US troops have left Afghanistan : ஆப்கானிஸ்தானில் இருந்து தங்கள் நாட்டின் பிரஜைகளையும், ஆபத்தில் இருந்த ஆயிரக்கணக்கான ஆப்கானியர்களையும் பத்திரமாக அமெரிக்க மீட்ட பிறகு, 2001ம் ஆண்டுக்கு பிறகு முதன் முறையாக ஆப்கானிஸ்தானில் ஒரு அமெரிக்க துருப்பும் இல்லை.
கடந்த இரண்டு வாரங்களில் அமெரிக்காவின் முயற்சியின் ஒரு பகுதியாக காபூல் விமான நிலையத்தில் இருந்து 1 லட்சத்து 14 ஆயிரம் விமானம் மூலம் மீட்கப்பட்டுள்ளனர்.
ஆனால் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவத்தின் முடிவு, பைடன் மற்றும் அவரது நிர்வாகத்திற்கு பல முக்கிய கேள்விகளை எழுப்புகிறது.
ஆப்கானிஸ்தானில் தற்போதுள்ள அமெரிக்கர்கள் மற்றும் ஆபத்து நிலையில் இருக்கும் ஆப்கானியர்களுக்கு என்ன நடக்கும்?
அமெரிக்கா இதுவரை 5400 அமெரிக்கர்களை ஆகஸ்ட் 14ம் தேதியில் இருந்து மீட்டுள்ளது. ஒரு சிறிய அளவு அமெரிக்க குடிமக்கள் ஆப்கானிஸ்தானில் இருப்பதையே தேர்வு செய்துள்ளனர். அவர்கள் தங்களின் குடும்பத்துடன் அங்கே வசித்து வருகின்றனர்.
அமெரிக்க ராணுவம் வெளியேறிய பிறகும், அமெரிக்கர்கள் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற விரும்பும் இதர நபர்களை பாதுகாப்பாக தாலிபான்கள் வெளியேற்ற அனுமதிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக பைடன் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆனால் விமான நிலையம் செயல்படவில்லை என்றால் அந்த குடிமக்கள் எப்படி வெளியேற முடியும் என்ற கவலைகள் தற்போது ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படையினருக்கு மொழி பெயர்ப்பாளர்களாக பணியாற்றியவர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் பெண்கள் உரிமைக்காக போராடியவர்கள் என பல்லாயிர கணக்கானோர் தற்போது ஆப்கானிஸ்தானில் தனித்து விடப்பட்டுள்ளனர்.
அவர்களின் நிலைமை எப்படி இருக்கும் என்று தெளிவாக தெரியவில்லை. ஆனால் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தாலிபான்கள் செயல்படலாம் என்று பலரும் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் இதர நாடுகள் இணைந்து ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியிட்ட கூட்டறிக்கையில், தாலிபான்கள், அனைத்து வெளிநாட்டினர் மற்றும் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள தேவையான பயண அனுமதி பெற்றுள்ள ஆப்கானியர்களை வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதிப்பதாக தாலிபான்கள் வாக்குறுதி கொடுத்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்கப்படைகள் நாட்டை விட்டு வெளியேறிய நிலையில் காபூல் விமான நிலையம் என்ன ஆகும்?
கடந்த இரண்டு வாரங்களாக அமெரிக்கா காபூலின் ஹமித் கர்சாய் சர்வதேச விமான நிலையத்தை, 6000 துருப்புகள் உதவியுடன் கைப்பற்றி, அதனை இயக்கி வந்தது. கத்தார் மற்றும் துருக்கி போன்ற அரசாங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அங்கிருந்து பொதுமக்கள் விமான நடவடிக்கைகளைத் தொடர உதவியை கோரி வருகின்றனர் தாலிபான்கள். இதன் மூலம் மட்டுமே மக்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற முடியும்.
துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சர் மெவ்லுட் கவுசோக்லு, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மீண்டும் விமான நிலையம் திறக்கப்படுவதற்கு முன்பு அதனை பழுதுபார்க்க வேண்டும் என்று கூறினார்.
நேட்டோ பணியின் ஒரு பகுதியாக செயல்படும் துருக்கி, கடந்த ஆறு ஆண்டுகளாக அந்த விமான நிலையத்தின் பாதுகாப்பிற்கு பொறுப்பு வகித்தது. வெளிநாட்டுப் படைகள் கட்டுப்பாட்டிற்குப் பிறகு விமான நிலையத்தைத் திறந்து வைப்பது ஆப்கானிஸ்தான் உலகத்துடன் இணைந்திருப்பது மட்டுமல்லாமல் உதவிப் பொருட்கள் மற்றும் செயல்பாடுகளைப் பராமரிக்கவும் உதவியாக இருக்கும்.
எதிர்காலத்தில் அமெரிக்கா மற்றும் தாலிபான்களின் உறவு எவ்வாறு இருக்கும்?
எந்த ஒரு அரசியல் சார் உறுப்பினர்களையும் ஆப்கானிஸ்தானில் விட்டுவர திட்டமிடவில்லை என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. தாலிபான்களின் நடவடிக்கைகளின் அடிப்படையில் தான் எதிர்காலத்தில் என்ன செய்வது என்பது தொடர்பாக முடிவு மேற்கொள்ளப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
ஆனால் பைடனின் நிர்வாகம், அந்நாட்டில் நாட்டில் ஒரு மனிதாபிமான மற்றும் பொருளாதார நெருக்கடி ஏற்படாது என்பதை எவ்வாறு உறுதி செய்ய முடியும் என்பதை தீர்மானிக்க வேண்டும்.
ஆப்கானிஸ்தானின் மக்கள் தொகையில் பாதி பேர், அதாவது 18 மில்லியன் நபர்களுக்கு உதவி தேவை. மேலும் ஆப்கானிஸ்தானில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் பாதி பேர் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரிட்டன் உட்பட சில நாடுகள் தாலிபான்களை ஆப்கானிஸ்தான் அரசு என்று இருதரப்பும் அங்கீகரிக்கக் கூடாது என்று கூறியுள்ளன.
இஸ்லாமிக் ஸ்டேட்டால் எத்தகைய அச்சுறுத்தல்கள் உள்ளன?
அமெரிக்காவுக்கும் தலிபானுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் ஒரு பகுதி ஐ.எஸ். தீவிரவாதிகளின் அச்சுறுத்தலாக இருக்கலாம்.
வாஷிங்டன் மற்றும் தாலிபான்கள் எவ்வாறு கூட்டாக ஒருங்கிணைந்து இஸ்லாமிக் ஸ்டேட் குழுவிற்கு எதிரான தாக்குதலை நடத்த தகவல்களை பகிர்வார்கள் என்ற கேள்விகளும் உள்ளது.
கொரசன் என்ற வரலாற்று புகழ்மிக்க இடத்தை பின்பற்றி பெயர் வைத்துக் கொண்ட ஐ.எஸ்.ஐ.எஸ்.கே. தீவிரவாத அமைப்பு, 2014ம் ஆண்டுக்கு பிற்பாதியில் கிழக்கு ஆப்கானிஸ்தானில் உருவாகி, கடுமையான தீவிரவாத தாக்குதல் காரணமாக ஒரு பெயரை பெற்றுக் கொண்டது.
ஆகஸ்ட் 26ம் தேதி அன்று காபூல் விமான நிலையத்திற்கு வெளியே நடைபெற்ற தற்கொலைப் படை தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக் கொண்டது. இந்த தாக்குதலில் 13 அமெரிக்க படையினர் மற்றும் நூற்றுக்கணக்கான ஆப்கானியர்கள் கொல்லப்பட்டனர்.
அந்த குழுவுக்கு எதிராக அமெரிக்கா குறைந்தது இரண்டு ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது மற்றும் பைடன் தனது நிர்வாகம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் என்று கூறினார்.
ISIS-K தாலிபான்களின் தீவிர எதிரி. ஆனால் இந்த மாதம் ஆப்கானிஸ்தானின் மேற்கத்திய ஆதரவு அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்த உறுதியற்ற தன்மையை இந்த இயக்கம் பயன்படுத்தியதாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் நம்புகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.