உலகெங்கும் கடும் பீதியை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் குறித்த ஆய்வுகள் சர்வதேச அளவில் விஞ்ஞானிகளால் தொடர்ந்து நிகழ்த்தப்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ், வெவ்வேறான சூழ்நிலைகளில், எத்தனை நாட்கள் உயிர்வாழும் என்பது தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் நியூ இங்கிலாந்து மெடிக்கல் ஜர்னலில் புதிய ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. காற்று உள்ளிட்ட பல்வேறு வாழிட சூழ்நிலைகளின் அதன் ஆயுட்காலம் தொடர்பான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
காற்றில் அல்ப ஆயுசு தான்
அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வுகளின் படி, SARS-CoV-2 வைரஸ், காற்றில் 3 மணிநேரங்கள் மட்டுமே உயிருடன் இருக்கும். இந்த சூழ்நிலையில், அதற்கு நோய் பரப்பும் திறன் மிகவும் குறைவாகவே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நோய் பாதிக்கப்பட்ட நபர்களின் அருகில் மிக அதிக நேரம் இருக்கும் மருத்துவ பணியாளர்களுக்கு நோய் தொற்று அதிகமாக ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக அவர்கள் மேலும் அதில் தெரிவித்துள்ளனர்.
பிளாஸ்டிக், ஸ்டீலில் ஆயுசு கெட்டி
கொரோனா வைரசின் ஆயுட்காலம், பிளாஸ்டிக், ஸ்டீல் உள்ளிட்ட பொருட்களில் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. கிட்டத்தட்ட 3 நாட்கள் வரை, இந்த சூழ்நிலைகளில் வைரஸ்கள் மிகுந்த வீரியத்தன்மையுடன் இருக்கும் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கார்ட்போர்ட்களில், 24 மணிநேரம் வரையும், தாமிரம் உள்ளிட்டவைகளில் 4 மணிநேரம் வரையும் இந்த வைரஸ்கள் வீரியத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருக்கும் இடத்தை பொறுத்து கொரோனா வைரஸ்களின் ஆயுட்காலம் வேறுபடுவதால், இந்த குறிப்பிட்ட பொருட்களுடனான தொடர்பை தவிர்க்குமாறு டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். நோய் தொற்று காரணமாக தனிமைப்படுத்தபட்டிருக்கும்போது, கார்ட்போர்ட்களில் உணவு உள்ளிட்ட மற்ற பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்கலாம். இந்த கார்ட்போர்ட்களில், 24 மணிநேரம் மட்டுமே வைரசின் ஆயுட்காலம் என்றாலும், அதனை தவிர்ப்பதனால், வைரசின் ஒரு வாழிடத்தையே நாம் அழிப்பதற்கு ஏதுவாக அமையும்.
SARS-CoV-1 வைரசை ஒப்பிடும்போது SARS-CoV-2 வைரசின் ஆயுட்காலம், மாறுபட்டதாக உள்ளது. 2003ல் பாதிப்பை ஏற்படுத்திய SARS-CoV-1 வைரஸ் உடன் ஒப்பிடும்போது, SARS-CoV-2 நோய் பரப்பும் திறன் மிக அதிகமாக உள்ளது. SARS-CoV-2 வைரஸ், தொற்று இருப்பவர்களிடம் அதற்கான அறிகுறிகள் சிலகாலம் தெரியாமல் இருப்பதும் அதன் அதிகமான பரவலுக்கு உறுதுணை புரிகின்றன. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின்னரே, நோய் தொற்று இருப்பவரிடம் அறிகுறிகள் தென்படவே ஆரம்பிக்கின்றன. இந்த இடைப்பட்ட காலத்தில், நோயின் தொற்று மிக அதிகளவில் பரவிவிடுவதால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதன் சில ஆய்வு முடிவுகள் வெளியான வண்ணம் உள்ளன. இருந்தபோதிலும், இதுதொடர்பான ஒரு முடிவுக்கு விஞ்ஞானிகளால் வர இயலவில்லை. கடந்த பிப்ரவரி மாதம் ஹாஸ்பிடல் இன்பெக்சன்ஸ் என்ற ஜெர்னலில் வெளியிடப்பட்ட அறிக்கையில், கொரோனா வைரஸ்களில் இதுவரை 22 விதமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மெட்டல், பேப்பர், கண்ணாடி, பிளாஸ்டிக், மரக்கட்டை உள்ளிட்ட பொருட்களில், இந்த வைரசின் ஆயுட்காலம் 2 முதல் 9 நாட்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுவுக்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டறியப்படாத நிலையில் வருமுன் காப்பதே சிறந்தது என்பதனடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் மட்டுமே இந்த வைரஸ் தொற்றுகளிலிருந்து பாதுகாக்க முடியும் என்பதை விஞ்ஞானிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.