இந்திய பல்மருத்துவ கழகம், வரும் மார்ச் 31ம் தேதி வரை, தேவையற்ற மற்றும் அவசரம் இல்லாத பல் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டாம் என்று பல் மருத்துவர்களுக்கு பரிந்துரை செய்துள்ளது.
நோவல் கொரோனா வைரஸ் பீதி காரணமாக, இந்திய பல் மருத்துவ கழகம், இந்த அறிவிப்பை கடந்த 17ம் தேதி வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பீதி காரணமாக, அமெரிக்காவில் பல் மருத்துவ பரிசோதனைகளை உடனடியாக நிறுத்துமாறு அமெரிக்க பல்மருத்துவ கழகம், கடந்த திங்கட்கிழமை அறிவிப்பு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சுவாச கோளாறு பிரச்சனையுடன் பல் மருத்துவ பரிசோதனைக்கு வரும் நபர்களை தனிமைப்படுத்துமாறு அமெரிக்க பல்மருத்துவ கழகம், கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
பல் மருத்துவர்களும் கொரோனோ வைரஸ் பாதிப்பும்
பல் மருத்துவர்கள் மற்றும் அந்த துறையை சார்ந்துள்ளவர்களே, மற்றவர்களை காட்டிலும் அதிகளவில் நோய்களுக்கு ஆட்படுவதாக, அமெரிக்காவிலிருந்து வெளியாகும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தின் ஆய்வின்படி, கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள துறையினர் பட்டியலில், பல் மருத்துவர்கள், பல் அறுவை சிகிச்சை உதவியாளர்கள் உள்ளிட்டோர் முதன்மை இடங்களில் உள்ளனர். இதற்கு அடுத்த இடத்தில், சுவாச சிகிச்சை நிபுணர்கள் மற்றும் வாய் அறுவை சிகிச்சை நிபுணர்கள் உள்ளனர்.
நோயாளிகளின் வாய் மற்றும் தொண்டைக்கு அருகிலேயே, பல் மருத்துவர்கள் அதிக நேரம் இருக்குமாறு உள்ளது. மருத்துவர்கள் செய்யும் சிகிச்சை மற்றும் பயன்படுத்தப்படும் கருவிகளினால், நோயாளிகளின் வாயிலிருந்து எச்சில் உள்ளிட்டவை வெளியாகி அவை பல் மருத்துவர்கள் மீது பட அதிக வாய்ப்பு உள்ளது. இதன்காரணமாக, அவர்கள் கொரோனா வைரஸ் உள்ளிட்ட மற்ற வகை நோய்களின் தாக்குதலுக்கு எளிதில் ஆளாகின்றனர். இவைகளிலிருந்து தப்பிக்க அவர்கள் போதிய பாதுகாப்பு நடைமுறைகளை மேற்கொள்வது நல்லது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல் மருத்துவர்கள் மற்றும் மற்ற மருத்துவ பணியாளர்கள் நோயாளிகள் உடன் அதிக நேரம் செலவழிக்க வேண்டியுள்ளது. இதன்காரணமாக, நோயாளிகளிடமிருந்து எளிதாக அவர்களுக்கு நோய் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தனிமைப்படுத்தபட்டவர்களில் பெரும்பாலானோர் இந்த மருத்துவ பணியாளர்கள் தான்.
பல் மருத்துவ சங்கங்கள் மட்டுமல்லாது, பல்வேறு அமைப்புகளும் , தேவையற்ற பல் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டாம் என்றும், நோயாளிகளுடனான தொடர்பை குறைத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.