Advertisment

போரில் சிக்கிய உக்ரைன் அதிபர்: யார் இந்த வோலோடிமிர் ஜெலன்ஸ்கி?

உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யா; இந்த இக்கட்டான சூழலில் அதிபராக இருக்கும் ஜெலென்ஸ்கி பற்றிய முக்கிய தகவல்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
போரில் சிக்கிய உக்ரைன் அதிபர்: யார் இந்த வோலோடிமிர் ஜெலன்ஸ்கி?

Sonal Gupta

Advertisment

Explained: Who is Volodymyr Zelenskyy, Ukraine’s unlikely wartime President?: “இந்தப் போரைத் தொடங்கியவர்கள் நாம் அல்ல. ஆனால் நாம்தான் அதை முடிக்க வேண்டும்” என்ற, ஏப்ரல் 2019 இல் உக்ரைனின் அதிபராகப் பதவியேற்ற பிறகு, வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் இந்த தொடக்க உரை, ரஷ்யா உக்ரைன் எல்லைக்குள் படையெடுத்ததன் வெளிச்சத்தில் ஒரு புதிய முக்கியத்துவத்தைப் பெறுகிறது.

நகைச்சுவை நடிகராக இருந்து அதிபர் ஆன ஜெலென்ஸ்கி, ரஷ்யாவுடனான இந்த போரில் சர்ச்சைக்குரிய பிரதேசமான டான்பாஸில் போர்நிறுத்தம் செய்வதாக உறுதியளித்தார். "கடினமான முடிவுகளை எடுக்க நான் நிச்சயமாக பயப்படவில்லை, தேவைப்பட்டால், எந்த தயக்கமும் இல்லாமல் மேலும் எனது புகழ், எனது நன் மதிப்பீடுகளை இழக்க தயார், நமது பிரதேசங்களை நாம் விட்டுக்கொடுக்காத வரை, அமைதியைக் கொண்டுவருவதுதான் எனது நிலைப்பாடு, ” என்று ஜெலென்ஸ்கி கூறியிருந்தார்.

இன்று, அதிபர் ஜெலென்ஸ்கி இந்த "கடினமான முடிவுகளை" எதிர்கொள்கிறார். வெள்ளிக்கிழமை அதிகாலை, உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு முதல் நாளுக்குப் பிறகு, ஜெலென்ஸ்கி வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பில் (NATO) உக்ரைன் இணைவதற்கு எதிரான ரஷ்யாவின் கோரிக்கைகளுக்கு இணங்க, ஒரு "நடுநிலை நிலை" பற்றி விவாதிப்பதற்கான சாத்தியக்கூறுகளை சுட்டிக்காட்டினார்.

அவரது உரையில், உக்ரைன் தன்னைத் தற்காத்துக் கொள்ள "தனியாக விடப்பட்டது" என்று "எல்லோரும் பயப்படுகிறார்கள்" என கூறினார். உண்மையில், ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளின் கடுமையான அழைப்புகள் மற்றும் ரஷ்ய அதிபரின் "இராணுவ நடவடிக்கை" பற்றிய அறிவிப்பிலிருந்து 'ஆக்கிரமிப்பாளர்'க்கு எதிராக பயனுள்ள மற்றும் தீர்க்கமான நடவடிக்கைக்கு நாடுகளின் தலைவர்களுக்கு வேண்டுகோள் ஆகியவற்றை ஜெலென்ஸ்கியின் ட்விட்டர் டைம்லைன் காட்டுகிறது.

இந்த ஜெலென்ஸ்கி என்பவர் யார், அவர் எப்படி உக்ரைனின் அதிபரானார்?

ஜெலென்ஸ்கியின் பின்னணி அவரை அதிபராக 'சாத்தியமற்றவர்' எனக் காட்டுகிறது, அதற்கான காரணங்கள் ஏராளமாக உள்ளன: அவர் ஒரு நகைச்சுவை நடிகர், அவர் தொலைக்காட்சியில் அதிபராக நடித்தார், ஆனால் நிஜ வாழ்க்கையில் அரசியல் முன் அனுபவம் இல்லை. உக்ரேனிய மொழியை அதன் தேசியவாத அடையாளத்தின் ஒரு பகுதியாக வரையறுத்து வரும் நாட்டில் அவர் ரஷ்ய மொழி பேசுபவர். கடைசியாக, அவர் ஒரு யூதர், சிறுபான்மை சமூகம்.

இருப்பினும், அவரது புகழ், அவருக்கு முன் ஆட்சியிருந்தவர்களுக்கு எதிரான வெறுப்பு மற்றும் ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கான அவரது வாக்குறுதிகள் 2019 தேர்தலில் அவரது வெற்றியில் உச்சக்கட்டத்தை அடைந்தது. இதனால் அவரது மதம் பிரச்சாரத்தில் கவனம் பெறவில்லை.

‘மக்களின் சேவகன்’

ஜெலென்ஸ்கி ஒரு நகைச்சுவை நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார் மற்றும் உக்ரேனிய தொலைக்காட்சியில் பிரபலமான முகமாக மாறினார். 'லவ் இன் தி பிக் சிட்டி' மற்றும் '8 ஃபர்ஸ்ட் டேட்ஸ்' போன்ற குறைந்தது ஆறு படங்களில் அவரது பாத்திரங்கள் மற்றும் 1+1 தொலைக்காட்சி சேனலில் அவரது மிகவும் பிரபலமான நடிப்பு அவரது கடைசி படமாக அமைந்தது. ஒரு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர், எதிர்பாராதவிதமாக நாட்டின் அதிபராக வரும், ​​அரசியல் நையாண்டி கலந்த ஜெலென்ஸ்கியின் கற்பனைக் கதாபாத்திரமான, ‘மக்களின் சேவகன்’, மக்கள் மத்தியில் எதிரொலித்தது.

பெரிய எதிர்ப்புகளைத் தொடர்ந்து ஜனாதிபதி விக்டர் யானுகோவிச் வெளியேற வழிவகுத்த, 2014 நிகழ்வுகளுக்கு ஒரு வருடம் கழித்து இந்த நிகழ்ச்சி திரையிடப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்ததால் ரஷ்ய சார்பு யானுகோவிச்சின் அரசாங்கம் தூக்கி எறியப்பட்டது. உக்ரைனில் செல்வாக்கு இல்லாததால், ரஷ்யா கிரிமியாவை இணைத்துக் கொண்டது, பின்னர் கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சி செய்ய ரஷ்ய சார்பு ஆதரவாளர்களைத் தூண்டியது.

ஒரு வருடம் கழித்து, 'மக்களின் சேவகன்' நிகழ்ச்சி உக்ரைன் மக்களுக்கு ஒரு கறைபடியாத "அதிபர்", வாசில் பெட்ரோவிச் ஹோலோபோரோட்கோவை வழங்கியது. இது ஒரு சாதாரண மனிதனை சித்தரித்தது, உயரடுக்கு வர்க்கத்தின் ஊழல் மற்றும் சிடுமூஞ்சித்தனத்திற்கு எதிரான அவரின் கூச்சல் வைரலாகி, அவரை அதிபர் இருக்கையில் இறக்கியது. கேரக்டரைப் போலவே, ஜெலென்ஸ்கியின் பிரச்சாரம் ஊழலை முடிவுக்குக் கொண்டுவருவதில் கவனம் செலுத்தியது. இது இளம் வாக்காளர்களை சமூக ஊடகங்கள் மூலம் குறைந்தபட்ச ஊடகத் தோற்றங்களுடன் இலக்காகக் கொண்டது.

ஜெலென்ஸ்கி பிரச்சார பேரணிகள் மற்றும் நேர்காணல்களைத் தவிர்த்தாலும், அவர் தொலைக்காட்சியில் தொடர்ந்து தோன்றினார், மேலும் யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் அவர் ஆற்றிய உரைகள் நாட்டில் மாற்றத்திற்கான வளர்ந்து வரும் கோரிக்கைக்கு வழிவகுத்தன. உண்மையில், அவர் செய்த சில நேர்காணல்களில் ஒன்றில், “மக்கள் அதே தார்மீக விழுமியங்களைக் கொண்ட வாசில் ஹோலோபோரோட்கோ போன்ற அதிபரைப் பார்க்க விரும்புகிறார்கள். அவர்கள் ஆட்சியாளர்களால் சோர்வடைந்துள்ளனர். அவர்கள் புதிதாக ஒன்றை விரும்புகிறார்கள் என்று ஜெலென்ஸ்கி கூறினார்.

இதையும் படியுங்கள்: ரஷ்யா – உக்ரைன் போர் இந்திய பொருளாதாரத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?

நிகழ்ச்சியின் தயாரிப்பு நிறுவனமான க்வார்டல் 95, ஜெலென்ஸ்கியால் நிறுவப்பட்டது, அவரது வேட்புமனுவை ஆதரிக்க 'மக்களின் சேவகன்' என்ற பெயரில் ஒரு அரசியல் கட்சியை உருவாக்கியது. குவார்டல் 95 இன் உறுப்பினர்கள் ஜெலென்ஸ்கியின் அரசாங்கத்தில் ஆலோசகர்களாக ஆனார்கள். அவரது உயரடுக்கு எதிர்ப்பு நிலைப்பாடு இருந்தபோதிலும், பல ஆண்டுகளாக மோசடி மற்றும் ஊழல்களுக்காக விசாரிக்கப்பட்ட உக்ரைனின் சர்ச்சைக்குரிய அதிபரான இஹோர் கொலோமொய்ஸ்கி, ஜெலென்ஸ்கியின் பிரச்சாரத்தை ஆதரித்தார்.

2019 இல் அவர் தனது வேட்பு மனுவை அறிவித்த உடனேயே, கருத்துக் கணிப்புகள் ஜெலென்ஸ்கியை சாதகமான வேட்பாளராகக் கணித்தன. அந்த நேரத்தில் அப்போதைய அதிபராக இருந்த பெட்ரோ பொரோஷென்கோவின் அரசாங்கத்திற்குள் ஊழல் பற்றிய அறிக்கைகள் மற்றும் டான்பாஸில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தீர்க்கமான நடவடிக்கைகள் இல்லாததால் அவருக்கு எதிரான மனக்கசப்பும் இதற்குக் காரணமாகும். ஜெலென்ஸ்கி தேர்தலில் 73% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

கிழக்கு உக்ரைனில் அமைதிக்கான ஜெலென்ஸ்கியின் முயற்சிகள்

அதிபர் பதவியின் ஆரம்ப நாட்களில், ஜெலென்ஸ்கி தனது பிரச்சாரத்தில் வாக்குறுதியளித்தபடி மோதலை முடிவுக்கு கொண்டுவர பல நடவடிக்கைகளை எடுத்தார். அக்டோபர் 2019 இல், அவர் ஸ்டெய்ன்மியர் ஃபார்முலாவில் கையெழுத்திட்டார். ஜெர்மனி அதிபரின் பெயரிடப்பட்ட இந்த வழிமுறைகள் மின்ஸ்க் உடன்படிக்கைகளுக்கு இணங்க, கிளர்ச்சி டான்பாஸ் பகுதியில் உக்ரேனிய சட்டத்தின் கீழ் தேர்தல்களை முன்மொழிகிறது. ஐரோப்பா பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான அமைப்ப்பான கண்காணிப்பு அமைப்பு, தேர்தல்கள் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடப்பதைக் கண்டால், டான்பாஸுக்கு "சிறப்பு அந்தஸ்து" வழங்கப்படும் மற்றும் உக்ரைன் அதன் எல்லைகளை திரும்ப பெறும். ஸ்டெய்ன்மியர் ஃபார்முலாவை "சரணடைதல்" என்று பலர் கருதுவதால், இந்த நடவடிக்கை உக்ரைனுக்குள் எதிர்ப்புகளை சந்தித்தது.

எவ்வாறாயினும், டான்பாஸ் பிராந்தியத்தில் ரஷ்யா தனது இராணுவ நடவடிக்கைகளைத் தொடரும் வரை தேர்தல்கள் நடக்காது என்று ஜெலென்ஸ்கி கூறியதால், தேர்தல் அறிவிப்பு ஒரு முன்னேற்றத்திற்கு வழிவகுக்கவில்லை.

நவம்பர் 2019 இல், விளாடிமிர் புதினுடனான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, உக்ரைன் மற்றும் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சிக் குழுக்கள் லுஹான்ஸ்கில் உள்ள பெட்ரிவ்ஸ்கே என்ற நகரத்திலிருந்து தங்கள் துருப்புக்களை பின்வாங்கத் தொடங்கின, அங்கு அவர்கள் 2014 முதல் சண்டையிட்டனர்.

சமாதான முன்னெடுப்புகளை நோக்கிய மற்றொரு முக்கிய படியாக, உக்ரைனும் ரஷ்யாவும் செப்டம்பர் 2019 இல் பல அரசியல் கைதிகளை பரிமாறிக்கொண்டன. "எங்கள் உரையாடலைத் தொடர்வதற்கான முதல் கட்டம் மற்றும் போரை நிறுத்துவதற்கான முதல் படி" என்று ஜெலென்ஸ்கி அழைத்தார். விடுவிக்கப்பட்ட 35 கைதிகள் உக்ரைனுக்குத் திரும்பினர்.

ஜூலை 2020 இல், உக்ரைன், ரஷ்யா மற்றும் OSCE ஆகியவை கிழக்கு உக்ரைனில் இராணுவம் மற்றும் பிரிவினைவாதிகளுக்கு இடையே ஒரு முழு போர்நிறுத்தம் குறித்த உடன்பாட்டை எட்டின. எவ்வாறாயினும், பல ஆண்டுகளாக, இப்பகுதி போர்நிறுத்தத்தின் பல மீறல்களைக் கண்டது, டிசம்பர் 2021 இல் அதிகரித்த பதட்டங்களில் உச்சக்கட்டத்தை அடைந்தது, இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டினர்.

டிரம்பின் பதவி நீக்க விசாரணையில் ஜெலென்ஸ்கியின் ஈடுபாடு

ஒரு புதிய அதிபராக, ரஷ்யாவிற்கு எதிரான தனது நிலைப்பாட்டை வலுப்படுத்த, அமெரிக்காவின் அப்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை சந்திக்க ஜெலென்ஸ்கி முயன்றபோது, ​​குடியரசுக் கட்சியின் தலைவரான ட்ரம்ப்பால் ஜெலென்ஸ்கியிடம் "நன்மைகள்" கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நன்மைகளில் போட்டியாளரான ஜோ பிடனின் மகனும், உக்ரேனிய இயற்கை எரிவாயு நிறுவனத்தின் குழு உறுப்பினருமான ஹண்டரின் வேலைவாய்ப்பு நியமனத்தை விசாரிப்பதும் அடங்கும். பிடனை விசாரிக்க உக்ரைன் ஒப்புக் கொள்ளும் வரை 391 மில்லியன் டாலர் இராணுவ உதவியை நிறுத்தி வைத்ததாகவும் டிரம்ப் மீது குற்றம் சாட்டப்பட்டது.

டிரம்ப் தனது வழக்கறிஞர் ரூடி கியுலியானியுடன் சேர்ந்து ஜெலென்ஸ்கிக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து, அமெரிக்க அதிபரை சந்திக்க வைக்க உறுதியளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜூலை 2019 இல் இரு தலைவர்களுக்கிடையேயான அழைப்பு குறித்து வெள்ளை மாளிகையால் பகிரப்பட்ட ஒரு குறிப்பில், டிரம்ப் ஜெலென்ஸ்கியிடம் “எங்கள் நாடு நிறைய கடந்துவிட்டாலும், உக்ரைனுக்கு அதைப் பற்றி நிறைய தெரியும் என்றாலும், நீங்கள் எங்களுக்கு ஒரு உதவி செய்ய விரும்புகிறேன். உக்ரைனுடனான இந்த முழு சூழ்நிலையிலும் என்ன நடந்தது என்பதை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், அவர்கள் Crowdstrike என்று கூறுகிறார்கள் என்று கூறினார்.

Crowdstrike என்பது 2016 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த தேர்தல்களின் போது தங்கள் சர்வர்கள் மீதான தாக்குதலை விசாரிக்க ஜனநாயகக் கட்சியினரால் பணியமர்த்தப்பட்ட சைபர் செக்யூரிட்டி நிறுவனமாகும். அவர்கள் ரஷ்ய குழுக்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளனர் என்று முடிவு செய்யப்பட்டது.

"மற்றொரு விஷயம், பிடனின் மகனைப் பற்றி நிறைய பேச்சு உள்ளது, பிடென் வழக்குத் தொடருவதை நிறுத்தினார், மேலும் பலர் அதைப் பற்றி கண்டுபிடிக்க விரும்புகிறார்கள், எனவே நீங்கள் அட்டர்னி ஜெனரலுடன் இணைந்து செயல்படுவது நன்றாக இருக்கும்" என்றும் ஜெலென்ஸ்கியை ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்வதாகவும் டிரம்ப் அழைப்பின் போது கூறினார்.

எவ்வாறாயினும், இந்த விஷயத்தில் கருத்து தெரிவிக்கவோ அல்லது டிரம்பின் விசாரணையில் சாட்சியமளிக்கவோ உக்ரைன் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. குடியரசுக் கட்சிக்கு பெரும்பான்மை இருந்த செனட் 2020 இல் டிரம்பை குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவித்தது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ukraine Explained
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment