மட்டுமே. ஆகையால், அரசின் உத்தரவைப் பின்பற்றி தனது திருமண வரவேற்பை யோகி பாபு ஒத்தி வைப்பார் எனத் தெரிகிறது.