கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கு சிகிச்சை மருந்தாக ரெம்டெசிவைர் மருந்து சாத்தியமாக கருதப்படுகிறது. உலகளவில், உலக சுகாதார அமைப்பின் (WHO) உதவியுடன் நடைபெறும் ஒன்றுபட்ட சோதனைகளில் விசாரிக்கப்படும் நான்கு சாத்தியமான சிகிச்சை மருந்துகளில் இதுவும் ஒன்றாகும். கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு எந்தவொரு நாட்டிலும் மருந்து இன்னும் ஒப்புதல் பெறவில்லை என்றாலும், சமீபத்திய ஆய்வுகள் நம்பிக்கைக்குரிய முடிவுகளைக் கண்டறிந்துள்ளதாகக் கூறிவருகின்றன .
ரெம்டெசிவைர் என்றால் என்ன?
இது ஆன்டிவைரல் பண்புகளைக் கொண்ட ஒரு மருந்து. 2014 ஆம் ஆண்டில் எபோலா நோய்க்கான சிகிச்சை மருந்தாக அமெரிக்காவைச் சேர்ந்த பயோடெக்னாலஜி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. கொரோனா வைரஸ்களின் குடும்பத்தை சேர்ந்த மெர்ஸ், சார்ஸ் போன்ற நோய்களிக்கும் இது முயற்சிக்கப்பட்டது. ஆனால், நம்பிக்கைக்குரிய முடிவுகளை ரெம்டெசிவைர் காட்டவில்லை என்று வல்லுனர்கள் தெரிவித்தனர்.
கொரோனா வைரஸ்கள் தங்களது மரபணுப் பொருளாக ஒற்றைச் சுழல் இழை ஆர்.என்.ஏவைக் கொண்டுள்ளன. தற்போது, பெருந்த்தொற்றாக விளங்கும் SARS-CoV2 (நாவல் கொரோனா வைரஸ் ) மனித உயிரணுக்குள் நுழைந்த உடன், ஆர்டிஆர்பி (ஆர்.என்.ஏ-வை நம்பியிருக்கும் ஆர்.என்.ஏ பாலிமெரேஸ்) என்ற நொதி மூலம், வைரஸ் நம் உடம்பில் பெருக்கிக் கொள்கிறது. ஆர்டிஆர்பி- ன் செயல்பாட்டைத் தடுப்பதன் மூலம் ரெம்டெசிவைர் மருந்து செயல்படுகிறது.
தொற்று நோயியல் நிபுணர் டாக்டர் தனு சிங்கால் கூறுகையில்,“வைரஸ் ஒரு மனித உயிரணுவைச் சுற்றி வளைத்தவுடன், அதன் ஆர்.என்.ஏ-வை நமது உயிரணுக்களுக்குள் செலுத்தி விடும். ஆர்.டி.ஆர்.பி நொதி (என்சைம்) வைரஸ் நகலெடுப்பை ஏற்படுத்துகிறது. ரெம்டெசிவைர் ஆர்டிஆர்பி நொதியைத் தடுப்பதன் மூலம், வைரஸ் நகலெடுப்பு முறை நிறுத்தப்படுகிறது,” என்றார்.
ஆய்வுகள் என்ன கண்டறிந்துள்ளன?
ஏப்ரல் 10 அன்று தி நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின் எனும் மருத்துவ இதழில், அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 61 நோயாளிகளுக்கு ரெம்டெசிவைர் மருந்து கொடிக்கப்பட்டது தொடர்பான சிறிய ஆய்வு கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தனர். இந்த நோயாளிகள் குறைந்தளவிலான ஆக்ஸிஜனைக் கொண்டு மிகவும் மோசமாக நோய் வாய்ப்பட்டிருந்தனர். உற்பத்தியாளர் கிலியட் நிறுவனத்தின் கருணையுள்ள பயன்பாட்டுத் திட்டத்தின் கீழ் இவர்களுக்கு 10 நாட்கள் ரெம்டெசிவைர் வழங்கப்பட்டது. முதல் நாளில் 200 மி.கி மற்றும் மற்ற ஒன்பது நாட்களில் தலா 100 மி.கி.
மொத்தமுள்ளவர்களில், 53 நோயாளிகளிடம் தொடர்ச்சியாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன . அதில், 68% நோயாளிகளிடம், ஆக்ஸிஜன் அளவு மேம்பட்டதோடு, உடல் ரீதியான முன்னேற்றத்தையும் ஆய்வில் கண்டறிந்தனர் ; சிகிச்சையின் பின்னர் 47% நோயாளி குணமாகி வீடு திரும்பினர்; மெக்கானிக்கல் வெண்டிலேட்டர் ஆதரவில் இருந்த 50% க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு (30 இல் 17) வெண்டிலேட்டர் ஆதரவு திரும்ப பெறப்பட்டது . இருப்பினும், வயதானவர்களிடையே இந்த மருந்தால் போதிய முன்னேற்றம் இல்லை என்றும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், சிகிச்சை அளிக்கப்பட்ட ஏழு நோயாளிகள் மரணமடைந்ததாக கூறப்பட்டுள்ளது.
ஏப்ரல் 13 அன்று ஆல்பர்ட்டா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட மற்றொரு ஆய்வுக் கட்டுரையில்," ரெம்டெசிவைர் மருந்தின் செயல்பாடுகள், ஆய்வகத்தில் நம்பிக்கைக்குரிய முடிவு கிடைத்தாலும், நோயாளிகளிடம் இல்லை" என்று தெரிவித்தனர் . ஆய்வகத்தில் ஆராய்ச்சியாளர்கள், ரெம்டெசிவைர் மருந்தைப் பயன்படுத்தி வைரஸ் நகலெடுப்பதை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தினர்.
ஆல்பர்ட்டா பல்கலைக்கழகத்தின் மருத்துவ நுண்ணுயிரியல் மற்றும் நோயெதிர்ப்புத் துறையின் தலைவரான மத்தியாஸ் கோட்டே, இது குறித்து கூறுகையில், வைரஸின் அடிப்படைக் கட்டமைப்பான ஆர்.என்.ஏ பாலிமெரேஸ் உடன் பிணைந்து செயல்படும் போது தான் இரட்டிப்பாகிக் கொண்டிருக்கிறோம் என்ற மாயையை வைரஸுக்கு உருவாக்கும். ஆனால், உண்மையில் வைரஸ் இரட்டிப்பாகாது, இதன் மூலம் இரட்டிப்பாவதைத் தடுக்கிறது" என்றார்.
இந்த முடிவுகள் எவ்வளவு நம்பிக்கைக்குரியவை?
ரெம்டெசிவைர் குறித்த எந்த ஆய்வும், இதுவரை பெரிய நம்பகத்தன்மையை உருவாக்க வில்லை. தி நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்ட ஆய்வு, வெறும் 53 நோயாளிகளிடத்தில் நடத்தப்பட்ட ஒரு சிறிய ஆய்வாக கருதப்படுகிறது. இதை வைத்துக் கொண்டு உறுதியான முடிவுகளை எடுப்பது மிகவும் கடினம். மேலும், ஆய்வில் 13% நோயாளிகள் இறந்தனர்.
ஆய்வின் முதன்மை எழுத்தாளர், சிடார்ஸ்-சினாய் மருத்துவ மையத்தின் தொற்றுநோயியல் இயக்குனர் ஜொனாதன் டி.கிரீன் கூறுகையில், “இந்தத் தரவுகளிலிருந்து உறுதியான முடிவுகளை எடுக்க முடியாது என்பது உண்மை தான். இருப்பினும், ரெம்டெசிவைரின் செயல் திறனை சரிபார்க்க மேலும் கட்டுப்படுத்தப்பட்ட சோதனைககள் ஊக்குவிக்கப்பட வேண்டும்" என்றார்.
மும்பை நானாவதி மருத்துவமனையின், உள் மருத்துவத் துறையில் பணிபுரியும், மருத்துவர் ஹர்ஷத் லிமாயே, கூறுகையில், "எபோலா சிகிச்சைக்கு கூட ரெம்டெசிவைர் சிறந்த முடிவுகளைக் காட்டவில்லை. இருப்பினும், எபோலா மற்றும் கொரோனா வைரஸ் வேறுபட்டவை. கொரோனா வைரசுக்கான மருந்தின் செயல்திறனை அளவிடுவதற்கான சோதனைகளுக்கு நாம் காத்திருக்க வேண்டும், ”என்று கூறினார்.
ரெம்டெசிவைர் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு என்ன?
உள்ளூர் மருந்து உற்பத்தியாளர்கள் அதை கொள்முதல் செய்ய விரும்பினால், அதைப் பயன்படுத்துவது குறித்து பரிசீலிக்கலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது. ரெம்டெசிவைர் தற்போது இந்தியாவில் கிடைக்கவில்லை. கோவிட்-19 சிகிச்சைக்கான ரெம்டெசிவைரின் செயல்திறனைப் பற்றி மதிப்பீடு செய்வதற்காக உலக சுகாதார அமைப்பின் ஒன்றுபட்ட சோதனைகளின் முடிவுகளுக்காக ஐ.சி.எம்.ஆர் காத்திருக்கிறது.
ரெம்டெசிவைர் மருந்து குறித்து வேறு எங்கு படிக்கப்படுகிறது?
தற்போது, உலகளாவிய ரீதியில் சுமார் ஆறு சோதனைகள் மற்றும் ஆய்வுகள் உள்ளன. ஹூபே மாகாணத்தின் பல ஆய்வகங்களில் ரெம்டெசிவைர் பயன்படுத்துவது தொடர்பாக சீனா இரண்டு மருத்துவ பரிசோதனைகளைத் தொடங்கியுள்ளது. ஒரு ஆய்வு குறைந்த ஆக்ஸிஜன் அளவைக் கொண்ட மோசமான நோயாளிகளுக்கு கவனம் செலுத்தும். மற்ற ஆய்வு மிதமான அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகளுக்கு கவனம் செலுத்தும். அமெரிக்காவின், தேசிய சுகாதார ஆய்வு நிறுவனம் சோதனையைத் தொடங்கியுள்ளது. பிரான்சிஸ் நாட்டில், COVID-19 க்கான சாத்தியமான சிகிச்சைகள் மதிப்பீடு செய்து வரும் INSERM ஆராய்ச்சி நிறுவனம் , ரெம்டெசிவைர் தொடர்பான ஆய்வையும் மேற்கொண்டு வருகிறது
கிலியட் மருந்து உற்பத்து நிறுவனம் அமெரிக்கா, ஆசியா,ஐரோப்பா ஆகிய நாடுகளில் மூன்றாம் கட்ட ஆய்வை நடத்தி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.