Omicron has higher asymptomatic carriage : கொரோனா வைரஸின் முந்தைய மாறுபாடுகளைக் காட்டிலும் அதிகப்படியான அறிகுறியற்ற தன்மையை (asymptomatic “carriage”) ஒமிக்ரான் பெற்றுள்ளது என்று, இந்த மாறுபாட்டினை முதன்முறையாக கண்டறிந்த தென் ஆப்பிரிக்காவில் நடத்தப்பட்ட இரண்டு சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த இரண்டு ஆய்வு முடிவுகளில் ஒமிக்ரானின் தொற்று முந்தைய மாறுபாடுகளைக் காட்டிலும் அதிக அளவில் பரவும் தன்மை கொண்டது என்பதையும், அதிகப்படியாக அறிகுறிகள் அற்ற கேரியர்களை கொண்டுள்ளது என்பதையும் உறுதி செய்துள்ளது.
இரண்டு ஆய்வு முடிவுகளும் ஒரு மிகப்பெரிய ஆய்வின் சிறிய பகுதிகளாகும். சப்-சஹாரா பகுதியில் எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட மக்களிடம் மாடர்னா தடுப்பூசியின் தாக்கம் மற்றும் செயல்திறன் எவ்வளவு உள்ளது என்பதை மதிப்பீடு செய்து வருகிறது உபுண்டு ஆராய்ச்சி. மற்றொரு ஆய்வு ஜான்சன் & ஜான்சனின் தடுப்பூசியின் செயல்திறனை மதிப்பிடும் 'சிசோன்கே' ஆய்வின் துணை ஆய்வாகும்.
தடுப்பூசிக்கு பிறகு ஒமிக்ரானுக்கு எதிரான நோயெதிர்ப்பு சக்தி எப்படி உள்ளது? புதிய ஆய்வு முடிவுகள்
ஆய்வு முடிவுகள் கூறுவது என்ன?
உபுண்டு ஆராய்ச்சியில் 230 பங்கேற்பார்களிடம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 31% பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது பின்பு கண்டறியப்பட்டது. ஒமிக்ரான் தொற்று ஏற்படுவதற்கு முன்பு நடத்தப்பட்ட கோவிட் 19 தடுப்பூசி ஆய்வுகளில் பெறப்பட்ட தரவுகளுக்கு முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக இருந்தது இந்த ஆய்வு முடிவுகள். முந்தைய ஆய்வுகளில் முதல் தடுப்பூசி வருகையின் போது SARS-CoV-2 PCR நேர்மறை விகிதம் <1% -2.4% என்ற அளவில் மட்டுமே இருந்தது என்று High Rate of Asymptomatic Carriage Associated with Variant Strain Omicron என்ற தலைப்பில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.
சிசோன்கேவின் ஆய்வுகளில் ஒமிக்ரான் தொற்று காலத்தில் 577 நபர்களிடம் நடத்தப்பட்ட சோதனைகளில் 16% என்ற விகிதத்தில் நோய் அறிகுறியற்ற கேரியர் இருந்தது. இது பீட்டா மற்றும் டெல்டா வெடிப்பின் போது 2.6% ஆக இருந்தது. தடுப்பூசி போடப்பட்டவர்களில் கூட அதிக கேரியர்கள் இருப்பதை ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.
தென்னாப்பிரிக்க மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில், ஆய்வின் முதன்மை ஆசிரியர் மருத்துவர் லாரன்ஸ் கோரே, நிறைய மக்கள் நோய் அறிகுறியற்றவர்களாக இருக்கின்றனர். எனவே இந்த வைரஸை பரப்பும் நபர்கள் யார் என்று அறிந்து கொள்ள முடியாது. ஆனால் நாம் நம்மை தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும். முகக்கவசங்கள் அணியுங்கள், கைகளை கழுவுங்கள், கூட்டங்களை தவிர்க்கவும். தடுப்பூசி டோஸ்களை முழுமையாக செலுத்திக் கொள்ளவும் என்று கூறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.