Amitabh Sinha , Harikishan Sharma
Anti-Covid pill Molnupiravir: அமெரிக்க நிறுவனங்களான மெர்க் மற்றும் ரிட்ஜ்பேக்கால் (Merck and Ridgeback) உருவாக்கப்பட்ட மோல்னுபிராவிர் மாத்திரைகளுக்கு கடந்த வாரம் மத்திய அரசு, கொரோனா தொற்று நோயாளிகளுக்கு தர அவசர பயன்பாட்டு ஒப்புதல் வழங்கியது. ஆனாலும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள சிகிச்சை வழிகாட்டு நெறிமுறைகளில் இந்த மாத்திரை இடம் பெறவில்லை. இது குறித்து ஐ.சி.எம்.ஆர். தலைவர் மருத்துவர் பல்ராம் பார்கவா செவ்வாய்கிழமை ”பல்வேறு உடல் நலம் சார்ந்த பாதுகாப்பு கவலைகளை இந்த மருந்து தருகிறது. இது சில எதிர்பாராத சூழல்களையும் உருவாக்கியுள்ளது எனவே இது பயன்படுத்த அனுமதிக்கப்பட்டாலும் சிகிச்சைக்காக அனைவருக்கும் பரிந்துரைக்கப்படவில்லை” என்று கூறியுள்ளார்.
மோல்னுபிராவிர்
காய்ச்சலை குணப்படுத்த உருவாக்கப்பட்ட இந்த மருந்து தற்போது கொரோனா வைரஸுக்கு எதிரான மருந்தாக மக்கள் மத்தியில் வந்தடைந்துள்ளது. மிதமான நோய் தாக்கங்களை கொண்டிருக்கும் நோயாளிகளுக்கு மட்டுமே இது தரப்பட வேண்டும். தொற்று ஏற்பட்ட முதல் ஐந்து நாட்களில் இந்த மாத்திரைகளை பயன்படுத்தினால் கொரோனா தொற்று தீவிர திசையை நோக்கி நகர்வது தடுக்கப்படும். கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக ஒப்புதல் வழங்கப்பட்ட சில மருந்துகளில் இதுவும் ஒன்று. மோல்னுபிராவிர் முதலில் இங்கிலாந்தில் பயன்பாட்டுக்கு வந்தது. தற்போது அமெரிக்காவில் இதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ்: சென்னையில் 9 நாட்களில் 10 மடங்கு அதிகரித்த தொற்று
இந்த மாத்திரைகள் கவலை அளிக்க காரணம் என்ன?
மிகவும் குறைவான செயல்திறன் மற்றும் பக்க விளைவுகள் ஆகியவை இந்த மாத்திரை பயன்பாடு குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது. இந்த மாத்திரைகளுக்கு ஒப்புதல் வழங்கும் போது இந்த இரண்டு காரணிகளையும் கருத்தில் கொண்டுள்ளது மருந்து கட்டுப்பாடு அமைப்புகள். சோதனைகளில் 30% மட்டுமே செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளது மோல்னுபிராவிர். மருந்து மூலக்கூறு வைரஸின் ஆர்.என்.ஏவில் தன்னை இணைத்துக்கொண்டு, நகலெடுப்பைத் தடுக்கும் நோக்கத்துடன் பிறழ்வுகளைத் தூண்டுகிறது. ஆனால் இது வைரஸை வலுவாகவும் ஆபத்தானதாகவும் மாற்றக்கூடிய பிறழ்வுகளை அறிமுகப்படுத்தும் அபாயத்தையும் கொண்டுள்ளது. ஒரு பெரிய கவலை என்னவென்றால் மனித டி.என்.ஏவில் பிறழ்வுகளை உருவாக்கும் ஆபத்துகளை இந்த மாத்திரைகள் கொண்டுள்ளது என்பது தான்.
நன்மைகளும் தீமைகளும்
இந்த அபாயங்கள் எல்லாம் மிகவும் குறைவு என்று மருந்துக்கு அங்கீகாரம் வழங்கும் போது மருந்து கட்டுப்பாட்டாளர்கள் கருதினார்கள். அதாவது இந்த அபாயங்கள் போதுமான அளவு குறிப்பிடத்தக்கதாக மதிப்பிடப்படவில்லை. பரிந்துரை செய்யப்பட்ட 5 நாட்களில் இந்த மாத்திரைகளை உட்கொள்வது பெரிய அளவிற்கு தீங்கு ஏற்படுத்தாது என்று நம்பப்படுகிறது.
இதே போன்ற அபாயங்களை ஏற்படுத்தும் பிற நோய்களுக்கான பல மருந்துகள் சந்தையில் உள்ளன. மருந்துகளின் நன்மைகள் இந்த அபாயங்களை விட அதிகமாக இருப்பதாக மருத்துவரால் கருதப்பட்டால் அந்த மருந்துகள் நோயாளிகளின் நிலைமையை கருத்தில் கொண்டு, குறிப்பிட்ட சூழ்நிலைகளில் அடிக்கடி பரிந்துரை செய்யப்படுகிறது என்று ICMR-இன் முன்னாள் தலைவர் என்.கே கங்குலி கூறினார்.
மருந்தின் குறைந்த செயல்திறனைக் கருத்தில் கொண்டு, நன்மைகள் அபாயங்களைக் காட்டிலும் கூடுதலாக இல்லை என்று மோல்னுபிராவிர் குறித்த மருத்துவர் பல்ராம் பார்காவின் வாதத்தை ஏற்கும் சூழல் உள்ளது.
ஓட்டல்கள், திருமண மண்டபங்களில் முன்பதிவை தெரிவிக்க வேண்டும்: சென்னை மாநகராட்சி
தற்போது என்ன நடக்கும்?
நோயாளிகளின் நிலைமையை கருத்தில் கொண்டு மருத்துவர்கள் சில முக்கியமான சூழல்களில் இந்த மாத்திரைகளை பரிந்துரை செய்வார்கள். ஆனால் குறிப்பிட்ட சூழல்களில், கொரோனா தொற்றின் முதல் ஐந்து நாட்களில், மிகவும் மிதமான நோய் தாக்கங்களை கொண்டிருக்கும் நோயாளிகளுக்கு மட்டுமே இவை வழங்கப்பட வேண்டும்.
நாம் இதை ஒரு அதிசய மருந்தாக கருதக்கூடாது. மோல்னுபிராவிர் குறைந்த செயல்திறன் கொண்டதாக கூறப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில் இவை வேலை செய்யலாம் என்பதால் மருத்துவர்கள் இதனை பரிந்துரை செய்தால் நான் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. ஆனால் அதே நேரத்தில் , நோயாளிகளும் அவர்களது குடும்பத்தினரும் இந்த மருந்தைப் பெற வலியுறுத்த வேண்டிய அவசியமில்லை என்று ICMR இன் தொற்றுநோயியல் துறையின் முன்னாள் தலைவர் டாக்டர் ராமன் கங்காகேத்கர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.