அனைத்து பரிவர்த்தனைகளையும் பணமில்லா டிஜிட்டல் முறையில் கொண்டு செல்ல இந்திய அரசாங்கம் முயன்று வரும் நேரத்தில்,நியூயார்க் நகரம் சமீபத்தில் எடுத்த முயற்சி நம்மை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
நியூயார்க் நகரில் இயங்கும் வணிக நிறுவனங்கள் வாடிகையாளர்களிடம் ரூபாய் நோட்டுகளை வாங்க மறுத்தல் (அல்லது) கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் பிற வகையான டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மட்டுமே வலியுறுத்துவது சட்டவிரோதமானது என்று சட்டம் இயற்றியுள்ளது.
கடந்த வியாழக்கிழமை (ஜனவரி 23) நியூயார்க் நகர கவுன்சிலில், 43-3 என்ற பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
மேலும், நுகர்வோரிடம் டிஜிட்டல் அல்லாத பண பரிவர்த்தனைகளுக்கு அதிகமான கட்டணம் வசூலிப்பதையும் இந்த சட்டம் தடைசெய்கின்றது.
மேயர் பில்.டி ப்ளாசியோவின் ஆதரவு இருப்பதால், தற்போது கவுன்சிலில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டம் 90 நாட்களுக்குப் பிறகு நடைமுறைக்கு வரும்.
முதல் முறையாக மீறல்கள் ஈடுபடுவோருக்கு ( டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மற்றும் கட்டாயப்படுத்துவோர்)$ 1,000 (ரூ. 71,000) அபராதமும், அடுத்தடுத்த குற்றங்களுக்கு $1,500 வரை அபராதம் விதிக்கப்படும்.
இருப்பினும், சட்டத்தில் சில விலக்கு அளிக்கப்பட்டுள்ளன. வணிக நிறுவனங்கள் $ 20 (அதற்கும் அதிகமான) மதிப்புள்ள நாணயங்களை ஏற்க மறுக்கலாம். ஆன்லைன் மற்றும் தொலைபேசி மூலமாக செயல்படும் பரிவர்த்தனைகள் அனைத்திற்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற சட்டம் ஏன் கொண்டு வரப்பட்டது?
நியூயார்க் நகர கவுன்சில் சட்ட உறுப்பினர்கள் பணமில்லா பரிவர்த்தனைக பாரபட்சமானவை என்று நம்புகிறார்கள்.
கிரெடிட் கார்டு இல்லாத ஏழை மக்கள், சிறார்களிடம் பணத்தை ஏற்க மாட்டோம் என்று வணிக நிறுவனங்கள் சொல்லுவது பாகுபாடான செயல் என்பது அவர்களின் கருத்து.
நியூயார்க் நகரில் வசிக்கும் 25 சதவீத மக்கள் வங்கியில் கணக்கு தொடங்கப்படாமலும், பலர் வங்கியின் பலன்களை அனுபவிக்காமலும் வாழ்கின்றனர். டிஜிட்டல் பொருளாதாரம் என்ற பெயரில் இவர்களை விட்டு விட முடியாது என்று ஜனநாயக கட்சி உறுப்பினர் ரிச்சி டோரஸ் கூறினார்.
நமது சமூகம், பொருளாதார பின்னடைவில் இருக்கும் நியூயார்க்கர்களின் தேவைகளுக்கு இடமளிக்க வேண்டும். இந்த மசோதா மக்களின் சுதந்திரத்தைப் பற்றியது. அவர்கள் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பற்றியது. காரணங்கள் எதுவாகவும் இருக்கலாம், தங்களுக்கு விருப்பமான கட்டண முறையைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை நுகர்வோரிடம் யாரும் பறிக்க முடியாது," என்று சபையில் வாக்களிப்பதற்கு முன்னதாக டோரஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
எத்தனை பேர் பயனடைவார்கள் ?
இந்த மசோதா, நியூயார்க் தொழிலாளர் வர்க்கத்தின் வெற்றி என்று டோரஸ் விவரித்தார்.
அக்டோபர் 2, 2019 அன்று நுகர்வோர் மற்றும் தொழிலாளர் பாதுகாப்புத் துறை (டி.சி.டபிள்யூ.பி) வெளியிட்டுள்ள ஆராய்ச்சி சுருக்கத்தின்படி, நியூயார்க் நகரில் வாழும் சுமார் 3,54,100 குடும்பங்களுக்கு (11.2%) வங்கிக் கணக்கு இல்லை. மேலும் 6,89,000 குடும்பங்கள் (21.8 %) வங்கியில் கணக்கை வைத்திருந்தாலும், அதன் பயன்களை பெறுவதில்லை.
மசோதாவை பற்றிய மக்களின் கருத்து?
இந்த மசோதா டோஸ் டோரோஸ், பை சோலி போன்ற உணவு விற்பனை நிலையங்கள் மீது கடும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
டோஸ் டோரோஸின் இணை நிறுவனர் லியோ கிரெமர் கடந்த ஆண்டு பிப்ரவரியில்,"நாங்கள் பணமில்லா பரிவர்த்தனைகள் மீது மட்டுமே ஆர்வம் காட்டுகிறோம், நிதி மேலாண்மையை எங்கள் கட்டுபாட்டில் வைத்திருக்கவும், நிறுவனங்கள் தடையின்றி இயங்கவும் அனுமதிக்கின்றது" என்று கூறியதாக ஏபிசி செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது.
டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மட்டுமே அனுமதிருந்த சாலட் ஸ்வீட்கிரீன், கடந்த ஆண்டு பண பரிவர்த்தனைகள் ஏற்கத் தொடங்கியது.
இந்த நடவடிக்கை எடுத்த அமெரிக்காவின் முதல் நகரமா நியூயார்க்?
இல்லை. நியூ ஜெர்சி, பிலடெல்பியா மற்றும் சான் பிரான்சிஸ்கோவின் அடிச்சுவடுகளை தான் நியூயார்க் நகரம் பின்பற்றியுள்ளது. இந்த மூன்று மாநிலங்களும் 2019 ஆம் ஆண்டில் இதுபோன்ற சட்டங்களை நிறைவேற்றின. அமெரிக்காவின் பல நகரங்களும் இதைச் செய்ய பரிசீலித்து வருவதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆனால், டிஜிட்டல் பரிவர்தனைகள் தான் அடுத்த எதிர்காலம்?
டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலம் ஏற்படும் சில நன்மைகள்.
வாடிக்கையாளர்களுக்கும், வணிகங்களுக்கும் டிஜிட்டல் பரிவர்த்தனை வேகமாகவும் எளிதாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறது (கையில் பணம் வைத்திருப்பதை விட ).
வரி ஏய்ப்பு, கறுப்புப் பணம் போன்ற சமூக பிரச்சனைகளுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனைகள் ஒரு தீர்வாக கருதலாம். மேலும் அமெரிக்காவில் போல் அல்லாமல், இந்தியாவில் அனைத்து மக்களையும் உள்ளடிக்கிய நிதி மேலாண்மை (வங்கி கடன், வங்கி கணக்கு, வட்டி விகிதம் நிர்ணயம்) கடை பிடித்து வருகிறது.
ஸ்வீடன், தென் கொரியா போன்ற நாடுகள் முழுமையாக டிஜிட்டல் பரிவர்தனைகளில் தங்களை இணைத்துக் கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.