Advertisment

இந்தியாவின் ஏவுகணைத் திறன்; ஓர் பார்வை

ஹைப்பர்சோனிக் ஏவுகணை தொழில்நுட்பத்தை மேம்படுத்த டிஆர்டிஓ விஞ்ஞானிகளை வலியுறுத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்; இந்தியா இதுவரை என்னென்ன ஏவுகணைகளை உருவாக்கியுள்ளது, அதன் அண்டை நாடுகளுடன் எந்த நிலையில் உள்ளது?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இந்தியாவின் ஏவுகணைத் திறன்; ஓர் பார்வை

Krishn Kaushik

Advertisment

Explained: India’s missile capability: கடந்த செவ்வாய்கிழமை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) ஏற்பாடு செய்த கருத்தரங்கில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஹைப்பர்சோனிக் ஏவுகணை தொழில்நுட்பத்தை உருவாக்க விஞ்ஞானிகளை ஊக்குவித்தார். சீனா தனது ஹைப்பர்சோனிக் ஏவுகணைத் திறனை ஹைப்பர்சோனிக் கிளைடு வாகனத்தின் (HGV) வெற்றிகரமான சோதனைகள் மூலம் நிரூபித்துள்ளது, இந்த ஏவுகணை உலகத்தை வட்டமிட்டது, ஆனால் அதன் இலக்கை சில கிலோமீட்டர்களில் மட்டுமே தவறவிட்டது என அறிக்கை கூறுகிறது.

இந்தியாவில் ஏவுகணை தொழில்நுட்பத்தின் வரலாறு என்ன?

சுதந்திரத்திற்கு முன்பு, இந்தியாவில் பல ராஜ்யங்கள் தங்கள் போர் தொழில்நுட்பத்தின் ஒரு பகுதியாக ராக்கெட்டுகளைப் பயன்படுத்தின. மைசூர் ஆட்சியாளர் ஹைதர் அலி 18 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தனது இராணுவத்தில் இரும்பு உறை ராக்கெட்டுகளைச் சேர்க்கத் தொடங்கினார். ஹைதரின் மகன் திப்பு சுல்தான் இறந்த நேரத்தில், சுமார் 5,000 என மதிப்பிடப்பட்ட ராக்கெட் ஏந்திச் செல்லும் துருப்புக்களை கொண்ட ராக்கெட் ஏவுதல் குழு அவரது இராணுவத்தின் ஒவ்வொரு படைப்பிரிவிலும் இணைக்கப்பட்டது.

சுதந்திரத்தின் போது, ​​இந்தியாவிடம் உள்நாட்டு ஏவுகணை திறன்கள் எதுவும் இல்லை. அரசாங்கம் 1958 இல் சிறப்பு ஆயுத மேம்பாட்டுக் குழுவை உருவாக்கியது. இது பின்னர் விரிவுபடுத்தப்பட்டு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகம் (DRDL) என்று அழைக்கப்பட்டது, இது 1962 இல் டெல்லியில் இருந்து ஹைதராபாத்திற்கு மாற்றப்பட்டது.

"1972 ஆம் ஆண்டில், டெவில் என்ற திட்டமானது, நிலப்பரப்பில் இருந்து நிலப்பரப்பைத் தாக்கும் ஒரு நடுத்தர தூர ஏவுகணையை உருவாக்கத் தொடங்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் ஏராளமான உள்கட்டமைப்பு மற்றும் சோதனை வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. இதனை DRDO ஆய்வகத்தின் அதிகாரப்பூர்வ வரலாறு கூறுகிறது. "டெவில் திட்டத்திற்கான கூறுகள் அல்லது அமைப்புகளின் வளர்ச்சி, எதிர்கால IGMDP திட்டத்திற்கான தொழில்நுட்ப தளத்தை உருவாக்கியது" என்று DRDO கூறுகிறது. 1982 வாக்கில், DRDL ஒருங்கிணைந்த வழிகாட்டப்பட்ட ஏவுகணைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் (IGMDP) கீழ் பல ஏவுகணை தொழில்நுட்பங்களை முயற்சி செய்தது.

இந்தியாவில் என்ன வகையான ஏவுகணைகள் உள்ளன?

ஏவுகணைகளை உள்நாட்டிலேயே வடிவமைத்து மேம்படுத்துவதில் இந்தியா முதன்மையான சில நாடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது, இருப்பினும் ஏவுகணை தாக்குதல் தூரம் அடிப்படையில் அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யாவை விட இந்தியா பின்தங்கியுள்ளது.

DRDO தலைவர் ஜி.சதீஷ் ரெட்டி தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம், DRDO "பல வகையான ஏவுகணைகளை உருவாக்கி வருகிறது" என்று கூறினார்.

நிலப்பரப்பில் இருந்து தாக்கும் ஏவுகணைகள்

டேங்க் எதிர்ப்பு வழிகாட்டும் ஏவுகணை (Anti-Tank Guided Mission ATGM): நாக் ஏவுகணை ஏற்கனவே சேவைகளில் சேர்க்கப்பட்டுள்ளது. "நாக் மட்டுமே அதன் வரம்பிற்கு (சுமார் 20 கிமீ) அனைத்து வானிலை தேவைகளையும் பூர்த்தி செய்யும் ஒரே Fire-and-forget ATGM" என்று சதீஷ் ரெட்டி கூறினார். சமீபத்தில் ஹெலி-நாக் சோதனை செய்யப்பட்டது, இது ஹெலிகாப்டர்களில் இருந்து இயக்கப்படும் மற்றும் 2022 க்குள் அறிமுகப்படுத்தப்படும் என்று சதீஷ் ரெட்டி கூறினார். 10 கி.மீ.க்கு மேல் சென்று தாக்கக்கூடிய ஒரு ஸ்டாண்ட்-ஆஃப் ஆண்டி டேங்க் (SANT) ஏவுகணையும் உள்ளது. டிசம்பர் 11 அன்று இந்திய விமானப்படை (IAF) ஹெலிகாப்டர்களில் இருந்து சோதிக்கப்பட்டது, இந்த ஏவுகணை ஒரு மில்லிமீட்டர் அலை தேடும் கருவியைக் கொண்டுள்ளது, இந்த கருவி அனைத்து வானிலை நிலைகளிலும் இலக்கைக் கண்டறிவதை மேம்படுத்துகிறது. "மனிதர்கள் எடுத்துச்செல்லக்கூடிய ATGMகளும்" உள்ளன என்று சதீஷ் ரெட்டி கூறினார்.

நிலப்பரப்பில் இருந்து வான் நோக்கி தாக்கும் ஏவுகணை (SAM): குறுகிய தூர SAM ஏவுகணை ஆகாஷ் ஏற்கனவே ராணுவம் மற்றும் விமானப்படையில் சேர்க்கப்பட்டுள்ளது. இலக்கைத் தேடிச் சென்று தாக்கும் ஆகாஷ் 1 ஏவுகணைக்கு, ராணுவம் ஏற்கனவே அரசாங்கத்திடம் இருந்து தேவைக்கான ஒப்புதலைப் பெற்றுள்ளது, என்று சதீஷ் ரெட்டி கூறினார். ஆகாஷுக்கு (புதிய தலைமுறை), இந்த ஆண்டு ஜூலையில் முதல் சோதனைகள் நடத்தப்பட்டன; இன்னும் ஓரிரு சோதனைகள் செய்யப்பட உள்ளதாக சதீஷ் ரெட்டி கூறினார்.

நடுத்தர தூர SAM: கடற்படைக்கான நடுத்தர தூர SAM ஏவுகணைகளின் உற்பத்தி நிறைவடைந்துள்ளது, மேலும் அதற்கான ஆர்டர்களும் வருகிறது. ஜெய்சால்மரை தளமாகக் கொண்ட விமானப்படையின் 2204 படைப்பிரிவு இந்த ஆண்டு செப்டம்பரில் MRSAM ஏவுகணைகளைப் பெற்ற முதல் பிரிவு ஆனது. ராணுவத்திற்கான MRSAM தொழில்நுட்பம் "நல்ல நிலையில் உள்ளது, விரைவில் இந்த ஏவுகணை சோதனை செய்யப்படும்". என்று சதீஷ் ரெட்டி கூறினார்.

குறுகிய தூர SAM: கடற்படைக்கான, முதல் குறுகிய தூர SAM ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.

வான்வழி தாக்கும் ஏவுகணைகள்

விமானத்திலிருந்து விமானத்தை தாக்கும் ஏவுகணை (Air–to-Air): இந்தியாவின் பார்வை எல்லைக்கு அப்பால் சென்று விமானத்திலிருந்து விமானத்தை தாக்கும் ஏவுகணையான (BVRAAM), அஸ்ட்ரா முழுமையாக சோதிக்கப்பட்டு, தயாராக உள்ளது. இது சுமார் 100 கிமீ தூரம் வரை செல்லக்கூடியது, மேலும் இந்த ஏவுகணையை உள்நாட்டில் உருவாக்கப்பட்ட இலகுரக போர் விமானமான தேஜாஸ் உட்பட பல IAF தளங்களுடன் சேர்க்க DRDO முயற்சிக்கிறது. ஒரு நீண்ட தூர அஸ்ட்ராவும் உருவாக்கப்படுகிறது, அதற்கான ஆரம்ப சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த ஏவுகணை திட எரிபொருள் ராம்ஜெட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது, இது வேகத்தை அதிகரிக்கிறது, மேலும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இலக்கைத் தேடிச் சென்று தாக்கும் தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கும்.

விமானத்திலிருந்து தரையை தாக்கும் ஏவுகணை (Air-to-Ground): புதிய தலைமுறை கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணையான (NGRAM), ருத்ரம், ஆரம்ப சோதனைகளில் தேர்ச்சி பெற்றுள்ளது, மேலும் சில சோதனைகள் விரைவில் நடத்தப்படும். அதிகபட்சமாக சுமார் 200 கிமீ தூரம் வரை செல்லக்கூடிய இந்த ஏவுகணை முக்கியமாக எதிரியின் தொடர்பு, ரேடார் மற்றும் கண்காணிப்பு அமைப்புகளை குறிவைத்து கடந்த ஆண்டு சுகோய்-30எம்கேஐ போர் விமானத்தில் இருந்து சோதனை செய்யப்பட்டது. இந்தியா ரஷ்யாவுடன் இணைந்து உருவாக்கிய பிரம்மோஸ் ஏற்கனவே செயல்பட்டு வருவதாக சதீஷ் ரெட்டி குறிப்பிட்டுள்ளார். இது 300 கிமீ முதல் 500 கிமீ தூரம் வரை செல்லக்கூடியது, மேலும் பிரம்மோஸ் ஒரு குறுகிய தூர, ராம்ஜெட் தொழில்நுட்பத்தில் இயங்கும், ஒற்றை வெடிக்கும் சாதனங்கள் கொண்ட, சூப்பர்சோனிக் எதிர்ப்பு கப்பல் அல்லது தரைவழி தாக்குதல் ஏவுகணையாகும்.

கடந்த திங்கட்கிழமை வீலர் தீவில் இருந்து சூப்பர்சோனிக் ஏவுகணை உதவி வெடிகுண்டு (டார்பிடோ) அமைப்பு வெற்றிகரமாக ஏவப்பட்டதாக சதீஷ் ரெட்டி கூறினார். இது "டார்பிடோவை நீண்ட தூரத்திற்கு எடுத்துச் சென்று வெடிக்கச் செய்தது" மேலும் இது சுமார் 400 கிமீ தூரம் வரை கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு திறனை மேம்படுத்தும் என்று சதீஷ் ரெட்டி கூறினார்.

இந்தியாவின் ஏவுகணை அமைப்புகளில் மிகவும் முக்கியமானது எது?

இரண்டு மிக முக்கியமான அக்னி மற்றும் ப்ரித்வி ஏவுகணைகள் வியூகப் படைப் பிரிவுகளால் பயன்படுத்தப்படுகின்றன.

ஒரு சில நாடுகளில் மட்டுமே உள்ள கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைக்கான (ICBM) இந்தியாவின் ஒரே போட்டியாளர் அக்னி (சுமார் 5,000 கிமீ) ஏவுகணை தான். ப்ரித்வி, 350 கிமீ தூரம் வரை சென்று தாக்கக்கூடிய குறுகிய தூர ஏவுகணையாக இருந்தாலும், வியூகப் பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. ஏப்ரல் 2019 இல் இந்தியாவும் செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணையைச் சோதித்தது. ப்ரித்வி டிஃபென்ஸ் வெஹிக்கிள் எம்கே 2 என்ற மாற்றியமைக்கப்பட்ட பாலிஸ்டிக் எதிர்ப்பு ஏவுகணை குறைந்த சுற்றுப்பாதையில் உள்ள செயற்கைக்கோளை தாக்க பயன்படுத்தப்பட்டது. இந்தத் திறனில் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இந்தியாவை பின்னுக்குத் தள்ளியுள்ளது.

ஹைப்பர்சோனிக் தொழில்நுட்பம் என்பது என்ன?

இந்தியா சில ஆண்டுகளாக இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகிறது, மேலும் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவுக்கு பின்னால் உள்ளது. DRDO செப்டம்பர் 2020 இல் ஹைப்பர்சோனிக் டெக்னாலஜி டெமான்ஸ்ட்ரேட்டட் வாகனத்தை (HSTDV) வெற்றிகரமாகச் சோதித்தது, மேலும் அதன் ஹைப்பர்சோனிக் காற்று-சுவாச ஸ்க்ராம்ஜெட் தொழில்நுட்பத்தை நிரூபித்தது.

ஆதாரங்களின்படி, இந்தியா தனது சொந்த கிரையோஜெனிக் இயந்திரத்தை உருவாக்கி 23 வினாடி ஏவுகணையில் அதை நிரூபித்துள்ளது. HSTDV யைப் பயன்படுத்தி ஹைப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணையை உருவாக்க இந்தியா முயற்சித்து வருகிறது.

இதுவரை ரஷ்யா மட்டுமே தனது ஹைப்பர்சோனிக் ஏவுகணை திறனை நிரூபித்துள்ளதாகவும், சீனா தனது HGV திறனை நிரூபித்துள்ளதாகவும் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியா நான்கு ஆண்டுகளுக்குள் நடுத்தர முதல் நீண்ட தூர திறன்களுடன் கூடிய ஹைப்பர்சோனிக் ஆயுத அமைப்பைக் கொண்டிருக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏவுகணை தொழில்நுட்பத்தில் இந்தியா சிறந்து விளங்குவது எதனால்?

ராணுவத்தின் பீரங்கிகளின் நவீனமயமாக்கல் திட்டத்திற்கு தலைமை தாங்கிய ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் வி.கே.சதுர்வேதி, ஏவுகணை தொழில்நுட்பம் "இந்தியா மிகவும் சாதகமான மற்றும் கணிசமான முன்னேற்றத்தை அடைந்துள்ள ஒரு துறையாகும்" என்றார்.

இந்தியாவின் ஜனாதிபதி ஆவதற்கு முன் IGMP இன் தலைமை பொறுப்பில் APJ.அப்துல் கலாம் இருந்தபோது, முதலில் ப்ரித்வி, பின்னர் அக்னி ஆகிய ஏவுகணைகள் உருவாக்கப்பட்டது. ஒலியின் வேகத்தை விட 2.5-3 மடங்கு வேகத்தில், பிரம்மோஸ் ஏவுகணை உருவாக்கப்பட்ட போது, இது உலகின் அதிவேக ஏவுகணையாக இருந்தது, என்று சதுர்வேதி கூறினார். 1998-ம் ஆண்டு அணுகுண்டு சோதனை வெற்றிகரமாக நடந்த பிறகு, கிரையோஜெனிக் போன்றவை எங்களுக்கு வழங்கப்படவில்லை. அப்துல் கலாம் மற்றும் பலர் அதை நாட்டிற்குள் வளர்த்தெடுத்தனர்.

ஏவுகணை தொழில்நுட்பத்தில் அமெரிக்கா முன்னணியில் இருப்பதாகவும், சீனா முன்னேறி வருவதாகவும் சதுர்வேதி கூறினார். முதல் மூன்று அல்லது நான்கு நாடுகளில் இந்தியாவும் "மிகவும் முன்னேறிய நிலையில்" உள்ளது.

“இன்று நமது அடிப்படை எதிரிகளான, வடக்கு எல்லையில் சீனா மற்றும் மேற்கு எல்லையில் பாகிஸ்தான், இந்த எல்லைகளின் முழு பகுதியையும் இந்தியாவின் ஏவுகணைகளைக் கொண்டு நம்மால் கவர் செய்ய முடியும் என்று சதுர்வேதி கூறினார்.

அக்னி V தயாராக இருப்பதால், இந்தியா அக்னி VI மற்றும் அக்னி VII இல் வேலை செய்து வருகிறது, இது மிக நீண்ட தாக்குதல் தூரத்தைக் கொண்டிருக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. DRDO ஆயுதப் படைகளுடன் கலந்தாலோசித்து உருவாக்கிய ப்ரித்வி, "முதலில் ராணுவத்தில் இருந்தது, பின்னர் வியூகப் படைகளுக்குச் சென்றது" தற்போது ராணுவத்திற்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று சதீஷ் ரெட்டி குறிப்பிட்டார். பினாகா ராக்கெட் அமைப்புகளும் பயனர் ஏஜென்சிகளுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பில் உருவாக்கப்பட்டுள்ளன, என்றும் சதீஷ் ரெட்டி கூறினார்.

இந்தியாவுடன் ஒப்பிடும்போது சீனா, பாகிஸ்தானின் ஏவுகணை நிலை?

சீனா இந்தியாவை விட முன்னணியில் இருக்கும் போது, ​​"சீனாவைப் பற்றிய பல விஷயங்கள் உளவியல் ரீதியானவை" என்று சதுர்வேதி நம்புகிறார்.

2020 இல் பென்டகன் அறிக்கையின்படி, சீனா அமெரிக்காவிற்கு நிகராக இருக்கலாம் அல்லது தரை அடிப்படையிலான வழக்கமான பாலிஸ்டிக் மற்றும் கப்பல் ஏவுகணை திறன்களில் அமெரிக்காவை விட அதிகமாக இருக்கலாம்.

சதுர்வேதி கூறுகையில், சீனாவின் ஏவுகணை மேம்பாடு "நிச்சயமாக எங்களுக்கு கவலையளிக்கிறது, ஆனால் நாங்கள் நிச்சயமாக வளர்ச்சியடைவோம்" என்றார். இந்தியாவின் வியூக இலக்கை சீனா தாக்கினால், "நாங்கள் சமமான ஆற்றலுடன் பதிலடி கொடுப்போம், மேலும் மிகவும் முக்கியமான இடத்தில் அவர்களைத் தாக்குவோம்" என்று சதுர்வேதி கூறினார்.

சதுர்வேதி பாகிஸ்தானை மிகவும் புறக்கணித்தார். சீனா பாகிஸ்தானுக்கு தொழில்நுட்பத்தை வழங்கியுள்ளது, "ஆனால் ஒரு தொழில்நுட்பத்தைப் பெறுவதும் அதை உண்மையில் பயன்படுத்துவதும், அதன்பிறகு உருவாக்கி ஒரு கொள்கையை ஏற்றுக்கொள்வதும் முற்றிலும் வேறுபட்டது".

சதுர்வேதி ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை "தடுப்பு ஆயுதங்கள்" என்று அழைத்தார், ஆனால் அவை பயன்படுத்தப்படாது. சீனா "தொடர்ந்து தடுப்பார்கள், ஆனால் சீனா இதைப் பயன்படுத்த வாய்ப்பில்லை என்று அவர் நம்புகிறார். ஒருவேளை சீனா பயன்படுத்தினால், இந்தியா சும்மா இருக்காது” என்று சதுர்வேதி கூறினார்.

அணுசக்தி திறன் குறித்து, சதுர்வேதி கூறுகையில், பிரம்மோஸ் அணுசக்தியை இந்தியா அழைக்காவிட்டாலும், அதைப் பயன்படுத்தலாம். இந்தியாவின் ஒரே அணு ஏவுகணைகள் ப்ரித்வி மற்றும் அக்னி, ஆனால் அதையும் தாண்டி, தந்திர அணு ஆயுதங்களை சில IAF போர் விமானங்களில் இருந்தோ அல்லது 50 கிமீ தூரம் வரை குறைந்த தூரம் கொண்ட ராணுவ துப்பாக்கிகளில் இருந்தோ ஏவ முடியும் என்றார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Explained Drdo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment