Sports Tamil News, Online Chess New Rules Explained: கொரோனா தொற்று காரணாமாக செஸ் போட்டிகளை நடத்துவது கடினம் என்பதால், ஆன்லைன் மூலம் செஸ் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்காக புதிய விதிகளை சர்வதேச செஸ் கூட்டமைப்பு வகுத்துள்ளது.
முன்பு ஆன்லைன் மூலம் நடத்திய விதிமுறைகளோடு இந்தமுறை சில புதிய விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
அதில் கேமராக்கள், வீடியோ கான்பரன்சிங் மென்பொருள் மற்றும் மைக்ரோஃபோன்கள் போன்றவை அடங்கும்.
அதோடு புதிய ஆன்லைன் செஸ் வீரருக்கான முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது
முழுக் கண்காணிப்பு:
புதிய விதி எண் 14 படி வீரரை சுற்றி கேமராக்கள் மற்றும் மைக்ரோஃபோன்கள் பொருத்தப்பட உள்ளது. வீரரிடம் இருந்து வரும் ஒவ்வொரு சத்தத்தையும் நுணுக்கமாக கேட்பதற்கு மைக்ரோஃபோன்கள். மற்றும் வீரர்களின் கண் அசைவுகளைக் கண்காணிக்க கூடுதல் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. வீரருக்கு பின் புறம் கலர் திரைகளை பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது. வீரர் சுட்டியை கிளிக் செய்யும் சத்தத்தை நடுவருக்கு கேட்கும் வண்ணம் மைக்ரோஃபோன்கள் பொருத்தப்பட உள்ளன .
இந்திய கிராண்ட்மாஸ்டர் ஸ்ரீநாத் நாராயணனிடம் இந்த விதியின் அவசியம் குறித்து கேட்டபோது,
" எல்லா நேரங்களிலும் வீரர்களால் பல கோணங்களில் உள்ள கேமராக்களுக்கு ஒத்துழைக்க முடியாது. அதே போல அவர்களால் முழுநேர வீடியோ கான்பரன்சிங்ல் ஈடுபட முடியுமா என்றால் கேள்விதான் எழுகின்றது. மோசமான இணைய இணைப்பு மட்டும் விதி மீறலுக்கு ஒரு காரணமாக அமையாது. ஆன்லைனில் விளையாடும் போது இது தவிர பல விதி மீறல்களும் வரும்" என்கிறார்.
மஞ்சள் மற்றும் சிவப்பு அட்டைகள்
இந்த புதிய விதிகள் ஒலிம்பியாட் மற்றும் ஆசிய நாடுகளின் போட்டிகளின் போதும் கண்டிப்பாக இடம் பெறும் என கூறப்பட்டுள்ளது. ஆன்லைன் போட்டியின் போது மஞ்சள் / சிவப்பு அட்டை முறை அறிமுகப் படுத்தப்படவுள்ளது. இந்த விதியின் படி ஒரு வீரரின் இணைய இணைப்பு அதிக முறை துண்டிக்கப்பட்டால் அவருக்கு எதிராக விளையாடும் வீரரே வெற்றி பெறுவார் என உறுதி செய்யப்படும்.
"இதை ஒரு எச்சரிக்கையாக வைத்து கொள்ளலாமே தவிர, முற்றிலும் செயல்படுத்த கூடாது. ஏனென்றால் நடுவர் தன் விருப்பத்திற்கு ஏற்றவாறு செயல்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. அதோடு எந்த பகுதியில் எப்போது மின்தடை ஏற்படுமென்றோ, இணையம் துண்டிக்கப்படும் என்றோ கூற முடியாது. இதை அதிக முறை பயிற்சி செய்வதன் மூலமே செயல்பாட்டுக்கு கொண்டு வர முடியும்" என்கிறார் கிராண்ட்மாஸ்டர் ஸ்ரீநாத்.
கலப்பின சதுரங்க விதிகள்
கலப்பின செஸ் முறையாக, ஒரு வீரர் ஆன்லைன் மூலம் விளையாடலாம், மற்றோருவர் செஸ் பலகையில் விளையாடலாம். இதை தொற்று பரவுவதில் இருந்து தடுப்பதற்காகவும் செஸ் விளையாட்டின் பாரம்பரியத்தை உயிர்ப்புடன் வை ப்பதற்காகவும் இந்த முறையை அறிமுகம் செய்யகிறார்கள்.
போட்டியாளர்களை ஏமாற்றும் வகையில் பயன்படுத்தப்படும் எந்த சாதனங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது . வீரரின் ஆடை,பைகள் என அனைத்தையும் போட்டிக்கு முன்பாக சோதனையிடபடும். இந்த சோதனைகளை மேற்கொள்ள நடுவர் அல்லது நடுவர் அங்கீகரித்த நபர் செயல்படுத்துவார். அதோடு அவர் வீரரின் அதே பாலினத்தவராக இருப்பார். தனிப்பட்ட எந்தவொரு மின்னணு சாதனங்களும் வீரரின் பையில் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கருப்பா வெள்ளையா
பொதுவாக செஸ் பலகையில் விளையாடும் போது வீரர்களுக்கான அட்டவணைகள் அமைக்கப்பட்டு இருக்கும். அதன்படி வீரர்கள் தங்களுக்கான நிறத்தை எடுத்து விளையாடுவார்கள். ஆனால் ஆன்லைனில் விளையாடும் போது சில நேரங்களில் மாறுதலாக வேறு வீரர் தெரிவு செய்யாத நிறம் அமையும். அப்படி அமையும் போது 10 நகர்வுகளுக்குள் வீரர்கள் நடுவரிடம் தெரியப்படுத்த வேண்டும். அப்படி10 நகர்வுகள் முடிந்த பிறகும் வீரர்கள் விளையாட்டை தொடர நினைத்தால், ஆட்டத்தின் முடிவு அவர்கள் செய்யும் நகர்வை பொறுத்தே அமையும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.