Advertisment

சீனாவின் புதிய எல்லைச் சட்டம்; இந்தியாவிற்கான கவலைகள் என்ன?

Explained: China’s new land border law and Indian concerns: எல்லை நிர்வாகத்தை ராணுவத்திடம் கொடுக்கும் சீனா; புதிய சட்டத்தால் இந்தியாவுக்கான கவலைகள் என்ன?

author-image
WebDesk
New Update
சீனாவின் புதிய எல்லைச் சட்டம்; இந்தியாவிற்கான கவலைகள் என்ன?

அக்டோபர் 23 அன்று, சீனாவின் சம்பிரதாயமான ஆனால் உயர்மட்ட சட்டமன்ற அமைப்பான தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழு, "நாட்டின் நில எல்லைப் பகுதிகளின் பாதுகாப்பு மற்றும் சுரண்டலுக்கான" புதிய நிலச் சட்டத்தை நிறைவேற்றியது, இது ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று அரசு ஊடகமான சின்ஹுவா தெரிவித்தது.

Advertisment

சட்டம் என்பது குறிப்பாக இந்தியாவுடனான எல்லைக்காக அல்ல; எவ்வாறாயினும், 3,488-கிமீ எல்லை சர்ச்சைக்குரியதாகவே உள்ளது, மேலும் 17 மாத கால இராணுவ நிலைப்பாட்டின் தீர்வில் மேலும் தடைகளை உருவாக்கலாம் என்று சில வல்லுநர்கள் கருதுகின்றனர். மற்றவர்கள் சட்டம் வெறும் வார்த்தைகள் என்று நினைக்கிறார்கள். உறவுகளை சீர்குலைத்தது உள்நாட்டு சீன சட்டங்கள் அல்ல, அவர்களின் கள நடவடிக்கைகள்.

சீன சட்டம்

சின்ஹுவாவின் கூற்றுப்படி, அது "...சீனாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு புனிதமானது மற்றும் மீற முடியாதது" என்று கூறுகிறது, மேலும் "பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் நில எல்லைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவும், <இவற்றை> குறைமதிப்பிற்கு உட்படுத்தும் எந்தவொரு செயலுக்கும் எதிராக பாதுகாக்கவும் எதிர்த்துப் போராடவும்" அரசைக் கேட்கிறது.

“எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்தவும், பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சியை ஆதரிப்பதுடன், எல்லைப் பகுதிகளில் பொதுச் சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், மக்களின் வாழ்க்கை மற்றும் பணியை ஊக்குவிக்கவும், ஆதரிக்கவும், எல்லைப் பகுதிகளில் சமூக, பொருளாதார வளர்ச்சி மற்றும் எல்லைப் பாதுகாப்புக்கு இடையே ஒருங்கிணைப்பை மேம்படுத்தவும் அரசு நடவடிக்கைகளை எடுக்கலாம்”.

இதன் விளைவாக, எல்லைப் பகுதிகளில் குடிமக்களை குடியேற்றுவதற்கான உந்துதலை இது அறிவுறுத்துகிறது. எவ்வாறாயினும், ""சமத்துவம், பரஸ்பர நம்பிக்கை மற்றும் நட்புரீதியான ஆலோசனை, நில எல்லை தொடர்பான விவகாரங்கள் மற்றும் அண்டை நாடுகளுடன் நீண்ட காலமாக நிலவும் எல்லைப் பிரச்சனைகளை பேச்சுவார்த்தை மூலம் கையாளுதல்" ஆகிய கொள்கைகளை அரசு பின்பற்ற வேண்டும் என்று சட்டம் கேட்டுக்கொள்கிறது என்று சின்ஹுவா கூறியது.

சீனாவின் நில எல்லைகள்

சீனா தனது 22,457-கிமீ நில எல்லையை இந்தியா உட்பட 14 நாடுகளுடன் பகிர்ந்து கொள்கிறது, இந்திய எல்லை, மங்கோலியா மற்றும் ரஷ்யாவுடனான எல்லைகளுக்குப் பிறகு மூன்றாவது மிக நீண்டது. இருப்பினும், இந்திய எல்லையைப் போலல்லாமல், இந்த இரு நாடுகளுடனான சீனாவின் எல்லைகள் சர்ச்சைக்குரியவை அல்ல. சீனாவுடன் நில எல்லை சர்ச்சை உடைய மற்றொரு நாடு பூடான் (477 கிமீ).

இந்தியாவிற்கு ஒரு சமிக்ஞை...

கிழக்கு லடாக்கில் ஏற்பட்டுள்ள மோதலைத் தீர்ப்பதற்கான நீண்ட விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், சீனாவின் எல்லைகளை "புனிதமானதாகவும், மீற முடியாததாகவும்" மாற்றும் சட்டத்தின் அறிவிப்பு, சீனா தனது தற்போதைய நிலைகளில் ஆழமாக கால் பதிக்க வாய்ப்புள்ளது என்று வல்லுநர்கள் தெரிவித்தனர்.

லடாக்கின் உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டிற்குப் பொறுப்பான வடக்கு பிராந்தியத்தின் தளபதியாக இருந்த லெப்டினன்ட் ஜெனரல் டிஎஸ் ஹூடா (ஓய்வு), எல்லை நிர்வாகத்திற்கு உள்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சகங்களில் யார் பொறுப்பு என்பது பற்றிய தெளிவு இல்லாத நிலையில், இந்திய எதிர்த்த நிலையிலும், புதிய சட்டம் எல்லையின் பொறுப்பை சீன ராணுவத்திற்கு தெளிவாக வழங்குகிறது. " சீன ராணுவம் எல்லை நிர்வாகத்தை கவனிக்கும் என்பதில் தெளிவான அணுகுமுறை உள்ளது" என்று லெப்டினன்ட் ஜெனரல் ஹூடா கூறினார்.

"இந்த புதிய சட்டத்தின் மூலம், சீன ராணுவம் லடாக்கில் எந்தப் பகுதியிலிருந்தும் பின்வாங்குவதை நான் காணவில்லை" என்று லெப்டினன்ட் ஜெனரல் ஹூடா கூறினார். சீன ராணுவம் இப்போது "எல்லையின் ஒருமைப்பாடு, இறையாண்மையைப் பாதுகாக்கக் கடமைப்பட்டுள்ளது", மேலும் "நாம் A, B, C, D பகுதிகளிலிருந்து வெளியேறப் போகிறோம், இது மிகவும் கடினமாக இருக்கும்" என்று அவர் கூறினார்.

ஒட்டுமொத்தமாக, "இது பேச்சுவார்த்தைகளை இன்னும் கொஞ்சம் கடினமாக்கும், அமைதியான பகுதிகளிலிருந்து வெளியேறும் வாய்ப்பு குறைவு" என்று லெப்டினன்ட் ஜெனரல் ஹூடா கூறினார்.

“நடந்து வரும் முட்டுக்கட்டைக்கு மத்தியில் நீங்கள் ஏன் ஒரு சட்டத்தை இயற்ற வேண்டும்? நீங்கள் தெளிவாக ஒரு செய்தியை அனுப்புகிறீர்கள்… இப்போது அவர்கள் ஒரு சட்டத்தை உருவாக்கியுள்ளனர், அதனால் நாளை ஒரு உடன்படிக்கையுடன் எவ்வாறு சமரசம் செய்வது?” முன்னோக்கிச் செல்லும்போது, ​​பேச்சுவார்த்தைகள் கடினமாகிவிடும் என்று லெப்டினன்ட் ஜெனரல் ஹூடா கூறினார். "அவர்கள் நம்மிடமிருந்து இன்னும் அதிகமாகக் கோரலாம், இவை நம் சட்டங்கள், நாம் பேச்சுவார்த்தை நடத்த விரும்பினால், இதுவே நமது அடிப்படை" என்று அவர் கூறினார்.

சீனா வெளிப்படையாகக் கூறுகிறதா?

சில வல்லுநர்கள், சட்டம் என்ன சொல்கிறது என்பது முக்கியமில்லை, சீனா என்ன செய்கிறது என்பதுதான் முக்கியம். 2017-18ல் சீனாவுக்கான இந்தியத் தூதராகப் பணியாற்றிய கெளதம் பம்பாவாலே, பெய்ஜிங்குடன் நீண்ட காலம் கையாண்டவர், சட்டம் "தெளிவாகக் கூறுகிறது" என்றார்.

“ஒவ்வொரு நாடும் அதன் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் ஈடுபட்டுள்ளது, அது அந்தந்த அரசாங்கத்தின் வேலை. உங்கள் பகுதி எது என்பது தான் பெரிய கேள்வி, அங்கு நாம் ஒருவருக்கொருவர் உடன்படவில்லை. என்று கௌதம் கூறினார்.

பல தசாப்தங்களாக இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வரும் எல்லைப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான கேள்விக்கு சட்டம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று பம்பாவாலே கூறினார், “சீனாவின் மத்திய அரசாங்கமே இதற்குப் பொறுப்பு என்று கூறுவதைத் தவிர, சட்டம் இல்லாவிட்டாலும் அது உண்மைதான்." இந்த சட்டம் "மொழி, வார்த்தைகள், சொற்கள், நீங்கள் எதை அழைக்க விரும்புகிறீர்களோ அவைகளின் மொத்த அளவு" மட்டுமே.

"உண்மையான பிரச்சினை", "அவர்கள் தங்கள் ராணுவத்துடன் என்ன செய்கிறார்கள், மே 2020 முதல் அவர்கள் என்ன செய்தார்கள், இந்தியா எதிர்வினையாற்றிய விதம்... அதுதான் கள நிலைமையை பாதிக்கிறது. ஏதேனும் பேச்சுவார்த்தைகள் இருந்தால், அந்த சட்டம் பேச்சுவார்த்தைகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக நான் பார்க்கவில்லை”. என கௌதம் கூறினார்.

பம்பாவாலேவின் கூற்றுப்படி, கடந்த ஆண்டு கிழக்கு லடாக்கில் அவர்களின் நடவடிக்கைகள் மூலம், “சீனர்கள் பேச்சுவார்த்தைகள் மூலம் எல்லை அல்லது உண்மையான கட்டுபாட்டு கோட்டை (LAC) தீர்க்க முயற்சிப்பதில் ஆர்வமாக இல்லை என்பதை தெளிவாகக் குறிப்பிடுகின்றனர்; அவர்கள் சக்தியைப் பயன்படுத்தி அதைச் செய்வார்கள் என்று சீனர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள் என்றார்.

மாதிரி எல்லை கிராமங்கள்

சீனா உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டின் அனைத்து பகுதிகளிலும்  "நன்மை" எல்லை பாதுகாப்பு கிராமங்களை உருவாக்கி வருகிறது. இந்த ஆண்டு ஜூலை மாதம் அருணாச்சல பிரதேச எல்லைக்கு அருகில் உள்ள திபெத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு அதிபர் ஜி ஜின்பிங் சென்றிருந்தார்.

சட்டம் அறிவிக்கப்படுவதற்கு முன்பே, சிக்கிம் முதல் அருணாச்சல பிரதேசம் வரையிலான 1,346 கிமீ LAC க்கு பொறுப்பானவரான, கிழக்கு ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே, எல்லை கிராமங்களின் "சிவில் (பொது) மற்றும் ராணுவம் இரண்டிற்குமான பயன்பாடு" இந்தியாவிற்கு கவலை அளிக்கிறது என்று கூறினார்.

“அவர்களின் சொந்த கொள்கை அல்லது உத்தியின்படி, மாதிரி கிராமங்கள் எல்லைக்கு அருகில் வந்துள்ளன. எந்த அளவு மக்கள் அங்கு குடியேறினார்கள் என்பது வேறு கேள்வி. ஆனால் நம்மைப் பொறுத்தவரை, இந்த வசதிகள் மற்றும் கிராமங்களை அவர்கள் எவ்வாறு சிவில் மற்றும் ராணுவம் இரண்டிற்குமாக பயன்படுத்த முடியும் என்பது கவலைக்குரிய விஷயம். எங்கள் செயல்பாட்டுத் திட்டத்தில் நாங்கள் அதைக் கவனித்துள்ளோம், ”என்று லெப்டினன்ட் ஜெனரல் பாண்டே கடந்த வாரம் கூறினார்.

லெப்டினன்ட் ஜெனரல் ஹூடா கூறுகையில், சீனா எப்போதுமே பொது மக்களை தங்கள் கோரிக்கைகளை வலுப்படுத்த பயன்படுத்துகிறது. டெம்சோக்கின் நிலைமையை அவர் குறிப்பிட்டார், அங்கு சில "பொதுமக்கள் என்று அழைக்கப்படுபவர்கள்" LAC இன் இந்தியப் பக்கத்தில் கூடாரங்களை அமைத்துள்ளனர், மேலும் இந்த பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை என்றார்.

"ராணுவத்தின் மூலம் மட்டுமல்ல, பொதுமக்கள் மூலமும்" நிலத்தில் உள்ள உண்மைகளை மாற்ற சீனா முயற்சிக்கிறது, என லெப்டினன்ட் ஜெனரல் ஹூடா கூறினார். மேலும் அவர், இது "LAC க்கு அருகில் குடிமக்களின் மீள்குடியேற்றத்தை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள் என்று அர்த்தம்." என்றார்.

“நீங்கள் (சீனா) மறுபுறம் மக்களைக் குடியேற்றத் தொடங்கினால், நாங்கள் (இந்தியா) எங்கள் எல்லை என்று கருதினால், ஒரு கட்டத்தில், இரு தரப்புக்கும் இடையிலான எல்லையைப் பற்றி விவாதிக்கத் தொடங்கும் போதெல்லாம், அவர்கள் நாங்கள் (சீனா) இந்தப் பகுதியில் மக்கள்தொகையைக் குடியமர்த்திவிட்டோம் என்று கூறுவார்கள் என பம்பாவாலே கூறினார்.

எவ்வாறாயினும், புதிய சட்டம் இல்லாவிட்டாலும், சீனா இதை எப்படியும் செய்து வருகிறது என்று பம்பாவாலே கூறினார். "அதைச் செய்வதற்கு சட்டம் அவசியமான நிபந்தனை அல்ல... அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளில் செய்து வருகிறது, அது எங்களுக்குத் தெரியும். ஒருவேளை மற்ற பகுதிகளிலும் இருக்கலாம், ”என்று பம்பாவாலே கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India China
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment