Advertisment

இலங்கையின் அவசரநிலை - வரலாறும், கடந்து வந்த பாதையும்

நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் சட்டங்களை மாற்றங்களுடனோ மாற்றங்கள் இன்றியோ நடைமுறைப்படுத்த, ஏற்கனவே இருக்கும் அனைத்து சட்டங்களையும் மாற்றி புதிய சட்டங்கள் உருவாக்க இந்த அவசர பாதுகாப்பு சட்டம் அதிபருக்கு அதிகாரத்தை வழங்குகிறது.

author-image
WebDesk
New Update
Emergency in Sri Lanka its history and contours

 Nirupama Subramanian

Advertisment

இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்‌ஷே ஏப்ரல் 1ம் தேதி அன்று அவசரநிலையை இலங்கை முழுவதும் அறிவித்தார். பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள கடுமையான மின்சாரத் தட்டுப்பாடு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறையை கண்டித்து ஆயிரக் கணக்கான பொதுமக்கள் சாலைகளில் இறங்கி போராட்டம் செய்து கொண்டிருக்கும் இந்த தருணத்தில் இத்தகைய அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். பொருளாதார நெருக்கடி தீவிரமடைய துவங்கிய நிலையில், கடந்த ஆண்டு அதிகரித்து வந்த அத்தியாவசியப் பொருட்கள் பதுக்குதலை தடுக்க ஆகஸ்ட் 30 அன்று எமெர்ஜென்சியை அறிவித்தார் ராஜபக்‌ஷே. ஆனால் சில வாரங்களில் திரும்பப் பெறப்பட்டது.

அவசரநிலையும் இலங்கையும்

ராஜபக்‌ஷேவுக்கு முன்பு மைத்ரிபால சிறிசேன, 2018ம் ஆண்டு, இஸ்லாமியர்களுக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற வன்முறை வெறியாட்டங்களை தணிக்க அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். அதற்கு முன்பு, தமிழர்களுக்கு எதிராக 1983ம் ஆண்டு ஏற்பட்ட கலவரம் துவங்கி 2011ம் ஆண்டு வரை, உள்நாட்டு போர் காரணமாக கிட்டத்தட்ட 27 ஆண்டுகள் எமெர்ஜென்சியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. 1989 மற்றும் 2001ம் ஆண்டு சில காலம் இயல்பு நிலையை சந்தித்தது இலங்கை.

Emergency in Sri Lanka its history and contours

இலங்கையின் மொழிக் கொள்கையில் சிங்களம் மட்டுமே இடம் பெற்றதால், முதன்முறையாக 1958ம் ஆண்டு அவசரநிலை பிரகடனபடுத்தப்பட்டது. பிறகு இடதுசாரி அமைப்பான ஜனதா விமுக்தி பெருமுனா கிளர்ச்சியில் ஈடுபட துவங்கிய பிறகு 1971ம் ஆண்டு முதல் அவ்வபோது அவசரநிலை அறிவிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் எவ்வாறு “எமெர்ஜென்சி” அறிவிக்கப்படுகிறது?

இலங்கை அரசியல் சாசனப் பிரிவு 155ன் கீழ், நாட்டில் அவசர நிலையை பிரகடனப்படுத்தும் அதிகாரம் அதிபருக்கு வழங்கப்பட்டுள்ளது. பொது பாதுகாப்பு அவசரச் சட்டம் 1947-ல் நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்துவதற்கான சட்ட ரீதியான கட்டமைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த அவசர சட்டத்தின் கீழ், ”பொது அவசரநிலையை கருத்தில் கொண்டு, பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கை நிலைப்படுத்துதல் அல்லது மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை தொடர்வது போன்ற மக்களின் நலனுக்காக அவசரநிலையை பிரகடனப்படுத்துவது சரி என்று அதிபர் கருதுகிறார்” என்று கூறி எமெர்ஜென்சியை அறிவிக்க இயலும்.

publive-image

யாரையும் தடுப்புக் காவலில் வைக்க, உடமைகளை கைப்பற்ற, எந்த வசிப்பிடங்களுக்கும் சென்று விசாரணை நடத்த, சட்டத்தில் மாற்றங்களை கொண்டு வர, அல்லது ஒரு சட்டத்தை ரத்து செய்ய, நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் சட்டங்களை மாற்றங்களுடனோ மாற்றங்கள் இன்றியோ நடைமுறைப்படுத்த, ஏற்கனவே இருக்கும் அனைத்து சட்டங்களையும் மாற்றி புதிய சட்டங்கள் உருவாக்க இந்த அவசர பாதுகாப்பு சட்டம் அதிபருக்கு அதிகாரத்தை வழங்குகிறது.

EMPPR என்ற சட்டம் தேசிய பாதுகாப்பு படை பிரிவினர் மற்றும் சட்ட அமலாக்கத்துறையினருக்கு யாருடைய இடத்தில் வேண்டுமானாலும் தேடுதல் பணியை செய்ய, யாரை வேண்டுமானாலும் கைது செய்ய மற்றும் தடுப்புக் காவலில் வைப்பதற்கான அதிகாரத்தை வழங்குகிறது. 2005ம் ஆண்டு வெளியுறவுத்துறை அமைச்சர் லக்‌ஷ்மன் கதிர்காமர் கொல்லப்பட்ட பிறகு பயங்கரவாதத்தின் கீழ் புதிய குற்றங்களை வரையறுப்பதற்காக இதுபோன்ற பல விதிமுறைகள் உருவாக்கப்பட்டன.

பயங்கரவாத தடுப்புச் சட்டம் 1979-ம் நடைமுறையில் உள்ளது. உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த நிலையிலும் இந்த சட்டம் இன்னும் செயல்பாட்டில் உள்ளது. சர்வதேச அமைப்புகளின் விமர்சனங்களுக்குப் பிறகு மிக சமீபத்தில் இந்த சட்டத்தில் மாற்றங்களை இலங்கை அரசு கொண்டு வந்தாலும் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு முடிவு கட்டும் வகையில் அமையவில்லை.

நாடாளுமன்றத்தின் பங்கு

அவசர நிலை ஒரு மாதத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். ஒரு மாதத்திற்கு மேல் நீட்டிக்கப்படும் எனில் ஒவ்வொரு 14 நாட்களுக்கும் ஒருமுறை நாடாளுமன்றத்தில் அதற்கான ஒப்புதலைப் பெற வேண்டும். நாடாளுமன்றத்தில் அவசரநிலை கொண்டுவரப்படாவிட்டால் அது காலாவதியாகிவிடும்.

ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் ராதிகா குமாரசுவாமி மற்றும் சார்மைன் டி லாஸ் ரெய்ஸ் ஆகியோர், 1978ம் ஆண்டு அரசியல் சாசனம், அவசரநிலையின் ஒப்புதலுக்கான நாடாளுமன்ற விவாதத்தை கட்டுப்படுத்துகிறது என்றும் அது உண்மையான அவசரநிலை விதிமுறைகளை விவாதிக்க வழிவகை செய்யவில்லை என்றும் கூறுகின்றனர். ஆனால் அவசர பாதுகாப்பு சட்டத்தின் கீழ், தீர்மானத்தின் மூலம் விதிமுறைகளை ரத்து செய்யவோ, மாற்றவோ அல்லது திருத்தவோ நாடாளுமன்றத்திற்கு அதிகாரத்தை வழங்குகிறது.

publive-image

எந்த அவசரகாலச் சட்டத்தின் மீதும் நாடாளுமன்றம் இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தியதாக எந்த அறிக்கையும் கிடைக்கவில்லை என்று இவர்கள், Rule by Emergency: Sri Lanka’s Postcolonial Constitutional Experience, International Journal of Constitutional Law, 2004 என்ற கட்டுரையில் குறிப்பிட்டுள்ளனர்.

கட்டுப்பாடுகளின் நோக்கம் என்ன?

மாற்றுக் கொள்கைகளுக்கான கொழும்பு சிந்தனைக் குழு அமைப்பு வெளியிட்டுள்ள கட்டுரையில், சட்ட வல்லுநர் அசங்க வெலிகலா, சிந்தனை மற்றும் சரி - தவறு என்ன என்பதை முடிவு செய்வதற்கான சுதந்திரம், சித்திரவதை தடை மற்றும் தகுதியான நியாயமான நீதிமன்ற விசாரணையில் தன் தரப்பு நியாயங்கள் கேட்கப்படுதல் போன்றவை எந்தத் தடைக்கும் உட்பட்டது அல்ல. இவை அனைத்தும் முழுமையான சுதந்திரங்களாக கருதப்படும் காரணங்களால் எமெர்ஜென்சி விதிமுறைகள் மூலம் ஒரு போதும் இவை கட்டுப்படுத்தப்படாது என்று குறிப்பிட்டுள்ளார்.

குற்றமற்றவர் என்ற அனுமானம், ஆதாரத்தின் சுமை மற்றும் பிற்போக்கான தண்டனைத் தடைகள்; சட்டத்தின் முன் அனைவரும் சமம், பாகுபாடற்ற சட்டம், கைது செய்வதற்கான சாதாரண நடைமுறை மற்றும் தடுப்புக்காவலில் நீதிமன்ற அனுமதி, கருத்து சுதந்திரம், கூட்டம், சங்கம், இயக்கம், தொழில், மதம், கலாச்சாரம் மற்றும் மொழிக்கான அடிப்படை உரிமைகள் போன்றவை தேசிய பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு நலன்களை கருத்தில் கொண்டு எமெர்ஜென்சி காலங்களில் மறுக்கப்படும் என்று அவர் கூறுகிறார்.

தரவு - (www.cpalanka.org/understanding-a-state-of-emergency-march-2018/)

இந்த உரிமைகள் எந்த அளவிற்கு மறுக்கப்படலாம் என்பது பற்றி அரசியல் சாசனம் எதுவும் கூறாததால், இது பொதுவாக பொறுப்புடன் செயல்படும் நிர்வாகத்தின் நல்லெண்ணம் மற்றும் அல்லது சட்டத்தின் ஆட்சி, அடிப்படை உரிமைகளை நடைமுறைப்படுத்து நீதிமன்றங்களின் விருப்பத்தையே சார்ந்துள்ளது என்று வெலிகலா குறிப்பிடுகிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sri Lanka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment