Advertisment

2002 குஜராத் கலவர கூட்டுப் பலாத்கார வழக்கு; யார் இந்த பில்கிஸ் பானோ?

2002 குஜராத் கலவரம்; கும்பல் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 21 வயது 5 மாத கர்ப்பிணி; யார் இந்த பில்கிஸ் பானோ?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
2002 குஜராத் கலவர கூட்டுப் பலாத்கார வழக்கு; யார் இந்த பில்கிஸ் பானோ?

Explained: Who is Bilkis Bano, who was gangraped during the 2002 Gujarat riots?: 2002 ஆம் ஆண்டு பில்கிஸ் பானோ கூட்டுப் பலாத்கார வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 பேரின் தண்டனையை நீக்குவதற்கான விண்ணப்பத்தை குஜராத் அரசால் அமைக்கப்பட்ட குழு ஒப்புதல் அளித்த பின்னர், திங்கள்கிழமை (ஆகஸ்ட் 15) கோத்ரா துணைச் சிறையில் அவர்கள் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

Advertisment

கூடுதல் தலைமைச் செயலாளர் (உள்துறை) ராஜ் குமார் கூறுகையில், குற்றவாளிகள் 14 ஆண்டுகள் சிறைவாசம் முடிந்துவிட்டதால், "வயது, குற்றத்தின் தன்மை, சிறையில் நடத்தை மற்றும் பல காரணங்கள்" போன்ற காரணிகளால் நிவாரண விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டது, என்று கூறினார்.

இதையும் படியுங்கள்: ரன்வீர் சிங்க்கு சம்மன் வழங்க மும்பை போலீஸ் முடிவு; அவர் மீறிய ஆபாசச் சட்டங்கள் என்னென்ன?

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து நடந்த வகுப்புவாத வன்முறையின் போது பில்கிஸ் பானோ கொடூரமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அவருக்கு அப்போது 21 வயது, ஐந்து மாத கர்ப்பிணி. அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் கலவரக்காரர்களால் கொல்லப்பட்டனர்.

பில்கிஸ் பானோ யார், 2002 இல் அவருக்கு என்ன நடந்தது?

பிப்ரவரி 28, 2002 அன்று, கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் எரிக்கப்பட்டு அயோத்தியிலிருந்து திரும்பிய யாத்ரீகர்கள் மற்றும் கரசேவகர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தின் விளைவாக குஜராத்தில் வன்முறை வெடித்ததை அடுத்து, டஹோத் மாவட்டத்தில் உள்ள ராதிக்பூர் கிராமத்திலிருந்து பில்கிஸ் பானோ வெளியேறினார்.

பில்கிஸ் பானோவுடன் அப்போது மூன்றரை வயதுடைய அவரது மகள் சலேஹா மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 15 பேர் இருந்தனர். சில நாட்களுக்கு முன்பு பக்ரீத் பண்டிகையின் போது தங்கள் கிராமத்தில் நடந்த தீ மற்றும் சூறையாடலுக்கு பயந்து அவர்கள் கிராமத்திலிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

மார்ச் 3, 2002 அன்று, பில்கிஸ் பானோ குடும்பம் சப்பர்வாட் கிராமத்தை அடைந்தது. குற்றப்பத்திரிகையின்படி, அரிவாள்கள், வாள்கள் மற்றும் தடிகள் உள்ளிட்ட ஆயுதம் ஏந்திய சுமார் 20-30 பேர் அவர்களைத் தாக்கினர். தாக்குதல் நடத்தியவர்களில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேரும் அடங்குவர்.

பில்கிஸ் பானோ, அவரது தாயார் மற்றும் மூன்று பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் தாக்கப்பட்டனர். ராதிக்பூர் கிராமத்தைச் சேர்ந்த 17 பேர் கொண்ட முஸ்லிம் குழுவில், எட்டு பேர் இறந்து கிடந்தனர், ஆறு பேர் காணவில்லை. இந்த தாக்குதலில் பில்கிஸ் பானோ, ஒரு ஆண் மற்றும் மூன்று வயது குழந்தை மட்டுமே உயிர் தப்பினர்.

தாக்குதலுக்குப் பிறகு பில்கிஸ் பானோ குறைந்தது மூன்று மணிநேரம் சுயநினைவின்றி இருந்தார். அவருக்கு சுயநினைவு திரும்பிய பிறகு, அவர் ஒரு ஆதிவாசி பெண்ணிடம் துணிகளை கடன் வாங்கி உடுத்தினார். பின்னர் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த ஒருவரைச் சந்தித்தார். அவர் பில்கிஸ் பானோவை லிம்கேடா காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு தலைமைக் காவலர் சோமாபாய் கோரியிடம் பில்கிஸ் பானோ ஒரு புகாரைப் பதிவு செய்தார். சி.பி.ஐ.,யின் கூற்றுப்படி, "உண்மையான உண்மைகளை மறைத்து, பில்கிஸ் பானோ புகாரின் திரிபுபடுத்தப்பட்ட மற்றும் துண்டிக்கப்பட்ட பதிப்பை சோமாபாய் கோரி எழுதினார்".

பில்கிஸ் பானோ கோத்ரா நிவாரண முகாமை அடைந்த பின்னரே மருத்துவ பரிசோதனைக்காக பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது வழக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) மற்றும் உச்ச நீதிமன்றம் எடுத்து, சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.

பில்கிஸ் பானோ வழக்கு: சி.பி.ஐ தனது விசாரணையில் கண்டுபிடித்தது என்ன?

குற்றம் சாட்டப்பட்டவர்களை பாதுகாப்பதற்காக பிரேதப் பரிசோதனை தரக்குறைவாக நடத்தப்பட்டதாக சி.பி.ஐ முடிவு செய்தது. தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் உடல்களை தோண்டி எடுத்த சி.பி.ஐ புலனாய்வாளர்கள், ஏழு உடல்களில் மண்டை ஓடுகள் எதுவும் இல்லை என்று தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனைக்குப் பிறகு சடலங்களின் தலைகள் துண்டிக்கப்பட்டதால், உடல்களை அடையாளம் காண முடியவில்லை என்று சி.பி.ஐ தெரிவித்துள்ளது.

வழக்கின் விசாரணை எப்படி நடந்தது?

பில்கிஸ் பானோவுக்கு கொலை மிரட்டல் வந்ததை அடுத்து வழக்கு விசாரணை குஜராத்தில் இருந்து மகாராஷ்டிராவிற்கு மாற்றப்பட்டது. மும்பை நீதிமன்றத்தில், 6 போலீஸ் அதிகாரிகள் மற்றும் ஒரு அரசு மருத்துவர் உட்பட 19 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

ஜனவரி 2008 இல், சிறப்பு நீதிமன்றம், கர்ப்பிணிப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய சதி செய்தது, கொலை, சட்டவிரோத கூடுதல் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிற பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கு தண்டனை வழங்கியது. குற்றம் சாட்டப்பட்டவர்களை காப்பாற்ற "தவறான பதிவுகளை செய்ததற்காக" தலைமை காவலர் தண்டிக்கப்பட்டார்.

போதிய ஆதாரம் இல்லை எனக் கூறி ஏழு பேரை நீதிமன்றம் விடுவித்தது. விசாரணை காலக்கட்டத்தின் போது ஒருவர் உயிரிழந்தார்.

ஜஸ்வந்த்பாய் நய், கோவிந்த்பாய் நய் மற்றும் நரேஷ் குமார் மோர்தியா (இறந்தவர்கள்) பில்கிஸ் பானோவை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், ஷைலேஷ் பட் அவரது மகள் சலேஹாவை தரையில் "அடித்து" கொன்றதாகவும் நீதிமன்றம் கூறியது.

ராதேஷ்யாம் ஷா, பிபின் சந்திர ஜோஷி, கேசர்பாய் வோஹானியா, பிரதீப் வொஹானியா, பகபாய் வோஹானியா, ராஜூபாய் சோனி, நித்தேஷ் பட், ரமேஷ் சந்தனா மற்றும் தலைமைக் காவலர் சோமாபாய் கோரி ஆகியோர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் குற்றத்திற்கு (சோமாபாய் கோரி தவிர) பார்வையாளர்களாக மட்டும் இருந்த நிலையிலும், கற்பழிப்பு மற்றும் கொலைக்கு தண்டனை பெற்றனர், ஏனெனில் "சட்டவிரோதமான கூட்டம்" குற்றத்தின் பொறுப்புக்கு காரணமாகிறது, என்று நீதிமன்றம் கருதியது.

குற்றவாளிகள் 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதன் பிறகு என்ன நடந்தது?

மே 2017 இல், பம்பாய் உயர் நீதிமன்றம் கும்பல் பாலியல் வன்கொடுமை வழக்கில் 11 பேரின் தண்டனை மற்றும் ஆயுள் தண்டனையை உறுதிசெய்தது, மேலும் போலீசார் மற்றும் மருத்துவர்கள் உட்பட ஏழு பேரின் விடுதலையை ரத்து செய்தது.

ஏப்ரல் 2019 இல், உச்ச நீதிமன்றம் பில்கிஸ் பானோவுக்கு இரண்டு வாரங்களுக்குள் இழப்பீடாக ரூ.50 லட்சம் வழங்க குஜராத் அரசுக்கு உத்தரவிட்டது. 5 லட்சம் இழப்பீட்டுத் தொகையை ஏற்க மறுத்த அவர், மாநில அரசிடம் இருந்து முன்மாதிரியான இழப்பீடு கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Gujarat
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment