Mihir Vasavda , Devendra Pandey
ஆறு மாத தாமதத்திற்குப் பிறகு, இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) அடுத்த மாதம் தொடங்குகிறது. ஆனால் இது வழக்கமான வணிகமாக இருக்காது. டி 20 போட்டி முதலில் மார்ச் 29 அன்று தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால் நோய்த்தொற்று மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட லாக் டவுன் காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்க வேண்டியிருந்தது.
இந்த ஆண்டின் போட்டி அபுதாபி, துபாய் மற்றும் ஷார்ஜாவில் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை நடைபெறும் என்று ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 2) ஐபிஎல் ஆட்சிமன்றக் குழு உறுதிப்படுத்தியது.
விரிவான தரநிலை இயக்க நடைமுறைகள் (எஸ்ஓபிக்கள்) கிரிக்கெட் வாரியத்தால் இன்னும் வெளியிடப்படவில்லை, ஆனால் சில அணிகள் தயாரித்த உள் நெறிமுறைகள் வைத்து இந்த சீசன் எப்படி இருக்கும் என்பதைப் பற்றி நாம் ஒரு அனுமானத்துக்கு வர முடியும்.
சுகாதாரம்: தொடுதல் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் பகிர்வு கிடையாது, பெரும்பாலான நேரங்களில் மாஸ்க் அணிய வேண்டும்
வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான பல விதிகளுடன் ஐரோப்பா முழுவதிலும் உள்ள கால்பந்து லீக், கூடைப்பந்து மற்றும் ஃபார்முலா ஒன் போன்ற பிற விளையாட்டுகளும் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.
ஒரு குழு தயாரித்த ஒரு SOP இன் படி, வீரர்கள் பயிற்சியின் ஒரு பகுதியாக “ஹேண்ட்ஷேக்குகள், ஹை-ஃபைவ்ஸ், tackling, sparring போன்றவற்றை” பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு கூறப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசியில் மாயாஜாலம் எப்போதும் நடக்காது : உலக சுகாதார அமைப்பு கூறுவதென்ன?
செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகளின் பட்டியலில், வீரர்கள் சொந்தமாக துண்டு அல்லது தண்ணீர் பாட்டில் போன்றவற்றை பயன்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், அதை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
வீரர்கள் மைதானத்தில் உடை மாற்றுவதற்கு பதிலாக, ஹோட்டல் அறைகளை விட்டு வெளியேறுவதற்கு முன்பு ஆடை அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயிற்சிக்கு பிறகு அவர்கள் தங்கள் அறையை மாற்ற நினைத்தால், அவர்கள் “சோப்புகள், துண்டுகள் மற்றும் பிற பொருட்கள் பகிரப்படவில்லை” என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
மாஸ்க் அணிவது பயிற்சியின் போது தவிர எல்லா நேரங்களிலும் கட்டாயமாகும்.
பயிற்சி அமர்வுகளும் மிகவும் வித்தியாசமாக இருக்கும். பயிற்சியின் போது வீரர்கள் “எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் 2மீ தனி நபர் இடைவெளியை” கடைபிடிக்க வேண்டும் என்று அணியின் நெறிமுறை கூறுகிறது.
இவ்வாறு நடப்பதை உறுதிசெய்ய, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வலைப் பயிற்சியில் வீரர்களின் எண்ணிக்கையைக் குறைக்க, பயிற்சி நேரங்களை சரியாக அட்டவணைப்படுத்த பயிற்சியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விளையாட்டு உபகரணங்கள் வீரர்கள் மற்றும் சப்போர்ட்டிங் ஸ்டாஃப்களிடம் மைதான கண்காணிப்பு ஊழியர்களே கொடுப்பார்கள். அவர்கள் “மாஸ்க் மற்றும் கையுறைகள் போன்ற போதுமான பாதுகாப்பு உபகரணங்களை” அணிவார்கள்.
வீரர்களின் உடல்நலம் குறித்து கண்காணிக்கும் முக்கியமான பணியை பயிற்சியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அணியின் SOP இன் படி, பயிற்சியாளரின் முக்கிய பொறுப்புகளில் ஒன்று, “ஒவ்வொரு பயிற்சி அமர்வுக்கு முன்பும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், உடனே தகவல் அளிக்க வேண்டும்" என்று வீரர்களை அறிவுறுத்துவதே.
ஒரு வீரர் நோயின் ஏதேனும் அறிகுறிகள் காட்டினால், அவர் பயிற்சி மைதானத்திலிருந்து ஹோட்டலுக்கு திருப்பி அனுப்பப்படுவார். சிறப்பு கோவிட் -19 ஹெல்ப்லைனும் அமைக்கப்படும்.
பிசியோதெரபிஸ்ட்டைப் போலவே மற்ற backroom ஊழியர்களுக்கும் துல்லியமான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. உதாரணமாக, பிசியோ ஒரு வீரரின் கண்கள், மூக்கு அல்லது வாயைத் தொடவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும், அதே நேரத்தில் சிகிச்சையின் போது அறையில் ஒன்றுக்கு மேற்பட்ட வீரர்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
பரிமாற்றம் செய்வதைத் தவிர்ப்பதற்காக அணிகள் அனைத்து மாஸ்க்கிலும் அந்தந்த வீரர்களின் பெயரை குறிக்கக்கூடும்.
ஒவ்வொரு அணியும் மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்ப்பதற்காக வெவ்வேறு ஹோட்டலில் தங்கியிருக்க வாய்ப்புள்ளது, அதே நேரத்தில் கடுமையான விதிமுறைகளை வீரர்கள் பின்பற்ற வேண்டும்.
பயிற்சிக்கு முன்னும் பின்னும் வீரர்கள் தங்கள் அணி வீரர்கள் மற்றும் பிற ஊழியர்களுடன் நேரத்தை செலவிட வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது. பொதுவான பகுதிகளில், அதாவது ஒரு மீட்டிங் அறை என்றால் கூட, எல்லா கதவுகளையும் ஜன்னல்களையும் எல்லா நேரங்களிலும் திறந்து வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுவான பகுதிகளில் கதவுகளைத் திறந்து வைப்பதன் பின்னணி, கதவின் கைப்பிடியை தொடுவதை தவிர்த்தல் ஆகும். இயற்கை காற்றோட்டத்தை வழங்க ஜன்னல்கள் திறந்த நிலையில் வைக்கப்பட வேண்டும். ஒரு ஏர் கண்டிஷனர் பயன்படுத்தப்பட்டால், அது ஒரு அணியின் நெறிமுறையின்படி, “24-30 டிகிரி சென்டிகிரேடில் 40-70 சதவீதத்திற்கு இடையில் ஈரப்பதம் அளவைக் கொண்டு இயக்கப்பட வேண்டும்”.
ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குப் புறப்படுவதற்கு முன்னர் நிறைய அணிகள் எடுக்க வேண்டிய ஒரு முக்கிய முடிவு, எந்த வீரரை இந்தியாவில் விட்டுவிட்டு வெளியேற வேண்டும் என்பதே.
உரிமையாளர்கள் தங்கள் அணியில் அதிகபட்சம் 25 வீரர்களை அனுமதிக்கிறார்கள், குறைந்தபட்ச எண்ணிக்கை 18 ஆக அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சீசனில், அணிகள் தங்கள் அணியில் 24 வீரர்களுக்கு மிகாமல்பார்த்துக் கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளன.
அதாவது ராஜஸ்தான் ராயல்ஸ் அல்லது கிங்ஸ் லெவன் பஞ்சாப் போன்ற அணிகள் - தங்கள் பட்டியலில் 25 வீரர்களைக் கொண்டுள்ளன - அவர்கள் வளைகுடாவுக்கு விமானத்தில் ஏறுவதற்கு முன்பே ஒரு பெரிய தேர்வை மேற்கொள்ள வேண்டும். எந்தவொரு வீரரும் பாதிக்கப்பட்டால், அவருக்கு பதிலாக மாற்று வீரரை களமிறக்க அந்த குறிப்பிட்ட அணி அனுமதிக்கப்படும்.
இந்த சீசனின் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம், வழக்கத்தை விட அதிக நாட்கள் தொடர் நடைபெறுவதாகும். ஐ.பி.எல் வழக்கமாக 49 நடைபெறும். இந்த சீசன் அதற்கு பதிலாக 53 நாட்கள் நீடிக்கும்.
இந்தியாவில் இறங்குமுகத்தில் கொரோனா பாதிப்பு – மீண்டும் அதிகரிக்குமா??
இதற்கு ஒரு காரணம், அதிக எண்ணிக்கையிலான பிற்பகல் போட்டிகள். இந்த ஆண்டு போட்டி நேரங்களும் மாற்றப்பட்டுள்ளன. முன்பு பிற்பகல் போட்டிகள் மாலை 4.30 மணிக்கு தொடங்கும். இரவு விளையாட்டு இரவு 8 மணிக்கு தொடங்கும். இந்த சீசனில் 10 பிற்பகல் போட்டிகள் நடைபெறவுள்ளன. அவை ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும், இரவு விளையாட்டுக்கள் இரவு 7.30 மணிக்கு தொடங்கும்.
பி.சி.சி.ஐ தனது டிக்கெட் விற்பனையை அதிகரிக்க இரவு 8 மணிக்கு போட்டியை நடத்தியது. இருப்பினும், இப்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் போட்டிகள் நடைபெறுவதால், ஒளிபரப்பாளர்களுக்கு இரவு 7:30 மணியே பிரைம் டைம் என்பதால் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
இந்த சீசன் பெரும்பாலும் பார்வையாளர்கள் இல்லாமல் விளையாடப்படும் என்றாலும், எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியம் 30-50 சதவீதம் வரை ஸ்டாண்டுகளை ரசிகர்கள் கொண்டு நிரப்புவதற்கான விருப்பத்தை ஆராய்ந்து வருவதாகக் கூறியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது சுமார் 6,000 கொரோனா பாதிப்புகள் உள்ளன. இதனால், சில ரசிகர்களை அரங்கத்திற்குள் அனுமதிப்பதில் நம்பிக்கை இருப்பதாக ஈசிபி செயலாளர் முபாஷ்ஷீர் உஸ்மானி தெரிவித்துள்ளார்.
"இந்த மதிப்புமிக்க நிகழ்வை எங்கள் மக்கள் அனுபவிக்க வேண்டும் என்று நாங்கள் நிச்சயமாக விரும்புகிறோம், ஆனால் இது முற்றிலும் அரசாங்கத்தின் முடிவு. இது குறித்து எங்கள் அரசாங்கத்தின் அனுமதியைப் பெறுவோம் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று அவர் கடந்த வாரம் பி.டி.ஐயிடம் தெரிவித்திருந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.