பிரபல இந்தி நடிகர் வருண் தவான், கோவிட் - 19 தொற்று உறுதி செய்யப்பட்ட ஜோவா மோரானியுடன் இன்ஸ்டாகிராமில் நேற்று நேரலை செய்தார். மும்பையில் உள்ள கோகிலாபென் திருப்பாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஜோவா மோரானி கோவிட்- 19 தொடர்பான தனது அனுபவங்களை இந்த நேரலையில் பகிர்ந்து கொண்டார்.
வருண் தவான் கூறுகையில்,“ஜோவாவும் நானும் சிறுவயது நண்பர்கள். பத்து வருடங்களுக்கும் மேலாக எங்களது நட்பு பயணிக்கின்றது. நீங்கள் பழகிய ஒருவருக்கு இது நிகழாத வரை, இதன் வழியை உங்களால் அறிந்து கொள்ள முடியாது” என்றார்.
தனக்கு கோவிட்-19 நோய் இருக்கக்கூடும் என்று ஜோவா மோரானி முதலில் எப்படி கண்டுபிடித்தார்? என்று இருவரும் விவாதிக்கத் தொடங்கினர்.
ஜோவா மோரானி கூறுகையில்,“மார்ச் 20-ல் ஒரு காய்ச்சலுடன் தொடங்கியது. தொடக்கத்தில் மிகவும் லேசான காய்ச்சல் தான். உண்மையில், அதற்கு ஒரு நாள் முன்னதாகவே, எனது சகோதரியும் (ஷாஸா) காய்ச்சலை உணர்ந்தாள். முதல் இரண்டு நாட்களுக்கு, பெரிய அறிகுறிகள் எதையும் உணரவில்லை. வெறும் லேசான உடல்வலி மற்றும் காய்ச்சல் . மூன்று (அ) நான்காவது நாட்களுக்குப் பிறகு தான், இந்த இருமல் தொடங்கியது. மிகவும் விசித்திரமான இருமல் அது. ஏற்கனவே, கோவிட்- 19 தொடர்பான செய்திகளை நான் ஆன்லைனில் படித்திருந்ததால் சற்று பயத்தையும் உணர்ந்தேன். பின்பு, அனைத்து அறிகுறிகளும் பொருந்தத் தொடங்கின. எவ்வாராயினும்,ஆறு (அ) ஏழாவது நாளில், கடுமையான இருமல் என் இதயத்தை தாக்கும் வரை நான் எதையும் பெரிதாக உணரவில்லை" என்றார்.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று முதல் நாளிலேயே தெரியுமா ? என்ற வருண் தவானின் கேள்விக்கு,“இல்லவே இல்லை. இந்த அறிகுறிகள் அனைத்தும் மெதுவாகத் தான் தொடங்கின. ஐந்து ஆறு நாட்களுக்குப் பிறகு தான், எனது உணவை என்னால் ருசிக்க முடியாத நிலைமை ஏற்பட்டது. அதன்பிறகு, எனது உடலில் குளிர் தீவிரமாக மாறியது. கண்கள் வலி கொண்டன, தலைபாரமானத. உடல் சோர்வை அதிகமாக உணர ஆரம்பித்தேன். எனவே எனது முதல் அறிகுறி காய்ச்சல், அதைத் தொடர்ந்து இருமல், மற்றும் மூச்சுத் திணறல், " என்று தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
ஏழு (அ) எட்டு நாட்களுக்குப் பிறகு, உடல்நிலையில் முன்னேற்றத்தை உணர்ந்தேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது மிகவும் நல்ல முடிவு . அனுமதிக்கப்பட்ட மூன்று நாட்களுக்குள், நான் முற்றிலும் நன்றாக இருப்பதாக உணர்கிறேன். நீங்களும் இதுபோன்ற அறிகுறிகளைக் கண்டால், உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று உங்களை நீங்களே பரிசோதித்துக் கொள்ளுங்கள்” என்றார்.
இந்த அறிகுறிகள் தென்பட்டபோது, ஜோவா மோரானி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டாரா? என வருண் தவான் விசாரிக்கையில்,“எங்கள் இருவருக்கும் (அவரது சகோதரி ஷாஸாவும்) காய்ச்சல் இருப்பது உணர்ந்தபோது, முற்றிலும் எங்களை தனிமைப்படுத்திக் கொண்டோம். பெற்றோரிடமிருந்து விலகி, அறைக்குள் தனியாக பொழுதை கழிக்க தொடங்கினோம். எங்கள் அறையிலிருந்து வெளியே செல்லும் எந்த பொருளும் மாசுபடாமல் இருப்பதையும் நாங்கள் உறுதிசெய்தோம் ” என்று தெரிவித்தார்.
மேலும் கூறுகையில், “ஷாஸா மோரானிக்கு காய்ச்சல் மற்றும் தலைவலி ஏழு நாட்கள் இருந்தன. வைரஸ் தொற்று அறிகுறிகள் எனக்கு தொடர்ந்தபோது, அவளது அறிகுறிகள் திடீரென நின்றுவிட்டன. ஒருகட்டத்தில், உடல்நிலை நன்றாக உணர ஆரம்பித்தாள். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கினாள். எனவே, கொரோனா வைரஸ் டெஸ்டில் எப்படி அவளுக்கு பாசிட்டிவ் வந்தது என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அறிகுறிகளைக் காட்டியபின் பதினான்கு நாட்கள் வைரஸ் நமது உடலில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பாப்பா (கரீம் மோரானி) சுத்தமாக எந்த அறிகுறிகளையும் காட்டவில்லை . நாங்கள் வீட்டில் மிகவும் கவனமாக இருந்ததோம், இருப்பினும், அப்பாவிற்கு அது எப்படி வந்தது என்று எனக்குத் தெரியவில்லை. நாங்கள் தனிமையில் இருந்தபோது எங்கள் பெற்றோரை நாங்கள் சந்திக்கவில்லை," என்றார்.
பயப்பட ஒன்றுமில்லை. இது ஒரு சாதாரண காய்ச்சல் போன்றுதான். எனக்கு அறிகுறிகள் மிகவும் தீவிரமாக இல்லை என்பதற்காக நான் கடவுளுக்கு நன்றி தெரிவிக்கின்றேன். ஏனென்றால், உலகளவில் பலருக்கும் கடுமையான அறிகுறிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதையும் நான் அறிவேன். டெஸ்ட் செய்து கொள்ளுங்கள்! ” என்று கூறி ஜோவா மோரானி தனது பேஸ்புக் நேரடி அமர்வை முடித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.