ஏற்கனவே உலக அளவில் ஒமிக்ரான் தொற்று அதிக அளவில் பரவி வருகின்ற சூழலில், ஃப்ரான்ஸில் கண்டறியப்பட்ட புதிய வைரஸ் மக்கள் மத்தியில் மேலும் ஒரு தொற்று அலைக்கான அச்சத்தை அதிகரித்துள்ளது. B.1.64 எனப்படும் அந்த தொற்று மேலும் பல்வேறு நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. ஸ்பைக் புரத மாறுபாட்டுடன் இந்த மாறுபாடு 46 பிறழ்வுகளைக் கொண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது.
புதிய மாறுபாடு இல்லை
பி.1.640 என்பது புதிய மாறுபாடு இல்லை. மூன்று மாதங்களாகவே இதன் தாக்கம் இருந்து வருகிறது. தற்போது உலக அளவில் இது தொடர்பான விவாதங்களுக்கு காரணமாக இருப்பது ஒரு வாரத்திற்கு முன்பு Méditerranée Infection in Marseille நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சி முடிவுகள் தான். இந்த நிறுவனம் ஃப்ரான்ஸின் ஹாஸ்பிடலோ - பல்கலைக்கழங்களின் ஒரு பகுதியாக செயல்பட்டு வருகிறது.
நவம்பர் மாதம் 12 நபர்களிடம் இந்த தொற்று கண்டறியப்பட்டதாக இந்த ஆராய்ச்சி முடிவுகள் அறிவிக்கின்றன. இந்த நபர்கள் அனைவரும் தென்கிழக்கு ஃபிரான்ஸ் பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் கேமரூனில் இருந்து திரும்பி வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களிடம் கண்டறியப்பட்ட தொற்று ஏற்கனவே கண்டறியப்பட்டு பெயரிடப்பட்ட ஐ.எச்.யூ மாறுபாட்டுடன் ஒத்துப்போனது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடும் IHU மாறுபாடு B.1.640 ஆகும், இது உலகளாவிய தரவுத்தளங்களின்படி, கடந்த ஆண்டு ஜனவரி மாதத்திலேயே கண்டறியப்பட்டது. ஆராய்ச்சியாளர்கள் நவம்பரில் மக்கள் மத்தியில் கண்டறியப்பட்ட தொற்று இப்போது துணைப் பரம்பரை B.1.640.2 என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
பரவும் தன்மை குறைவே
மரபணு வரிசைமுறை தரவுத்தளங்களில் வெவ்வேறு மாறுபாடுகளின் பரவலைக் கண்காணிக்கும் இணையதளமான outbreak.info-ல் வெளியிடப்பட்ட தரவுகளின் அடிப்படையில், இதுவரை 400க்கும் மேற்பட்டவர்களுக்கு பி.1.640 மாறுபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் 19 நாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் பாதிக்கபட்ட நபர்களில் ஒருவர் இந்தியாவிலும் உள்ளார். ஆனால் இந்தியாவில் இருந்து பெறப்பட்ட 90 ஆயிரம் மரபணு பகுப்பாய்வுகளில் ஒன்று மட்டுமில் இந்த தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அதிகப்படியான தொற்றுகள் ஃப்ரான்ஸ் நாட்டில் தான் ஏற்பட்டுள்ளது. இதுவரை 287 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜெர்மனியில் 17 நபர்களுக்கும் இங்கிலாந்தில் 16 நபர்களுக்கும் இந்த மாறுபாட்டினால் தொற்று ஏற்பட்டுள்ளது. காங்கோ நாட்டில் அதிக அளவில் இதனால் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. ஏன் என்றால் இதுவரை பகுப்பாய்வு செய்யப்பட்ட 454 மரபணுக்களில் 39 நபர்களுக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நவம்பரில், உலக சுகாதார அமைப்பு (WHO) B.1.640 மாறுபாட்டை கண்காணிப்பின் கீழ் உள்ள மாறுபாடு என்று வரையறை செய்தது. இது ஒரு மாறுபாட்டின் நுழைவு-நிலை வகைப்படுத்தல் ஆகும்.
கவலை அளிக்கும் மாறுபாடு அல்ல
இந்த மாறுபாடு அதிக அளவு பிறழ்வுகளை கொண்டிருந்த காரணத்தினால் ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை பெற்றது. அதே சமயத்தில் பொதுமக்களுக்கு அதிக அளவில் கவலையையும் ஏற்படுத்தியது. B.1.640 கவலையளிக்கும் விகிதத்தில் பரவவில்லை. ஒமிக்ரான் போன்று பெரிய அளவில் பாதிப்பையும் இது ஏற்படுத்தாது. outbreak.info இணையத்தின் தரவுகளின் படி டிசம்பர் 25ம் தேதி அன்று தான் இறுதியாக இந்த தொற்று பதிவாகியுள்ளது. அதன் பிறகு உலகளாவிய தரவுகளில் இந்த வைரஸ் தொற்று குறித்த தகவல்கள் ஏதும் இல்லை.
தற்போதைய சூழலில் இது குறித்து அச்சம் கொல்ல தேவையில்லை. ஆனால், வருகின்ற வாரங்களில் இந்த தொற்றில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்று டெல்லியை தளமாக கொண்டு செயல்படும் இன்ஸ்டியூட் ஆஃப் ஜினோமிக் அண்ட் இண்டெர்கேட்டிவ் பயாலஜி நிறுவனத்தில் பணியாற்றும் வினோத் ஸ்காரியா என்ற ஆராய்ச்சியாளர் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.