கொரோனா பாதிப்பு சர்வதேச நாடுகளை பெரும் அச்சுறுத்தி வரும்நிலையில், கொரோனா தொற்று அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில், இந்தியா, ஜூலை 5ம் தேதி, ரஷ்யாவை முந்தி 3ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. பட்டியலின் முதன்மை இடங்களில் அமெரிக்கா, பிரேசில் நாடுகள் உள்ளன. இந்தியாவில், கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சர்வதேச விமான சேவைகள் துவங்குவதில் பெரும்பின்னடைவு ஏற்பட்டு வருகிறது.
சர்வதேச விமான சேவை துவங்குவதில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன?
கொரோனா ஊரடங்கால் பல்வேறு நாடுகளில் தவித்து வரும் இந்தியர்கள் உள்ளிட்டோரை, இந்தியா அழைத்துவரும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தடைவிதித்துள்ளன. இந்த விவகாரத்தில் சுமூக தீர்வு காணும் பொருட்டு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. மற்ற நாடுகளில் தவித்து வரும் இந்தியர்களை இந்தியாவிற்கும், இந்தியாவிற்குள் உள்ள வெளிநாட்டவர்களை அந்தந்த நாடுகளுக்கு அனுப்பும் வகையில் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
உள்நாட்டு விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா?
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. மேற்குவங்க மாநில அரசு, மும்பை, நாக்பூர், அகமதாபாத், டெல்லி, சென்னை உள்ளிட்ட நகரங்களிலிருந்து வரும் விமானங்களுக்கு தடைவிதிக்க மத்திய விமானத்துறை அமைச்சகத்திற்கு கோரிக்கை விடுத்தது. இதனையடுத்து, ஜூலை 6 முதல் 19ம் தேதிவரை, இந்நகரங்களிலிருந்து கோல்கட்டாவிற்கு விமானங்களை இயக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களில் நிலைமை இன்னும் படுமோசமாக உள்ளது. இந்த மாநிலங்களிலிருந்து வருபவர்கள் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி தனிமைப்படுத்துதல் மையங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.
ஜூலை 5ம் தேதி நிலவரப்படி, கர்நாடகாவில் புதிதாக 1,925 பேருக்கும், தெலுங்கானாவில் 1,590 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சமீபநாட்களாக, தேசிய அளவில் கொரோனா பாதிப்பு கணிசமான அளவு அதிகரிக்க இவ்விரு மாநிலங்களில் ஏற்பட்ட பாதிப்பே முக்கிய பங்கு என்பதை யாராலும் மறுக்க இயலாது.
தெலுங்கானா மாநிலத்தில் கடந்த வாரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9,500 இருந்தநிலையில், அது தற்போது 23 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இந்த காலகட்டத்தில், கர்நாடகாவில் புதிதாக 10 ஆயிரம் பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
சர்வதேச விமான சேவைகளை துவக்குவதில் என்ன தடை?
கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ள நாடுகளில், அவர்கள் வெளிநாடுகளில் வசிக்கும் தங்கள் நாட்டவரை அழைத்துச்செல்லும் நடவடிக்கையை துவக்கியுள்ளனர். உதாரணமாக, நியூசிலாந்து நாட்டில் முற்றிலுமாக கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், மீண்டும் அங்கு புதிய தொற்று ஏற்படாமல் இருக்க, மற்ற நாடுகளுடனான விமான சேவைக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பால்டிக் நாடுகளான எஸ்டோனியா, லித்துவேனியா, மற்றும் லாட்வியா நாடுகளை சேர்ந்தவர்கள், நியூசிலாந்து நாட்டிற்கு செல்ல எவ்வித தடையுமில்லை. ஆனால், இந்தியா உள்ளிட கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் வசிப்போர் அங்கு செல்ல பெரும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த தடைகள் குறித்து அந்நாட்டு அரசுடன் மத்திய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்தியா , அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு நாடுகளில் சர்வதேச விமான சேவைகள் துவங்க ஆயத்தமாகி உள்ளன. ஐரோப்பிய யூனியனில் உள்ள 27 நாடுகள், முதற்கட்டமாக கடந்த வாரத்தில் 14 நாடுகளுக்கு பாதுகாப்பான விமான சேவையை துவக்கியுள்ளன. விமான பயணம் மேற்கொள்ள இருப்பவர்களின் தேவைகள் குறித்து அவ்வப்போது ஆராயப்பட்டு முக்கிய தேவைகள் என்றால் மட்டுமே அவர்கள் பயணத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இங்கிலாந்து அரசும், 59 நாடுகளுடனான விமான போக்குவரத்து சேவையை திறந்துவிட்டுள்ளது. ஜூலை 10ம் தேதிக்குள் இங்கிலாந்திற்குள் நுழைபவர்கள், தங்களை சுய தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. இங்கிலாந்து வரையறுத்துள்ள பாதுகாப்பு நாடுகள் பட்டியலில் இந்தியா இடம்பெறாதது, இந்தியர்களாகிய நாம் அனைவருக்கும் சோகம் தரக்கூடிய விசயம்தான்....
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.