liquor shops open news : 2020 மே 4 ஆம் தேதியில் இருந்து மேலும் இரண்டு வாரங்களுக்கு முடக்கநிலை அமல் காலத்தை நீட்டிப்பதாக இந்திய அரசின் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த மூன்றாவது பொது முடக்கநிலை காலத்தில் பொருளாதார மற்றும் இதர செயல்பாடுகள் அதிகரிக்கும் நடவடிக்கையை தொடங்கும் ஒரு பகுதியாக நாட்டில் மதுபான கடைகள் இயங்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இதன் மூலம், ஊரடங்கை அமல்படுத்தும் மாநில அரசுகள் தாங்கள் இழந்த வருவாயை மீண்டும் ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நோய்த் தாக்குதல் அதிகம் உள்ள ஹாட் ஸ்பாட் பகுதிகளாகக் கருதப்படும் சிவப்பு மண்டலம், மிதமான பாதிப்பு உள்ள ஆரஞ்சு மண்டலங்கள், நோய் பாதிப்பு இப்போது இல்லாதிருக்கும் பசுமை மண்டலங்கள் என்ற வகைப்படுத்தலின் அடிப்படையில், இந்த முடக்கநிலை அமல் காலத்தில் பல்வேறு செயல்பாடுகளை அனுமதிப்பது தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களையும் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது
தமிழகத்தில் மே 7-ம் தேதி முதல் மதுபானக் கடைகள் திறப்பு - நிபந்தனைகள் என்னென்ன?
இருப்பினும், எப்போதும் போல் மதுக்கடைகள் தங்கு தடையின்றி இயங்குமா? (அ) மாநில அரசுகள் சில கட்டுப்பாடுகளை விதிக்குமா? எல்லா மாவட்டங்கள், நகராட்சிகள் மற்றும் கிராமங்களில் மதுபானக் கடைகள் திறக்கப்படுமா?
இதற்கான கேள்வியை இந்த கட்டுரையில் பதிலளிக்க முயல்கிறோம்:
மதுக் கடைகள் எங்கே திறக்கப்படும்?
அவசர மருத்துவ தேவைகள், அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் சேவைகளுக்கு மட்டும் விதிவிலக்கு கொடுக்கப்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களைத் தவிர, நாட்டின் பிற பகுதிகளில் மதுபான கடைகள் திறக்கப்படும். கட்டுப்படுத்தப்படும் மண்டலங்களில் வேறு எந்த செயல்பாடுகளுக்கும் அனுமதி கிடையாது.
பசுமை மண்டலங்களில், (அதாவது, கடந்த 21 நாட்களில் புதிதாக யாருக்கும் நோய் தாக்காத மாவட்டங்கள்), ஷாப்பிங் மால்களைத் தவிர்த்து (ஏனெனில், மால்கள் மூடப்படும்) பிற இடங்களில் மதுபான கடைகள் திறக்கப்படும். இது கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளுக்கு பொருந்தும்.
கொரோனா தொற்று எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ள ஆரஞ்சு மண்டல மாவட்டங்களில், பசுமை மண்டலங்களைப் போலவே மதுபானக் கடைகள் திறக்கப்படும். இதன் மூலம், இந்தியாவில் கிட்டத்தட்ட அனைத்து கிராமங்களிலும்,அதிகளவிலான நகரப் பகுதிகளிலும் மதுக் கடைகள் திறக்க வழிவக்கும்.
நோய்த் தாக்குதலுக்கு ஆளாகி இருப்பவர்களின் எண்ணிக்கை அடிப்பtடையில் வரையறுக்கப்பட்ட சிவப்பு மண்டல மாவட்டங்களிலும், மதுக் கடைகள் திறக்கப்படும். ஏனெனில், உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களில், சிவப்பு மண்டல மாவட்டங்களில் மதுக் கடைகள் இயங்குவதற்கு நேரடியாக தடை விதிக்கப்படவில்லை.
இருப்பினும், சிவப்பு மண்டலங்களில் உள்ள அனைத்து மதுபான கடைகளும் திறக்கப்படாது. தனித்து இயங்கி வரும் மதுக் கடைகள் (அ) ஒரு காலனி பகுதியில் அமைந்துள்ள மதுக் கடைகள் மட்டுமே திறக்க முடியும் என்று அமைச்சகத்தின் வட்டாரங்கள் தெரிவிகின்றன. மக்கள் கூடும் சந்தைப் பகுதியில் அமைந்துள்ள மதுக்கடைகள் மூடப்படும்.
சுருங்க சொன்னால், நோய்த் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கும் சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, ஜெய்ப்பூர், இந்தூர், ஹைதராபாத் போன்ற சிவப்பு மண்டல பகுதிகளில் சந்தையில் இயங்காத அனைத்து மதுக் கடைகளும் வழக்கம் போல் செயல்படும்.
ஏனெனில், சிவப்பு மண்டலத்தில் உள்ள நகர்ப்புறங்களில் அத்தியாவசிய தேவையில் இல்லாத கடைகளுக்கு வணிக வளாகங்கள், மார்க்கெட்கள் மற்றும் மார்க்கெட் வளாகங்களில் அனுமதி கிடையாது என்று உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், சிவப்பு மண்டலங்களின் கிராமப்புறங்களில், மார்க்கெட்டில் அனைத்து கடைகளும் (மால்கள் இயக்கத்தைத் தவிர) திறக்க அனுமதிக்கப்படுகின்றன. எனவே, கிராமப்புற சந்தைகளில் இருக்கும் மதுக் கடைகள் திறக்கப்படும்.
சரி, ஏன் சிவப்பு மண்டலங்களில் மதுக் கடைகள் இயங்குவது குறித்து உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்கள் நேரடியாக குறிப்பிடவில்லை?
வழிகாட்டுதல்கள் பெரும்பாலும் தடைகள் பற்றி பேசும். அதில், அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் குறித்து விவரங்கள் குறைவாகத் தான் இருக்கும். எனவே, தடைசெய்யப்படாத அனைத்தும் அனுமதிக்கப்படுகின்றன.
உதாரணமாக, மே - 1 வழிகாட்டு உத்தரவில்,"சிவப்பு மண்டல நகர்ப்புறங்களில் அருகமைப் பகுதியில் தனியாக உள்ள கடைகள் இயங்க அனுமதி உண்டு. இதில் அத்தியாவசியம் மற்றும் அத்தியாவசியம் அல்லாத என்ற வேறுபாடு கிடையாது. சிவப்பு மண்டலங்களில், அத்தியாவசிய பொருள்களுக்கு மட்டும் இணையவழி வணிக (e-commerce) செயல்பாடுகளுக்கு அனுமதி அளிக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால், உள்துறை அமைச்சகத்தின் முந்தைய வழிகாட்டுதல்களின் இதே பிரிவில்,“கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ்” பதிவுசெய்யப்பட்ட கடைகள் மட்டுமே இந்த பகுதிகளில் செயல்பட அனுமதிக்கப்படும் என்று கூறியிருந்தன. எனவே, கலால் சட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் மதுக் கடைகள் மூடப்படும் என்று பொருள் கொள்ளப்பட்டது . இந்த குறிப்பிட்ட நிலை தற்போது அகற்றப்பட்டுள்ளது. எனவே, நகர்ப்புறங்களில் சந்தை வளாகங்களில் இயங்காத மதுக் கடைகள் திறக்கப்படும்.
மதுக் கடைகள் திறக்கப்படும் என்பது இறுதியானதா? அப்படியானால் அடுத்து என்ன?
எதுவும் இறுதி இல்லை. குறைந்தபட்சம் இதுவரை இல்லை.
உள்துறை அமைச்சகம் தேசியளவில் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது; இதன், அடிப்படையில் மாநிலங்கள் தங்கள் சூழலுக்கு ஏற்ப, தனி வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும். மேலும், ஒரு மாநிலம் மதுபானக் கடைகளைத் திறக்க வேண்டாம் என்று நினைத்தால், தேசிய வழிகாட்டுதல்களை புறக்கணிக்க முடியும்.
ஏனென்றால், பேரழிவு மேலாண்மைச் சட்டம் 2005-இன் கீழ், கொவிட்- 19 தடுப்பு நடவடிக்கைக்காக சில செயல்பாடுகளை கடுமையானதாக மாற்ற மாநிலங்களுக்கு அதிகாரம் உண்டு. மத்திய அரசு விதித்த கட்டுப்பாடுகளை நீர்த்துப்போகச் செய்யாமல் இருக்கும் அதே நேரத்தில், அதன் தளர்வுகளை புறக்கணிக்க மாநில அரசால் முடியும்.
எவ்வாறாயினும், இந்த நேரத்தில் எந்தவொரு மாநிலமும் மதுக் கடைகளை மூட உத்தரவிடாது என்பது பொதுவான புரிதல். ஏனென்றால், பெரும்பாலான மாநிலங்களுக்கு மிகப்பெரிய வருவாய் ஆதாரமாக டாஸ்மாக் உள்ளது. பெரும்பாலான மாநிலங்களின் மொத்த வருவாயில் மது மூலம் கிடைக்கும் வருவாயின் பங்கு 25-40% வரை உள்ளது.
அப்படியானால், நாளை பொழுது விடிந்தவுடன் அருகிலுள்ள மதுக் கடைக்கு போக திட்டமிட்டுள்ளீர்களா?
வேண்டாம். அவசரம் வேண்டாம். அவசரப்பட்டாலும் முடியாது. குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா பாதிப்புகளை கருத்தில் கொண்டு பார்த்தால், நீங்கள் தவிர்ப்பது நல்லது.
கடுமையான சமூக தொலைதூர வழிகாட்டுதல்கள் விதிக்கப்பட்டுள்ளன. அனைத்து டாஸ்மாக் கடைகளும் அதனை பின்பற்றப்பட வேண்டும். ஆறு அடி தூரம் ஒருவருக்கொருவர் இடைவெளி இருக்க வேண்டும். ஒரே நேரத்தில் ஐந்து பேருக்கு மேல் அனுமதி கிடையாது. கட்டாயம் முகக்கவசம் மற்றும் தனிப்பட்ட சுகாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டும்.
எனவே, நீங்கள் டாஸ்மாக் கடைக்குச் சென்றால், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துக் கொள்ளுங்கள். நாளை நீங்கள் கடையின் முன்பு நீண்ட வரிசைகளை எதிர்பார்க்கலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.