Advertisment

எண்ணெய் பத்திரங்கள் என்பது என்ன? அவை அரசாங்கத்திற்கு ஏற்படுத்தும் சிக்கல்கள் என்னென்ன?

UPA அரசு வழங்கிய எண்ணெய் பத்திரங்களுக்கு அரசாங்கம் செலுத்த வேண்டியிருப்பதால் எண்ணெய் விலைகளை குறைக்க முடியாது என்று நிதி அமைச்சர் கூறியுள்ளார். எண்ணெய் பத்திரங்கள் என்றால் என்ன, அவை அரசாங்கத்தின் கைகளை எந்த அளவிற்கு கட்டிப்போடுகின்றன?

author-image
WebDesk
New Update
எண்ணெய் பத்திரங்கள் என்பது என்ன? அவை அரசாங்கத்திற்கு ஏற்படுத்தும் சிக்கல்கள் என்னென்ன?

Udit Misra 

Advertisment

Explained: What are oil bonds, and to what extent do they tie the govt’s hands?: கடந்த ஓராண்டாக, பெட்ரோல், டீசல் மற்றும் இதர பெட்ரோலியப் பொருட்களின் சில்லறை விலை உயர்ந்து வருவதால், அரசாங்கம் விமர்சனத்தை சந்தித்து வருகிறது. கடந்த வாரம் உட்பட பல சந்தர்ப்பங்களில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் தலைமையிலான UPA அரசால் வெளியிடப்பட்ட எண்ணெய் பத்திரங்களுக்கான கடனுக்கு செலுத்த வேண்டியிருப்பதால், தற்போதைய அரசாங்கத்தால் வரிகளை (அதன் விளைவாக, விலைகளை) குறைக்க முடியாது என்று கூறி இத்தகைய விமர்சனங்களை எதிர்கொள்ள முயன்றார். பெட்ரோலியப் பொருட்களுக்கு வரிவிதிப்பு என்று வரும்போது எண்ணெய் பத்திரங்கள் அரசாங்கத்தை எவ்வளவு தூரம் பின்னுக்குத் தள்ளுகின்றன?

எரிபொருள் விலையில் வரி எவ்வளவு விதிக்கப்படுகிறது?

உள்நாட்டு சில்லறை விலையில் இரண்டு கூறுகள் உள்ளன. அவை கச்சா எண்ணெயின் விலை மற்றும் அடிப்படை விலையில் விதிக்கப்படும் வரிகள். இவை சேர்ந்து சில்லறை விலையை உருவாக்குகின்றன. ஒவ்வொரு பொருளுக்கும் வரிகள் மாறுபடும். உதாரணமாக, தற்போதைய நிலவரப்படி, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கான மொத்த சில்லறை விலையில் 50% வரியும், ஒரு லிட்டர் டீசலுக்கான மொத்த சில்லறை விலையில் 44% வரியும் விதிக்கப்படுகிறது.

நிதி அமைச்சர் கூறியது என்ன?

நிதி அமைச்சர் இரண்டு முக்கிய புள்ளிகளை முன்வைத்தார். ஒன்று, உக்ரைனில் நடந்து வரும் மோதல்கள் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு காரணம் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். இரண்டு, வரிகள் விஷயத்தில், UPA காலத்தின் எண்ணெய் பத்திரங்களை அவர் குற்றம் சாட்டினார். "... எண்ணெய் பத்திரங்கள் என்ற பெயரில் ஒரு தசாப்தத்திற்கு முன்னர் நுகர்வோருக்கு வழங்கப்பட்ட மானியத்தை இன்றைய வரி செலுத்துவோர் செலுத்துகிறார்கள், மேலும் பத்திரங்களின் மீட்பு 2026 வரை தொடர்வதால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அவர்கள் தொடர்ந்து செலுத்துவார்கள்," என்று அவர் ராஜ்யசபாவில் கூறினார்.

2021 டிசம்பரில், நாடாளுமன்றத்தில் பேசிய அவர், 2008ல் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையிலிருந்து மேற்கோள் காட்டினார்: “எண்ணெய் நிறுவனங்களுக்குப் பத்திரங்களை வழங்குவதும் பற்றாக்குறையை ஏற்றுவதும் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு அல்ல என்பதை தேசம் நினைவில் கொள்ள விரும்புகிறேன் (இதனால் எரிபொருள் விலை உயர்ந்துள்ளது). இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய நமது சுமையை மட்டுமே நமது குழந்தைகளுக்கு நாம் விட்டு வைக்கிறோம்.

எண்ணெய் பத்திரங்கள் என்றால் என்ன? அவை ஏன் வழங்கப்பட்டன?

உள்நாட்டு நுகர்வோருக்கு எரிபொருள் விலைகள் மிக அதிகமாக இருந்தபோது, ​​கடந்த காலங்களில் அரசாங்கங்கள் எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களை (OMCs) நுகர்வோரிடம் முழு விலையையும் வசூலிப்பதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டனர்.

ஆனால், எண்ணெய் நிறுவனங்கள் வருமானம் பெறவில்லை என்றால், அந்நிறுவனங்கள் லாபமற்றதாகிவிடும். இதை நிவர்த்தி செய்ய, வருமான வித்தியாசத்தை செலுத்துவதாக அரசு கூறியது. ஆனால் மீண்டும், அரசாங்கம் அந்தத் தொகையை ரொக்கமாகச் செலுத்தினால், அது அர்த்தமற்றதாக இருக்கும், ஏனென்றால் OMC களுக்கு பணம் செலுத்துவதற்கு அதே நபர்களிடம் அரசாங்கம் வரி வசூலிக்க வேண்டியிருக்கும்.

இங்குதான் எண்ணெய் பத்திரங்கள் வருகின்றன. ஒரு எண்ணெய் பத்திரம் என்பது ஒரு IOU அல்லது அரசாங்கத்தால் OMC களுக்கு வழங்கப்படும் ஒரு உறுதிமொழி நோட்டு ஆகும், இது எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய பணத்திற்கு பதிலாக அரசாங்கம் வழங்கியது, இதனால் எண்ணெய் நிறுவனங்கள் பொதுமக்களிடம் எரிபொருள் விலையின் முழு கட்டணத்தையும் வசூலிக்காது.

10 ஆண்டுகளில் 1,000 கோடி ரூபாயை எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனத்திற்கு அரசாங்கம் செலுத்தும் என்று ஒரு எண்ணெய் பத்திரம் கூறுகிறது. இந்த பணம் உடனடியாக வழங்கப்படாததற்காக எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களுக்கு இழப்பீடு வழங்க, அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் 8% (அல்லது ரூ. 80 கோடி) மானியத்தை பத்திரம் முதிர்வடையும் வரை அந்நிறுவனங்களுக்குச் செலுத்தும்.

எனவே, அத்தகைய எண்ணெய் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம், அன்றைய அரசாங்கம் எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களின் லாபத்தை அழிக்காமல் அல்லது ஒரு பெரிய பட்ஜெட் பற்றாக்குறை இல்லாமல் நுகர்வோரை பாதுகாக்க / மானியம் வழங்க முடிந்தது.

கடந்த காலங்களில் பல அரசாங்கங்களால் எண்ணெய் பத்திரங்கள் வழங்கப்பட்டன. ஆனால் இப்போது கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளவை UPA அரசாங்கம் வெளியிட்டவை.

அட்டவணை 1 காட்டுவது போல், பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் NDA அரசாங்கம் 2014 இல் பொறுப்பேற்றபோது, ​​2015 மற்றும் 2026 க்கு இடையில் ரூ. 1.34 லட்சம் கோடி மதிப்புள்ள எண்ணெய் பத்திரங்களுக்கு பணம் செலுத்த வேண்டியிருந்தது.

UPA காலத்தின் எண்ணெய் பத்திரங்களில் NDA அரசாங்கம் எவ்வளவு திருப்பிச் செலுத்தியுள்ளது?

முன்னர் விவாதிக்கப்பட்டபடி, எண்ணெய் பத்திரங்களில் இரண்டு கூறுகள் செலுத்தப்பட வேண்டும்: வருடாந்திர வட்டி செலுத்துதல் மற்றும் பத்திரத்தின் கால அளவின் முடிவில் இறுதி செலுத்துதல். இத்தகைய பத்திரங்களை வழங்குவதன் மூலம், ஒரு அரசாங்கம் முழு கட்டணத்தையும் 5 அல்லது 10 அல்லது 20 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கலாம், மேலும் இடைக்காலமாக வட்டி செலவுகளை மட்டும் செலுத்தலாம். 2015 மற்றும் 2021 க்கு இடையில், NDA அரசாங்கம் நான்கு செட் எண்ணெய் பத்திரங்களை முழுமையாக செலுத்தியுள்ளதாக அட்டவணை 1 காட்டுகிறது. இது மொத்தம் ரூ.13,500 கோடி.

ஒவ்வொரு ஆண்டும், பாஜக அரசாங்கம் முதிர்ச்சியடையாத அனைத்து பத்திரங்களுக்கும் வட்டி விகிதத்தை செலுத்த வேண்டியிருந்தது. விளக்கப்படம் 1 ஒவ்வொரு ஆண்டும் வட்டி செலுத்தும் தொகையைக் காட்டுகிறது. 2014 மற்றும் 2022 க்கு இடையில், பாஜக அரசாங்கம் மொத்தமாக ரூ.93,686 கோடியை வட்டி மற்றும் அசலுக்குச் செலவழித்துள்ளது.

வரிகளைக் குறைப்பதில் இருந்து நிதி அமைச்சகத்தைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு இந்தத் தொகை பெரியதா?

பெட்ரோலியப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட அனைத்து வகையான வரிகளிலிருந்தும் அரசாங்கம் ஈட்டிய பணத்துடன் செலவுகளை ஒப்பிடுவோம். விளக்கப்படம் 2, பெட்ரோலிய பொருட்களிலிருந்து மத்திய அரசும் மாநிலமும் இணைந்து ஈட்டிய மொத்த வருவாயைக் காட்டுகிறது, இந்த விளக்கப்படம் வரவு-செலவு குறித்தத் தகவலை வழங்குகிறது.

வரிக் குறைப்பைக் கட்டுப்படுத்தும் அளவுக்குப் பெரிய தொகை உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளிக்க மூன்று வழிகள் உள்ளன.

முதலாவதாக, 2014-15 ஆம் ஆண்டில் மொத்த வருவாயில் வெறும் 7% மட்டுமே பத்திரங்களின் மொத்தச் செலவுகளுக்கு செலுத்தப்பட்டுள்ளதை கவனிக்க வேண்டும். வருடங்கள் செல்லச் செல்ல, இந்தத் துறையில் இருந்து பெறப்படும் வரிகள் உயர்ந்துள்ளதால், இந்த சதவீதம் குறைந்துள்ளது.

இதையும் படியுங்கள்: கடுமையான நோய் தொற்றுக்கு எதிராக கூடுதல் பாதுகாப்பு அளிக்கும் 4ஆம் டோஸ் – புதிய ஆய்வு

இரண்டாவது, பெட்ரோலியப் பொருட்களுக்கு வரி விதிப்பதன் மூலம் 2014 மற்றும் 2022 க்கு இடையில் அரசாங்கம் (மத்திய மற்றும் மாநிலங்கள் இரண்டும்) ஈட்டிய மொத்த வருவாயைப் பார்ப்பது. இந்த தொகை ரூ.43 லட்சம் கோடிக்கும் அதிகம். அதாவது, எண்ணெய் பத்திரங்களுக்கு இன்றுவரை NDA அரசாங்கம் செலுத்திய மொத்த தொகை, இந்தக் காலகட்டத்தில் ஈட்டிய மொத்த வருவாயில் வெறும் 2.2% மட்டுமே.

மூன்றாவது வழி, 2014-15 ஆம் ஆண்டில் ஒரே ஒரு வகையான வரி, அதாவது கலால் வரி மூலம் மத்திய அரசு ஈட்டிய மொத்த வருவாய் ரூ. 99,000 கோடிக்கும் அதிகமாக இருந்தது. (இந்த தரவு புள்ளி விளக்கப்படம் 2 இல் தனித்தனியாக கொடுக்கப்படவில்லை.)

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், NDA அரசாங்கம் எண்ணெய் பத்திரங்களுக்கு செலுத்திய தொகையை, ​​இந்தத் துறையில் ஈட்டப்பட்ட வருவாயுடன் ஒப்பிடும்போது செலுத்துதல் பெரியதாக இல்லை.

அப்படியிருந்தும், அத்தகைய பத்திரங்களை வெளியிடுவது மோசமான யோசனையல்லவா?

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பத்திரங்களை வழங்குவது எதிர்கால சந்ததியினருக்குப் பொறுப்பைத் தள்ளும் என்று குறிப்பிட்டார். ஆனால் ஒரு பெரிய அளவிற்கு, அரசாங்கத்தின் பெரும்பாலான கடன்கள் பத்திரங்கள் வடிவில் உள்ளன. இதனால்தான் ஒவ்வொரு ஆண்டும் நிதிப்பற்றாக்குறை (அடிப்படையில் சந்தையில் இருந்து அரசாங்கத்தின் கடன் வாங்கும் நிலை) மிகவும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறது.

மேலும், இந்தியா போன்ற ஒப்பீட்டளவில் ஏழ்மையான நாட்டில், அனைத்து அரசாங்கங்களும் ஏதேனும் ஒரு வகையான பத்திரங்களைப் பயன்படுத்துவதற்கு கட்டாயப்படுத்தப்படுகின்றன. பொதுத்துறை வங்கிகளுக்கு மறுமூலதனம் செய்ய ரூ.2.79 லட்சம் கோடி மதிப்பிலான பத்திரங்களை (எண்ணெய்ப் பத்திரங்களை விட இரண்டு மடங்கு) வெளியிட்ட தற்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசையே எடுத்துக் கொள்ளுங்கள். இந்த பத்திரங்களுக்கான திருப்பிச் செலுத்தல்கள் 2036 வரை அரசாங்கங்களால் செலுத்தப்படும். பெங்களூரில் உள்ள டாக்டர் பி ஆர் அம்பேத்கர் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் என் ஆர் பானுமூர்த்தியின் கூற்றுப்படி, பத்திரங்களை வெளியிடுவதில் முக்கிய ஞானம் என்னவென்றால், ஒரு அரசாங்கம் இந்த கருவியை பொருளாதாரஉற்பத்தி திறனை அதிகரிக்க பயன்படுத்த வேண்டும் என்று கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Explained Crude Oil Prices Economy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment