Advertisment

ஜான்சன் & ஜான்சன் கோவிட் -19 தடுப்பூசி சோதனை நிறுத்தம் இந்தியாவை பாதிக்குமா?

இதேபோன்ற பிரச்சனைக் காரணமாக உலகளவில் இடைநிறுத்தப்பட்ட ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகாவின் அணுகுமுறையைப் போன்றே ஜான்சன் நிறுவனமும் பின்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

author-image
WebDesk
New Update
Johnson and Johnson covid 19 vaccine issue Tamil News

Johnson and Johnson covid 19 vaccine issue

Covid 19 Vaccine Updates Tamil News: ஜான்சன் அண்ட் ஜான்சனின் துணை நிறுவனமான ஜான்சென் பார்மாசூட்டிகா உருவாக்கிய கோவிட்-19 தடுப்பூசி, மனித சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பிறகு பாதுகாப்பு தொடர்பான காரணமாகப் பிற்பகுதியில் இடைநிறுத்தப்பட்டது மருத்துவத் துறையில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. கடந்த மாதம் இதேபோன்ற பிரச்சனைக் காரணமாக உலகளவில் இடைநிறுத்தப்பட்ட ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகாவின் அணுகுமுறையைப் போன்றே ஜான்சன் நிறுவனமும் பின்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

இடைநிறுத்தம் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டியவை

கடந்த திங்களன்று, 60,000 பங்கேற்பாளர்களுடன் ஜான்சனின் தடுப்பூசி வேட்பாளருக்கான 3-ம் கட்ட சோதனை இடைநிறுத்தப்பட்டது. அதற்குக் காரணம், பங்கேற்பாளர்களில் ஒருவர் "விவரிக்கப்படாத' நோயினால் பாதிக்கப்பட்டதுதான். ஜே & ஜே பொறுத்தவரை இந்த நோய், சுயாதீன தரவு பாதுகாப்பு கண்காணிப்பு வாரியம் (independent Data Safety Monitoring Board) மற்றும் ஜே & ஜே-வின் உள் மருத்துவ மற்றும் பாதுகாப்பு மருத்துவர்களால் மதிப்பாய்வு செய்யப்படுகிறது. இந்த இடைநிறுத்தம் நிறுவனத்தால் தீர்மானிக்கப்பட்டதே தவிர கட்டுப்பாட்டாளர்களால் அல்ல. மேலும், இந்த நிறுவனம் தற்காலிகமாக ஆட்சேர்ப்பு மற்றும் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையை நிறுத்தியிருக்கிறது.

நிறுத்தப்பட்ட இரண்டு சோதனைகளுக்கு இடையில் பொதுவானது எது?

ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா சோதனைகளில், ஓர் இங்கிலாந்து பங்கேற்பாளர் தீவிர எதிர்வினையைச் சந்திக்க நேரிட்டது. நோயின் தன்மையை வெளியிட அஸ்ட்ராஜெனெகா மறுத்துவிட்டாலும், நோயாளிக்கு ‘டிரான்ஸ்வர்ஸ் மைலிடிஸ் (transverse myelitis)’ எனப்படும் ஒருவித நரம்பியல் பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இது முதுகெலும்பின் ஒரு பகுதி அல்லது இருபுறமும் வீக்கமடையும் நிலை.

பெரிய அளவிலான, மேம்பட்ட மனித சோதனைகளின் பிற தடுப்பூசிகளில் மாடர்னா மற்றும் ஃபைசரின் mRNA தடுப்பூசிகள், சீனாவின் சினோபார்மின் (Sinopharm) “செயலற்ற” தடுப்பூசிகள் ஆகியவை அடங்கும். இதுவரை, இந்த சோதனைகள் எதுவும் சாத்தியமான அல்லது மோசமான பாதக நிகழ்வுகளால் இடைநிறுத்தப்படவில்லை.

ஜான்சனின் தடுப்பூசி, ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகாவைப் போலவே, மாற்றியமைக்கப்பட்ட அடினோவைரஸைப் பயன்படுத்துகிறது. அதாவது, SARS-CoV-2 வைரஸின் “ஸ்பைக் புரதத்தை” மனித உயிரணுக்களுக்கு வரிசைப்படுத்தும் ஒரு பொதுவான 'cold' வைரஸ். மரபணு ரீதியாக வடிவமைக்கப்பட்ட சிம்பன்சி (chimpanzee) அடினோவைரஸை ஆக்ஸ்போர்டு தடுப்பூசி பயன்படுத்துகிறது. ஆனால், Ad26 எனப்படும் மனித அடினோவைரஸின் மாறுபாட்டை  ஜான்சன் பயன்படுத்துகின்றனர்.

johnson and johnson covid 19 vaccine problem and pause corona virus tamil news  Johnson and Johnson Corona Vaccine Issue

இவ்விரண்டும் ஒரே செயல்முறையை பின்பற்றுகிறதா?

சோதனைகள் நிறுத்தப்பட்ட சூழலில், ஜான்சன் மற்றும் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா வேட்பாளர்களுக்கு இடையிலான ஒற்றுமை, தடுப்பூசி தளத்துடன் முடிவடைவதுதான். ஆனால், இந்த பேட்டர்னைவிட இரண்டு தடுப்பூசிகளிலும் சாத்தியமான பாதுகாப்பு பிரச்சனைகள் ஏராளமாக உள்ளன என்று சில நிபுணர்கள் கருதுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரையில், பிற்பகுதியில் அல்லது சந்தைப்படுத்தலுக்கு பிந்தைய சோதனைகளில் இதுபோன்ற பிரச்சனைகள் எதுவுமில்லாமல் பல அடினோவைரஸ் தடுப்பூசிகள் உள்ளன. சீனாவின் கன்சினோ உயிரியல் மற்றும் ரஷ்யாவின் கமலேயா ஆராய்ச்சி நிறுவனத்தின் வேட்பாளர்கள் இதில் உள்ளனர். "எங்களிடம் உள்ள முதன்மை தகவல்களுடன் ஒப்பிடுகையில், ஜான்சன் வேட்பாளருடன் எழுப்பப்பட்ட பிரச்சினைக்கும் (அடினோவைரஸ்) மற்ற தளத்திற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்று இப்போது கூறுவது மிகவும் அவசரமான முடிவாக இருக்கும்" என்று தடுப்பூசி நிபுணர் டாக்டர் டேவிந்தர் கில் கூறினார்.

மேலும், “முதன்மையாக இந்த எதிர்வினை, தடுப்பூசி தொடர்பானதா என்ற கேள்வியும் உள்ளது. இந்த சம்பவம் இன்னும் கொஞ்சம் விசாரிக்கப்பட்டால், ஆக்ஸ்போர்டு தடுப்பூசியுடன் முன்பு நடந்ததைப் போல, இந்த எதிர்வினை தடுப்பூசியால் உருவானதாக இல்லாமல்கூட போகலாம். இருந்தாலும், இந்த தளத்தையும் கண்காணிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்" என்று கூறினார்.

அடினோவைரஸ் இயங்குதளம் “குறைந்தது” ஒரு தசாப்த காலமாக உள்ளது என்றும், இந்த வைரஸின் மாறுபாட்டைக் கொண்ட தடுப்பூசி முன்பு, எச்.ஐ.வி சோதனைகளில் பயன்படுத்தப்பட்டதாகவும் கில் கூறினார். "அந்த விஷயத்தில், கடுமையான நோயெதிர்ப்பு குறைபாடுள்ள நோயாளிகளுக்கு அது பரிசோதிக்கப்பட்டதனால், இது மிகவும் வித்தியாசமான வழுக்குதான்" என்று குறிப்பிடுகிறார் கில். மேலும், "கோவிட்-19 உடன் ஓர் பிரச்சனை உள்ளது. முதல் முறையாக, இந்த தடுப்பூசிகள் மிகப் பெரிய கூட்டங்கள் மீது சோதிக்கப்படுவதை நாங்கள் பார்க்கிறோம். இந்த ஆய்வுகளின் போது, உபயோகப்படுத்தப்படும் தடுப்பூசிகள் எவ்வளவு பாதுகாப்பானவை, எவ்வளவு பொறுத்துக்கொள்ளப்படுகின்றன என்பதைப் பற்றி மேலும் அறிந்து கொள்வோம் என்று நான் நினைக்கிறேன்” என்றும் கூறினார்.

ஜே & ஜே தடுப்பூசி பாதுகாப்பானது இல்லை என்று நிரூபிக்கிறதா?

இடைநிறுத்தம் என்பது தற்போது கவலைக்குரிய விஷயமல்ல. ஏனென்றால், பங்கேற்பாளருக்கு "விவரிக்கப்படாத" நோய்க்கான காரணம் என்ன என்பது குறித்த தெளிவு எதுவுமில்லை. இந்த கட்டத்தில் இது தடுப்பூசி தொடர்பான பிரச்சினை என்று கருதுவது சரியானதல்ல. மேலும் இடைநிறுத்தம், நெறிமுறைகளின் ஒரு பகுதியாக எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மட்டுமே. பாதகமான நிகழ்வுகள்...  எந்தவொரு மருத்துவ ஆய்விலும், குறிப்பாகப் பெரிய ஆய்வுகளில் எதிர்பார்க்கப்படும் பகுதிதான்" என்று ஜே & ஜே ஒரு அறிக்கையில் கூறுகிறது. "மருத்துவ சோதனைகளில் SAEs அசாதாரணமானது அல்ல. மேலும், அதிக எண்ணிக்கையிலான பங்கேற்பாளர்கள் சம்பந்தப்பட்ட சோதனைகளில் SAE-களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம். அதுமட்டுமின்றி, போலி மருந்துகள் கட்டுப்பாட்டில் பல சோதனைகள் இருப்பதால், பங்கேற்பாளர் ஆய்வு சிகிச்சையைப் பெற்றாரா அல்லது போலிமருந்து பெற்றாரா என்பது ஒருபோதும் உடனடியாகத் தெரியாது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

3-ம் கட்ட சோதனைகளில் மிகவும் மாறுபட்ட மக்கள் சேர்க்கப்படுகிறார்கள் என்று கில் சுட்டிக்காட்டினார். "இந்த நபர்கள் எல்லா வகையான மருத்துவ பின்னணியையும் மரபணு முன் கணிப்புகளையும் கொண்டிருப்பார்கள். எனவே, மருத்துவ பரிசோதனைகளின் போது சில நேரங்களில் இதுபோன்று தோன்றுவது அசாதாரணமானது அல்ல. பெரும்பாலும், இதுபோன்ற பின்னடைவு மருந்து அல்லது தடுப்பூசியுடன் தொடர்புடையது அல்ல. ஆனால் இங்கே, விசாரிக்கப்பட வேண்டும்" என்று கில் எச்சரிக்கிறார்.

இந்தியர்கள் கவலைப்பட வேண்டுமா?

இந்தியாவில் இதுவரை ஜான்சன் வேட்பாளர் சோதனை செய்யப்படவில்லை. கடந்த ஆகஸ்ட் மாதம் ஹைதராபாத்தைத் தலைமையிடமாகக் கொண்ட Biological E, தடுப்பூசி தயாரிக்க ஜான்சனுடன் ஓர் ஒப்பந்தத்தை மேற்கொண்டது. இது இன்னும் தொடங்கப்படாத நிலையில், இந்த நிறுவனம் ஆண்டுக்கு 400-500 மில்லியன் டோஸ்கள் (doses) தயாரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதுபற்றி, Biological E எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை என்றாலும், ஜே & ஜே விசாரணைகளின் முடிவுகள் இந்த ஒப்பந்தத்தின் எதிர்காலத்தைப் பாதிக்கலாம் மற்றும் இந்த தடுப்பூசி இந்தியப் பங்கேற்பாளர்களுக்கும் சோதிக்கப்படுகிறதா என்பதையும் தீர்மானிக்கலாம்.

இடைநிறுத்தத்திற்குப் பிறகு ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா சோதனைகளுக்கு என்ன நடந்தது?

மதிப்புரைகளைத் தொடர்ந்து, இங்கிலாந்து அரசாங்கம் ஒரு வாரத்திற்குள் சோதனைகளை மீண்டும் தொடங்க அனுமதித்தது. சிறிது காலத்திற்குப் பிறகு, உலகளாவிய இடைநிறுத்தத்தின் போது ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா வேட்பாளரின் சொந்த சோதனையை இடைநிறுத்துமாறு இந்திய மருந்து கட்டுப்பாட்டாளரால் இயக்கப்பட்ட சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, அதன் சோதனைகளை மீண்டும் தொடங்க அனுமதி வழங்கப்பட்டது. இது தற்போது தடுப்பூசியின் நடுப்பகுதி முதல் பிற்பகுதி வரையிலான மனித சோதனைகளை நடத்தி வருகிறது. இந்த தடுப்பூசிக்கான சோதனைகள் தென்னாப்பிரிக்கா, பிரேசில் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிலும் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. இருப்பினும், பாதகமான விளைவைக் கொண்ட சாத்தியமான பிரச்சனைகளை அமெரிக்கா இன்னும் கவனித்து வருகிறது. அதனால், விரிவான விசாரணைகளுக்குப் பிறகும், மீண்டும் அங்குச் சோதனைகள் தொடங்கப்படவில்லை.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

Coronavirus Covid 19
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment