Advertisment

இந்தியாவில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி எப்போது கிடைக்கும்?

பூஸ்டர் டோஸ் பற்றிய முடிவு ஆதார அடிப்படையிலானதாக இருக்க வேண்டும் என்று WHO கூறியுள்ளது. வழக்கமான தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ் மூலம் வழங்கப்படும் பாதுகாப்புக்கான ஆதாரம் என்ன? இந்தியா என்ன கருதுகிறது; எந்த தடுப்பூசிகள் பயன்படுத்தப்படலாம்?

author-image
WebDesk
New Update
இந்தியாவில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி எப்போது கிடைக்கும்?

Kaunain Sheriff M , Anuradha Mascarenhas 

Advertisment

Explained: When to roll out booster jabs: புதன்கிழமையன்று ஒரு இடைக்கால அறிக்கையில், உலக சுகாதார அமைப்பு (WHO) கோவிட் -19 தடுப்பூசிகளின் பூஸ்டர் டோஸ்களை அறிமுகப்படுத்துவது "உறுதியான சான்றுகளால் இயக்கப்பட வேண்டும்" மற்றும் தீவிர நோய்க்கான அதிக ஆபத்தில் உள்ள மக்கள் குழுக்கள் மற்றும் முன்கள சுகாதாரப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று கூறியது. இரண்டாவது டோஸுக்குப் பிறகு ஆறு மாதங்களுக்குள் கடுமையான நோய்க்கு எதிரான தடுப்பூசி பாதுகாப்பு "குறைவாக அல்லது சற்று குறைவாக" உள்ளதாக இதுவரை சான்றுகள் கிடைத்துள்ளதாக WHO கூறியது.

இந்த சான்றுகள் என்ன?

டிசம்பர் 7 அன்று, WHO இன் நோய்த்தடுப்பு நிபுணர்களின் வியூக ஆலோசனைக் குழு, ஜூன் 17 முதல் டிசம்பர் 2 வரை இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் தடுப்பூசி செயல்திறன் குறித்த 18 ஆய்வுகளை முறையாக மதிப்பாய்வு செய்தது. மதிப்பிடப்பட்ட தடுப்பூசிகள் Pfizer, Moderna, AstraZeneca (இந்தியாவில் கோவிஷீல்டாகப் பயன்படுத்தப்படுகிறது), மற்றும் ஜான்சன் & ஜான்சன் ஆகும்.

இரண்டு டோஸ் தடுப்பூசிக்குப் பிறகு 1-6 மாதங்களில் தடுப்பூசி செயல்திறனில் சராசரி மாற்றத்தை மதிப்பாய்வு மதிப்பிட்டுள்ளது. அறிகுறி உடைய நோய்க்கு, வயதானவர்களுக்கு (50 வயதுக்கு மேல்) தடுப்பூசி செயல்திறன் 32% மற்றும் அனைத்து வயதினருக்கும் 25.4% என்ற அளவில் குறைந்துள்ளது. கடுமையான நோய்களுக்கு, தடுப்பூசி செயல்திறன் வயதானவர்களுக்கு 9.7% மற்றும் அனைத்து வயதினருக்கும் 8% குறைந்துள்ளது. மதிப்பாய்வின் சுருக்கமான அறிக்கை கீழ்கண்டவாறு...

⦿ தொற்று மற்றும் எந்த அறிகுறி உடைய நோய்க்கும் 6 மாதங்களுக்குப் பிறகு தடுப்பூசி செயல்திறனில் மிதமான குறைவு

⦿ கடுமையான நோய்க்கு எதிராக காலப்போக்கில் தடுப்பூசியின் செயல்திறன் குறைவு

⦿ 6 மாதங்களுக்குப் பிறகு தடுப்பூசி செயல்திறன் தொடர் கண்காணிப்பு தேவை, மேலும் அதிக தடுப்பூசிகளுக்கும் கண்காணிப்பு தேவை

⦿ தடுப்பூசி செயல்திறன் குறைந்து வரும் நிலையில், ஓமிக்ரானின் தாக்கம் பற்றி தெரியவில்லை

இந்த தகவல்கள் நல்ல செய்தியா அல்லது கெட்டதா?

இந்தியாவின் பொது சுகாதார அறக்கட்டளையின் தலைவர், முன்னணி பொது சுகாதார நிபுணர் டாக்டர் ஸ்ரீநாத் ரெட்டி, இரண்டு குறிப்பிட்ட தரவு புள்ளிகளைப் பார்க்க வேண்டும்: அவை, வயது சார்ந்த தரவு மற்றும் கடுமையான நோயை ஏற்படுத்தும் முக்கிய தொற்றுகள் என்று கூறினார்.

மேலும், “50 வயதுக்கும் மேற்பட்ட, 60 வயதுக்கும் மேற்பட்ட மற்றும் 70வயதுக்கும் மேல் உள்ளவர்களின் கடுமையான நோய்க்கான தரவைப் பார்ப்பதில் நான் ஆர்வமாக உள்ளேன். 60 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு இது 18% மற்றும் 70வயதுக்கும் மேல் உள்ளவர்களுக்கு இது 25% என்று சொல்லலாம். எனவே நாம் சிக்கலில் உள்ளோம்,'' என்றும் டாக்டர் ஸ்ரீநாத் ரெட்டி கூறினார்.

மேலும், "எத்தனை முக்கிய நோய்த்தொற்றுகள் கடுமையான தொற்றுநோயாக வகைப்படுத்தப்பட்டுள்ளன என்பதைப் பார்க்க வேண்டும். ஏனெனில் இது லேசானது முதல் மிதமானது என்றால், அது கவலைக்குரியது அல்ல. "இந்தியாவிலும் இளம் வயதிலேயே இணை நோய் உடையவர்கள் இருப்பதால், நான் 45-55 வயதுக்கு உட்பட்டவர்களின் தரவு மற்றும் தீவிரத்தின் அளவைப் பார்க்க விரும்புகிறேன்." என்றும் டாக்டர் ஸ்ரீநாத் ரெட்டி கூறினார்.

பூஸ்டர் டோஸ்களை இந்தியா எவ்வளவு விரைவில் தொடங்க வேண்டும்?

WHO அறிக்கையைப் பற்றி குறிப்பிடுகையில், தேசிய கோவிட்-19 பணிக்குழுவின் தலைவர் வி.கே.பால் கூறினார்: “... இந்தியாவில் பூஸ்டர் டோஸ் அளிப்பது, நமது சூழ்நிலைக்கு பொருந்தக்கூடிய அறிவியல் மற்றும் பொருந்தக்கூடிய நமது தடுப்பூசிகள் பற்றிய அறிவியலால் இயக்கப்பட வேண்டும். வெவ்வேறு அமைப்புகளில் உள்ள பிற பிளாட்ஃபார்ம் தடுப்பூசிகள் மற்றும் பிற நோய்த்தொற்றுகளின் வேறுபட்ட சுயவிவரம் மற்றும் சில வழிகளில் வயது விவரங்கள் ஆகியவற்றைப் பற்றி பார்க்க வேண்டும்," என்று அவர் கூறினார்.

"வைரஸை தடுப்பதற்கான தீவிர முயற்சிகள் உள்ளன, நாங்கள் எங்கள் தடுப்பூசிகளை ஓமிக்ரானுக்கு எதிராக சோதிப்போம். இளம் பருவத்தினருக்கு தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ் பற்றிய முடிவு அறிவியல் கோட்பாடுகள் மற்றும் இந்திய மக்களின் மேலோட்டமான ஆர்வத்தின் அடிப்படையில் எடுக்கப்படும் என்பதில் உறுதியாக இருக்கிறோம், ”என்று வி.கே.பால் கூறினார்.

மகாராஷ்டிரா, கேரளா மற்றும் டெல்லி போன்ற மாநிலங்கள் பூஸ்டர் டோஸ்களைத் தொடங்குமாறு பலமுறை மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டன. இந்திய மருத்துவ சங்கம் (IMA) மற்றும் பல சுகாதார நிபுணர்களும் வலியுறுத்தி உள்ளனர்.

“தாமதத்தால் நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம். இங்கிலாந்து மற்றும் வேறு சில நாடுகள் மூன்றாவது டோஸ் தடுப்பூசியை எடுத்து வருகின்றன. பூஸ்டர் டோஸ்களை அனுமதிக்க ஆதாரம் தேவை என்று நாங்கள் கூறுகிறோம். எச்சரிக்கை தகவல்கள் உள்ளன என்பதை நாங்கள் உறுதியாக அறிவோம், அரசாங்கம் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்” என்று ஐஎம்ஏ தலைவர் டாக்டர் ஜே.ஏ.ஜெயலால் கூறினார்.

கோவிட் பணிக்குழுவின் உறுப்பினர் டாக்டர் சுபாஷ் சாலுங்கே, முதன்மை டோஸ் கொடுக்கப்படும்போதும் பூஸ்டர் டோஸ்கள் தொடங்கலாம் என்றார். “இது சிக்கலான சூழ்நிலை அல்ல. இது ஒரே நேரத்தில் செய்யப்பட வேண்டும். இரண்டாவது டோஸ் தேவைப்படுபவர்களுக்கு நிச்சயமாக முன்னுரிமை அளிக்கப்படுகிறது, ஆனால் மூன்றாவது டோஸ் தேவைப்படுகிறது, குறிப்பாக நோயெதிர்ப்பு குறைபாடுள்ள நபர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு.

நிபுணர்கள் என்ன அம்சங்களைக் கருத்தில் கொள்கிறார்கள்?

நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (NTAGI) உலகம் முழுவதிலும், இந்தியாவிலிருந்தும் மூன்று அம்சங்களில் தரவை ஆய்வு செய்கிறது: டி-செல் பதில், ஒரு குறிப்பிட்ட தடுப்பூசி மற்றும் மற்றொரு தடுப்பூசி மூலம் ஆன்டிபாடி பதில், மற்றும் நோய்த்தொற்றுக்குப் பிறகு எவ்வளவு காலம் நோய் எதிர்ப்பு சக்தி நீடிக்கிறது, என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) தலைவர் டாக்டர் பல்ராம் பார்கவா கூறினார்.

ICMR இன் நிகழ்நேர டிராக்கர், பொது மக்களில் 2% க்கும் குறைவாகவும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடையே 7% க்கும் குறைவான தொற்றுநோய்களைக் காட்டுவதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

நினைவக செல்களிலிருந்து செல்லுலார் நோய் எதிர்ப்பு சக்தியை மையமாகக் கொண்ட கூடுதல் டோஸ் பற்றிய விரிவான தகவல்கள் இருப்பதாக ஆதாரங்கள் கூறுகின்றன, இது கடுமையான நோய் மற்றும் மருத்துவமனையில் இருந்து பாதுகாப்பை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

மேலும், “சில தேதிகள் மற்றும் காலக்கெடு மிகவும் முக்கியம். இந்தியாவின் வயது வந்தோரில் பெரும்பாலோர், இரண்டாவது அலைக்கு முன்னதாகவே முதல் டோஸைப் பெற்று உடனே, இரண்டாவது டோஸையும் பெற்றனர், பெரும்பாலான வயது வந்தோர் இரண்டாவது அலைக்குப் பிறகு நிச்சயமாக இரண்டாவது டோஸைப் பெற்றனர்... ஏப்ரல் – மே மாதங்களில் டெல்டாவின் தாக்கத்தால் கணிசமான மக்கள் குழு ஏற்கனவே ஆன்டிபாடியின் அடிப்படையில் 'கூடுதல் டோஸ்' பெற்றுள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை எவ்வாறு பாதிக்கிறது என்பது அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது” என்று அந்த வட்டாரம் தெரிவித்தது.

இந்தியாவில் பூஸ்டர்களாக எந்த தடுப்பூசிகளை பயன்படுத்தப்படலாம்?

NTAGI அறிவியல் ஆதாரங்களை ஆய்வு செய்யும் போது, ​​ஒரு முதற்கட்ட ஒருமித்த கருத்து வந்துள்ளது: ஒருவர் செயலிழந்த முழு வைரஸ் (எ.கா. கோவாக்சின்) அல்லது அடினோவைரல் வெக்டர் தடுப்பூசி (எ.கா. கோவிஷீல்ட் அல்லது அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி) எடுத்திருந்தால், மூன்றாவது டோஸ் அதே தளத்தில் இருக்கக்கூடாது. .

அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் ஓமிக்ரான் மாறுபாட்டிற்கு எதிராக பயனுள்ளதாக இருக்கும் என்று இந்தியாவிற்கு வெளியே இருந்து வரும் ஆரம்பகட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த தரவுகளும் ஆராயப்படும்.

பரிந்துரை செய்யப்பட்டால், தகுதியான பெறுநர்கள் வரவிருக்கும் மாதங்களில் பல விருப்பங்களைக் கொண்டிருக்கலாம், அவை:

⦿ ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட Biological-E's Corbevax, வைரஸின் ஆன்டிஜெனிக் பாகங்களை மட்டுமே கொண்ட ஒரு புரோட்டீன் சப்யூனிட் தடுப்பூசி

⦿ சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் (SII) Covovax, ஒரு மறுசீரமைப்பு நானோ துகள் புரத அடிப்படையிலான தடுப்பூசி, இது அமெரிக்காவை தளமாகக் கொண்ட Novavax தடுப்பூசியாகும். SII ஏற்கனவே பிலிப்பைன்ஸில் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன.

⦿ பாரத் பயோடெக் இன் இன்ட்ராநேசல் தடுப்பூசி, ஜனவரி இரண்டாம் பாதியில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

⦿ இந்தியாவின் முதல் எம்-ஆர்என்ஏ கோவிட்-19 தடுப்பூசியை புனேவை தளமாகக் கொண்ட ஜென்னோவா பயோஃபார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட் உருவாக்கியுள்ளது, இது 6 கோடி டோஸ்களை உற்பத்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Corona Virus Vaccine Explained
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment