ஐ.நா.வுடன் இணைந்த சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு (ஐஓஎம்) புதிதாக வெளியிட்டுள்ள உலகளாவிய இடம்பெயர்வு அறிக்கை 2020ல், இந்தியாவுக்கு வெளியே 17.5 மில்லியன் இந்தியர்கள் புலம்பெயர்ந்து வசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியர்களின் புலம் பெயர்வு உலகளவில் அதிகபட்சமாக உள்ளது.
இந்தியாவுக்கு அடுத்தபடியாக மெக்சிகோ (11.8 மில்லியன்), சீனா (10.7 மில்லியன்) உள்ளன. ஐஓஎம் அறிக்கையின்படி, சர்வதேச அளவில் புலம் பெயர்ந்தவர்களில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு 'தொழிலாளர்' பணிக்காக புலம் பெயர்ந்ததே ஆகும்.
புதிய அறிக்கையில் உள்ள மற்ற விவரங்களுக்கிடையில், வெளிநாடுகளில் வசிக்கும் சர்வதேச புலம்பெயர்ந்தோரில், பணம் அனுப்புவதில் கூட இந்தியாவே முன்னணி வகிக்கிறது.
2018 ஆம் ஆண்டில் சர்வதேச பணம் அனுப்புதல் (2020 அறிக்கை) 689 பில்லியன் டாலர்களை எட்டியது, அதில் வெளிநாடுகளில் வாழும் 17.5 மில்லியன் இந்தியர்கள் மூலம், இந்தியா 78.6 பில்லியன் டாலர் வருமானத்தை பெறுகிறது. இந்தியாவுக்கு அனுப்பப்படும் பணம் 2005 மற்றும் 2020 அறிக்கைகளுக்கு இடையில் தொடர்ந்து அதிகரித்துள்ளது, இது 2005 ல் 22.13 பில்லியன் டாலர்களிலிருந்து 2010 ல் 53.48 பில்லியன் டாலர்களாகவும், பின்னர் படிப்படியாக 2015 இல் 68.91 பில்லியன் டாலர்களாகவும், சமீபத்திய அறிக்கையில் 78.6 பில்லியன் டாலர்களாகவும் அதிகரித்துள்ளது.
சீனா (67.4 பில்லியன் டாலர்), மெக்ஸிகோ (35.7 பில்லியன் டாலர்), பிலிப்பைன்ஸ் (33.8 பில்லியன் டாலர்), எகிப்து (28.9 பில்லியன் டாலர்) மற்றும் பிரான்ஸ் (26.4 பில்லியன் டாலர்) ஆகிய நாடுகள் இந்தியாவுக்கு அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. வருமானம் அளிப்பதில், 68 பில்லியன் டாலர் மதிப்புடன் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (44.4 பில்லியன் டாலர்) மற்றும் சவுதி அரேபியா (36.1 பில்லியன் டாலர் அடுத்த இடங்களில் உள்ளன).
சர்வதேச புலம்பெயர்ந்தோருக்கான முக்கிய இடங்கள் அமெரிக்கா ஆகும். அங்கு செப்டம்பர் 2019 நிலவரப்படி, 50.7 மில்லியன் சர்வதேச புலம்பெயர்ந்தோர் இருந்தனர். அமெரிக்காவைத் தொடர்ந்து ஜெர்மனி, சவுதி அரேபியா, ரஷ்ய கூட்டமைப்பு மற்றும் இங்கிலாந்து ஆகியவை உள்ளன.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியா ஆகியவை இந்தியர்களுக்கான சிறந்த இடம்பெயர்வு நாடுகளாக உள்ளன. அதேசமயம், இந்தியாவிற்கு புலம் பெயர்ந்தவர்களில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் பங்களாதேஷிலிருந்து வருகிறார்கள். சீனாவிலிருந்து வருபவர்களுக்கு அமெரிக்கா தான் சிறந்த தேர்வாக உள்ளது.
2000ம் ஆண்டின் உலகளாவிய இடம்பெயர்வு அறிக்கையுடன் ஒப்பிடும்போது, 2020 அறிக்கையில் சர்வதேச புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது, இது 150 மில்லியனிலிருந்து 272 மில்லியனாக உள்ளது. சர்வதேச புலம்பெயர்ந்தோரில் பெண்களின் விகிதம் இரண்டு அறிக்கைகளுக்கிடையில் ஓரளவு மட்டுமே மாறியுள்ளது. இது 2000 ல் 47.5% ஆகவும், 2020ல் 47.9% ஆகவும் உள்ளது. குழந்தைகளாக புலம்பெயர்ந்தோரின் எணிக்கை 2000 ஆம் ஆண்டில் 16% இலிருந்து 13.9% ஆக தற்போது குறைந்துள்ளது.
ஓசியானியா பிராந்தியம் தான் சர்வதேச புலம்பெயர்ந்தோரில் அதிக விகிதத்தைக் கொண்ட பிராந்தியமாக உள்ளது. அதேசமயம், சர்வதேச புலம்பெயர்ந்தோரில் அதிக விகிதத்தைக் கொண்ட நாடு ஐக்கிய அரபு எமிரேட் ஆகும். அனைத்து சர்வதேச புலம்பெயர்ந்தோரில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் (141 மில்லியன்) ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் வாழ்கின்றனர். ஏழை நாடுகளிலிருந்து பிரான்ஸ், ரஷ்யா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபியா போன்ற பணக்கார நாடுகளுக்கும் மக்கள் புலம் பெயர்ந்துள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.
"இந்த கணக்கீடு எதிர்காலத்தில் பல ஆண்டுக்கும் ஒரே மாதிரியாக இருக்கக்கூடும், குறிப்பாக சில வளரும் துணைப் பகுதிகள் மற்றும் நாடுகளில் மக்கள் தொகை வரவிருக்கும் தசாப்தங்களில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது வருங்கால சந்ததியினருக்கு இடம்பெயர்வு அழுத்தத்தை அளிக்கிறது" என்று ஐஓஎம் கூறுகிறது.
ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பாவில், பெரும்பாலான புலம் பெயர்ந்தோர், தங்கள் நாட்டவர் வசிக்கும் பகுதிகளையே அதிகம் நாடிச் செல்கின்றனர். ஆனால் லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் மற்றும் வட அமெரிக்காவிலிருந்து குடியேறியவர்களில் பெரும்பாலோர் அவ்வாறு செய்யவில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.