நாட்டில் கோவிட் 19 நோய் பரவாமல் தடுப்பது, பரவுவதைக் கட்டுப்படுத்துவது, முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு மேலாண்மை ஆகிய செயல்களுக்காக மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து, இந்த நோய்க்கு எதிராக நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலமாக, பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இவை மிக உயரிய அளவில் தொடர்ந்து பரிசீலிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
எவ்வாறாயினும், இந்தியாவின் பல பிராந்தியங்களில் அந்தந்த சூழலுக்கு ஏற்ப நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. இதில், ஆக்ரா (உத்தர பிரேதேசம் ), பத்தனம்திட்டா (கேரளா), பில்வாரா (ராஜஸ்தான்) ஆகிய பகுதிகளில் எடுக்கப்பட்ட நோய் தடுப்பு யுக்திகள் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் (கோவிட் -19): ஆக்ரா முறை: மார்ச் மாத தொடக்கத்தில் “ஆக்ரா முறையின்” செயல்பாடுகள் உலகத்திற்கு தெரிந்தது. உறவினருடன் ஆஸ்திரியா சென்று, திரும்பிய இரண்டு பேர் மூலமாக, ஆக்ரா நகரில் ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. இதன் விளைவாக, மிகவும் தீவிரமான உள்ளூர்மயமாக்கப்பட்ட நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தாலும், ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்ட பணியாளர்களால் மேற்கொள்ளப்பட்டது. அதிகாலை 2 மணிக்கு, கொரோனா வைரஸ் பரிசோதனை முடிவுகள் வெளியான உடனே, ஆக்ராவின் லோகமண்டி பகுதியில் உள்ள 3 கி.மீ சுற்றளவில் ஒரு நெரிசலான பகுதி, சுற்றி வளைக்கப்பட்டது. 1,248 குழுக்கள் அமைக்கப்பட்டு, 1,65,000 குடியிருப்பாளர்களிடம் தீவிர தொடர்பு தடமரிதல் சோதனை மேற்கொள்ளப்பட்டன.
சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள அறிக்கையில், “ ஸ்மார்ட் சிட்டி ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை (ஐ.சி.சி.சி) போர் அறைகளாகப் பயன்படுத்துவதன் மூலம் மாநில, மாவட்ட நிர்வாகம் மற்றும் மருத்துவ நிர்வாகம் தங்கள் முயற்சிகளை ஒருங்கிணைக்க முடிந்தது. கிளஸ்டர் கட்டுப்பாடு முறையின் கீழ், மாவட்ட நிர்வாகம் கொரோனா வைரஸ் தொற்றின் மையப்பகுதியை முதலில் அடையாளம் கண்டது. மாவட்ட வரைபடத்தின் மூலம், உறுதிப்படுத்தப்பட்ட கோவிட் - 19 பரவலின் தாக்கத்தை வரையறுக்கப்பட்டது . மாவட்ட நிர்வாகத்தால் வகுக்கப்பட்ட , சிறியளவிலான திட்டத்தின் படி, சிறப்பு பணிக்குழுவும் உருவாக்கப்பட்டது. துரிதமான கணக்கெடுப்பு மூலமாக பதற்றம் நிறைந்த பகுதிகள் நிர்வகிக்கப்பட்டன. பரவல் மையப்பகுதியிலிருந்து 3 கி.மீ சுற்றளவில், முக்கிய பகுதிகள் அடையாளம் காணப்பட்டன. அதே நேரத்தில், 5 கி.மீ சுற்றளவு இடையக கட்டுப்பாட்டு மண்டலமாக அடையாளம் காணப்பட்டது. ”
கட்டுப்பாட்டு மண்டலத்தில், நகர ஆரம்ப சுகாதார நிலையத்தின் உதவிகள் பெறப்பட்டன. 1,248 குழுக்கள் ஒவ்வொன்றிலும், இரண்டு உதவியாளர்கள் உட்பட துணை செவிலியர் / ஆஷா சமூக சுகாதார பணியாளர்கள் / அங்கன்வாடி ஊழியர்கள் இருந்தனர். வீடு வீடாக 9.3 லட்சம் மக்களுக்கு ஸ்க்ரீனிங் செய்யப்பட்டது.
ஆக்ரா முறை மிகவும் முக்கியமானது. ஏனெனில், கோவிட்- 19 பரவலில் அதிக அடர்த்தியுள்ள, பகுதிகளில், இந்த முறை பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆக்ராவில் சமூக அளவில் பரவலுக்கான சாத்தியக் கூறுகள் பற்றி அதிகாரப்பூர்வமாக பேசப்பட்டது.
மார்ச் 5 ம் தேதி ஒரு அறிக்கையில், சுகாதார அமைச்சகம் “பயணம் தொடர்பான கோவிட் - 19 வழக்குகளுக்கு மத்தியில், சமூக அளவில் பரிமாற்றத்தின் மூலமாக சில வழக்குகள் கண்டறியப்படுவதால், அனைத்து மாநில அரசு நிர்வாகத்தையும், மாவட்ட ஆட்சியரையும் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், உள்ளூர் அளவில் கண்காணிப்பை உறுதி செய்வதற்காக, மாவட்டம்/தொகுதி/ கிராம அளவில் சிறப்பு குழுக்களை உருவாக்கவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
கொரோனா வைரஸ் (கோவிட் -19): பில்வாரா முறை : ராஜஸ்தானின் பில்வாரா மாவட்டம், தனது இ ரக்கமற்ற கட்டுப்பட்டு நடவடிக்கையால், கோவிட்- 19 பரவல் சங்கிலியை உடைத்தது. இந்த, நோய் தடுப்பு நடவடிக்கைகளின் தொகுப்பு, "பில்வாரா முறை " என்றும் விவரிக்கப்படுகிறது.
மார்ச் 26 அன்று பில்வாரா ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியான அறிக்கையில், "மார்ச் 19ம் தேதியன்று, மாவட்டத்தின் முதல் கோவிட்- 19 வழக்கு கண்டறியப்பட்டது. அவர், தனியார் மருத்துவமனையில் பணி செய்யும் மருத்துவர். மார்ச் 26.க்குள், கோவிட்-19 வழக்குகளின் எண்ணிக்கை 17-க அதிகரித்தது. அனைவரும் அந்த மருத்துவமனையின் ஊழியர்கள் மற்றும் நோயாளிகள். இந்த பரவல், ராஜஸ்தான் மாநில அரசு நிர்வாகத்திற்கு மிகப்பெரிய நெருக்கடியாக அமைந்துவிட்டது.
இந்திய குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 144-இன் கீழ், நகரம் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டது. முதல் கட்டமாக, அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து பிற சேவைகள் அனைத்தும் நிறுத்திவைக்கப்பட்டன; இரண்டாவது கட்டமாக, நகரம் மற்றும் மாவட்ட எல்லைகள் சீல் வைக்கப்பட்டு, ஒவ்வொரு நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டது. அனைத்து ரயில்கள், பேருந்துகள் மற்றும் கார்கள் நிறுத்தப்பட்டன. அருகில் உள்ள மாவட்டங்களையும் சீல் வைக்குமாறு, அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர். மையப்பகுதியைச் சுற்றி 3 கி.மீ. பரப்பளவு கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டது . இடையக மண்டலம் (buffer zone) 7 கி.மீ. சுற்றளவில் இருந்தது.
கட்டுப்பாடு மற்றும் இடையக மண்டலங்கள் ‘இயக்கம் இல்லாத பகுதிகளாக மாற்றப்பட்டு, கோவிட் -19 தொற்று தொடர்பான கிளஸ்டர் மேப்பிங் செய்யப்பட்டன. இதன் மூலம், ஆறு பகுதிகள் அடையாளம் காணப்பட்டு, சந்தேகத்திற்கிடமான வழக்குகளை தொடர்ந்து பரிசோதிக்க சிறப்பு குழுக்கள் தயார் செய்யப்பட்டன . கட்டுப்பாட்டு மற்றும் இடையக மண்டலங்களில் இருந்த அனைத்து ஆம்புலன்ஸ் மற்றும் காவல்துறை வாகனங்கள், ஸ்க்ரீனிங் மையம், தனிமைப்படுத்துதலுக்கான வசதி மையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் , மற்றும் பிற அரசு அலுவலகங்களில் தினசரியாக கிருமி நீக்கம் செய்யப்பட்டன.
பில்வாராவில் மட்டும், 3,072 குழுக்கள், 2,14,647 வீடுகளில் உள்ள 10,71,315 நபர்களை பரிசோதித்து, இன்ஃப்ளூயன்ஸா போன்ற அறிகுறிகள் கொண்ட 4,258 நோயாளிகளை கண்டறிந்தது. அனைவருக்கும், விரைவாக கோவிட் -19 பரிசோதனை செய்யப்பட்டது. தலா 25 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கை வசதிகளைk கொண்ட நான்கு தனியார் மருத்துவமனைகள் , கையப்படுத்தப்பட்டன . 1,541 அறைகளுடன் 27 ஹோட்டல்களில் தனிமைப்படுத்தலுக்கான வசதிகள் அமைக்கப்பட்டன. மேலும்,7,620 பேர் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டனர்.
அத்தியாவசிய மளிகை பொருட்கள், பழங்கள், காய்கறிகள், பால் ஆகியவை வீட்டிற்கு சென்று வழங்கப்பட்டது. சமைத்த உணவு பாக்கெட்டுகள் தேவைப்படுபவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன.
சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்கள் அடிப்படையில், பில்வாரா மாவட்டத்தில், கோவிட்- 19 நோயின் எண்ணிக்கை தற்போது வெறும் 28 ஆகும்.
கொரோனா வைரஸ் (கோவிட் -19): பத்தனம்திட்டா முறை : தொழில்நுட்பத்தின் அடையாளமாக கேரளாவின் பத்தனம்திட்டா முறை விளங்குகிறது. மார்ச் மாத தொடக்கத்தில் இந்த மாவட்டம் அதன் முதல் வழக்கை பதிவு செய்தது. இத்தாலி சென்று திரும்பிய ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேருக்கு முதலில் கோவிட்- 19 கண்டறியப்பட்டது. பின்னர், அவர்களுடன் நெருக்கத்தில் இருந்த உறவினர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. எண்ணிக்கை 16 ஆக உயர்ந்தது.
எல்லை சீல் வைப்பு , தொடர்பு தடமறிதல் போன்ற நடவடிக்கைகள் இங்கேயும் நடந்தன . ஆனால் தொடர்புகளைத் ஸ்க்ரீனிங் செய்வதோடு நின்றுவிடாமல், மாவட்டத்திற்குள் நுழைந்த ஒவ்வொரு நபரும் ஸ்க்ரீனிங் செய்யப்பட்டு, பிரத்தியோகமாக டேட்டாபேஸ் ஒன்றும் உருவாக்கப்பட்டது. கூடுதலாக, கோவிட் -19 நோயாளிகள் பயணம் செய்த வழியைக் காட்டும் விதமாக கிராபிக்ஸ் உருவாக்கப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டது. பிப்ரவரி 29 முதல் மார்ச் 6 வரை, இந்த குடும்பம் பயணம் செய்த அனைத்து இடங்களும்,செய்திருக்கக்கூடிய தொடர்புகளும் இதில் அடங்கும். இதன் மூலம் சம்பந்தப்பட்டவரே முன்வந்து சோதனை செய்யத் தொடங்கினார்.
செங்கனூர் ஐ.எச்.ஆர்.டி கல்லூரி பொறியியல் மாணவர்களால் வடிவமைக்கப்பட்ட கொரோனா ஆர்.எம் - என்ற செயலியும் பயன் படுத்தப்பட்டது . வீட்டு தனிமைப்படுத்தலின் கீழ் உள்ளவர்கள் இந்த செயலியின் மூலமாக கண்காணிக்கப்பட்டனர், தனிமைப்படுத்தலை அவர்கள் உடைத்தால் ஜிபி பயன்பாட்டின் மூலம், அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கும் வகையில் இந்த செயலி இருந்தது.
கேரளாவில் புதிய வழக்குகளின் வளர்ச்சி குறைந்துவிட்டது. உதாரணமாக, கடந்த 10 நாட்களாகவே அங்கு ஒற்றை இலக்கில் தான் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.