Advertisment

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குள் உட்பிரிவு: தற்போதைய நிலை என்ன?

இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் மத்திய பட்டியலில் இணைக்கப்பட்ட சாதிகள் / வகுப்புகள் இடையே இட ஒதுக்கீட்டின் பயன்களை சம அளவில் விநியோகிப்பது குறித்து ஆராயும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குள் உட்பிரிவு:  தற்போதைய நிலை என்ன?

கடந்த வாரம், உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு,  பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடி வகுப்பினருக்குள் உட்பிரிவை உருவாக்குவதற்கான விவாதத்தை மீண்டும் திறந்தது. இது ஒருபுறம் இருக்க, மத்திய பட்டியலில் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குள் துணை வகைமை (sub-categorisation of Other Backward Classes (OBC)) குறித்த பிரச்சனையை ஆணையம் மூன்று வருடங்களாக  ஆய்வு செய்து வருகிறது.

Advertisment

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குள் துணை வகைமை : 

மத்திய அரசுப் பணிகள் மற்றும் மத்திய கல்வி நிலையங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதர பிற்பட்டோர்  பட்டியலில் 2,600 க்கும் மேற்பட்ட வகுப்பினர் இடம் பெற்றிருந்தாலும், ஒரு சில சமுதாயத்தினர் மட்டுமே 27% இடஒதுக்கீட்டு வசதியை அனுபவித்து வருகின்றன என்ற கருத்து உருவாகியதால் துணைப் பிரிவு குறித்த கேள்வி எழுந்தது.  மத்திய பட்டியலில் உள்ள புறக்கணிக்கப்பட்ட சமுதாயத்தினருக்குப் பயன்தர வேண்டி இதர பிற்படுத்தப்பட்டோர்  வகுப்பினருக்குள் உட்பிரிவை உருவாக்க அரசு முயற்சித்து வருகிறது.

மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் "அரசியல் சட்டத்தின் 340-வது பிரிவின்படி குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறப்பட்டு இந்த ஆணையம் 2017 அக்டோபர் 2 அன்று அமைக்கப்பட்டது. ஓய்வு பெற்ற நீதிபதி ஜி.ரோகிணி தலைமையிலான இந்த ஆணையம் 2017 அக்டோபர் 11 முதல் செயல்பாட்டுக்கு வந்தது.  ஆணையத்தின் தலைவர் நியமிக்கப்படும் நாளில் இருந்து இந்த 12 வாரங்களில் ஆணையம் தனது அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தற்போதைய மத்திய பட்டியலில் காணப்படும், தெளிவின்மை, குறைபாடுகள், எழுத்து அல்லது படியெடுத்தலில்  தவறுகள் போன்றவற்றை சரி செய்ய வேண்டிய அவசியம் இருப்பதால் அறிக்கையை சமர்ப்பிக்க மேலும் கால அவகாசம் தேவை என ஆணையம் கருதியதால், அதன் பதவிக்காலத்தை 6 மாதங்களுக்கு அதாவது 31.07.2020 வரை  நீட்டிப்பதாக  பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான  மத்திய அமைச்சரவை  இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில்  ஒப்புதல்  அளித்தது.

 ஆய்வு வரம்புகள்  : 

மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில்,   ஆணையத்தின் ஆய்வு வரம்புகள் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டன:

(i) இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் மத்திய பட்டியலில் இணைக்கப்பட்ட சாதிகள் / வகுப்புகள் இடையே இட ஒதுக்கீட்டின் பயன்களை சம அளவில் விநியோகிப்பது குறித்து ஆராயும்.

(ii) இத்தகைய இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் உட் பிரிவுகளுக்கான நுணுக்கம், வழிவகை, விதிகள் மற்றும் அளவீடுகளை உருவாக்குவது;  மற்றும்

(iii) சம்பந்தப்பட்ட சாதி/வகுப்புகள்/சார் சாதிகள்/இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் மையப் பட்டியலில் உள்ள பொருள் ஆகியவற்றை அடையாளம் காணும் பணியை மேற்கொள்வதுடன் அவற்றை சம்பந்தப்பட்ட உட் பிரிவுகளில் வகைப்படுத்துவது

(iv)இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மத்திய பட்டியலில் உள்ள புதிய இணைப்புகளை ஆய்வு செய்வது மற்றும் திரும்ப இடம் பெறுதல், தெளிவின்மை, குறைபாடுகள், எழுத்து அல்லது படியெடுத்தலில் தவறுகள் இருந்தால் திருத்துவதற்குப் பரிந்துரைப்பது

இது இதுவரை என்ன முன்னேற்றம் அடைந்துள்ளது?

கடந்த ஆண்டு ஜூலை 30ம் தேதி மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில், வரைவு அறிக்கை தயாராக இருப்பதாக ஆணையம் தெரிவித்தது.  ஆணையத்தின் பரிந்துரைகள் மிகப்பெரிய அரசியல் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும், நீதித்துறை மறுஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆணைக்குழுவின் தற்போதைய பதவிக்காலம் 2021 ஜனவரி 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.  ஆணையத்தின் அலுவலக மற்றும் நிர்வாகம் தொடர்பான செலவுகள்  2018 ஆம் ஆண்டில்  அரசியலமைப்பு அந்தஸ்து பெற்ற தேசிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆணையத்திலிருந்து (என்சிபிசி) எடுக்கப்படுகிறது.

அதன் கண்டுபிடிப்புகள்  என்ன?

கடந்த 5 ஆண்டுகளில் ஓபிசி ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்பட்ட 1.3 லட்சம் மத்திய அரசுப் பணிகாளியும், முந்தைய 3 ஆண்டுகளில் ஐ.ஐ.டி, என்.ஐ.டி, ஐ.ஐ.எம் எய்ம்ஸ் உள்ளிட்ட மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் ஓ.பி.சி சேர்க்கை பற்றிய தரவுகளை 2018 இல் ஆணையம் ஆய்வு செய்தது.

கண்டுபிடிப்புகள்:

* இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் உள்ள 25% சமுதாயத்தினருக்கு மட்டுமே, மத்திய அரசுப் பணிகளிலும், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களின் சேர்க்கையிலும் 97 விழுக்காடு இடங்கள் சென்றுள்ளது; அதிலும், 24.95 விழுக்காடு இடங்களை குறிப்பிட்ட 10 ஓபிசி சமுதாயத்தினருக்கு சென்றது;

*  மத்திய அரசின் இடஒதுகீட்டில் 983 ஓபிசி  உட்பிரிவு சமுதாயத்தினர்  பெரிய ஆதாயங்கள் எதுவும் பெற வில்லை ( ஒருவர் கூட இடஒதுக்கீடை அனுபவிக்கவில்லை)  ;

* 994 ஓபிசி உட்பிரிவுகள்  மத்திய அரசுப் பணிகளிலும், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களின் சேர்க்கையிலும் 2.68%  இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளன

மத்திய அரசுப் பணிகளில் ஓபிசி வகுப்பினரின் நிலை என்ன?

பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை வெளியிட்ட  2018-19 வருட அறிக்கையின்படி (ஆகஸ்ட் 28, 2020 அன்று ஆன்லைனில் அணுகப்பட்டது),   குரூப் -ஏ மத்திய அரசுப் பணியில் -  13.01%, குரூப் -பி  பணியில் 14.78%, குரூப்- சி  பணியில் 22.65 %(சபாய் கர்மாச்சாரி ஊழியர்கள் தவிர்த்து) குழு-சி  பணியில்  14.46%  (சஃபாய் கர்மாச்சாரி ஊழியர்கள் சேர்த்து)  என்ற அளவில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் பிரதிநிதித்துவம்  பெற்றுள்ளனர்.

மத்திய  அரசுப் பல்கலைக்கழகங்களில் ஒதுக்கீட்டின் கீழ், ஒரு பேராசிரியர்  கூட பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்து நியமிக்கப்படவில்லை என்று  கடந்த ஆண்டு தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டது.  95.2% பேராசிரியர்களும், 92.9% இணை பேராசிரியர்களும், 66.27% உதவி பேராசிரியர்களும் பொதுப் பிரிவினரை சேர்ந்தவர்கள் என்று தரவு  தெரிவித்தது (இதில் ஒதுக்கீட்டைப் பெறாத எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி ஆகியோரும் இருக்கலாம்). உதவி பேராசிரியர் மட்டத்தில்,  ஓபிசிகளின் பிரதிநிதித்துவம் வெறும் 14.38%  அளவில் தான் உள்ளது.

ஜூலை 21 ம் தேதி தேசியப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துடனான சந்திப்பில்,  இதர பிற்படுத்தப்பட்ட இடங்கள்  "என்எஃப்எஸ்" (NFS- None Found Suitable ) என அறிவிக்கப்பட்டதால், பொதுப் பிரிவினர் கொண்டு காலி இடங்கள் நிரப்பப்படுகின்றன என்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தெரிவிக்கப்பட்டது. தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆதாரங்களை மேற்கோள் காட்டி, ஷா நாடு முழுவதும் தரவுகளை சேகரிக்குமாறு ஆணையத்திடம் கோரிக்கை வைத்தார்.

கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Reservation Sc Obc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment