பாஜக வெளியிட்ட புதிய மத்திய அமைச்சரவை அமைச்சர்களின் பட்டியலில் தமிழ்நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள மண்டலமான பேச்சுவழக்கில் உள்ள 'கொங்குநாடு' என குறிப்பிட்டதன் மூலம் தமிழ்நாட்டிலும், சமூக ஊடகங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் ஒரு விவாதத்தைத் தூண்டியுள்ளது. புதிய அமைச்சர் எல்.முருகன் ‘கொங்குநாடு’ நாட்டைச் சேர்ந்தவர் என்று பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஆளும் திமுக-காங்கிரஸ் கூட்டணி, பாஜக மாநிலத்தை பிளவுபடுத்த முயற்சிக்கிறது, பாஜகவின் திட்டம் வெற்றிபெறாது என்று கூறி குற்றம் சாட்டுவதற்கு வழிவகுத்தது.
கொங்கு நாடு எங்கே இருக்கிறது?
‘கொங்கு நாடு’ என்பது ‘பின் கோடு’ எண்களைக் கொண்ட ஒரு இடமோ அல்லது எந்த மண்டலத்திற்கும் முறையாக வழங்கப்பட்ட பெயரோ அல்ல. இது மேற்கு தமிழ்நாட்டின் ஒரு பகுதிக்கு பொதுவாக பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் ஒரு பெயர்.
தமிழ் இலக்கியத்தில், இது பண்டைய தமிழகத்தின் ஐந்து நிலப் பகுதிகளில் ஒன்றாக குறிப்பிடப்பட்டது. சங்க இலக்கியத்தில் ஒரு தனி பிரதேசமாக ‘கொங்குநாடு’ பற்றிய குறிப்புகள் உள்ளன.
தற்போதைய தமிழ்நாட்டில், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களையும், திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம் மற்றும் வேடசந்தூர், தருமபுரி மாவட்டத்தின் பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய ஒரு மண்டலத்தைக் குறிக்க இந்த பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படுகிறது.
இந்த மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க அளவில் வசிக்கும் ஓபிசி சமூகமான கொங்கு வேளாளர் கவுண்டர் என்பவர்களிடம் இருந்து இந்த பெயர் உருவானது.
இந்த மண்டலத்தில் நாமக்கல், சேலம், திருப்பூர் மற்றும் கோயம்புத்தூரில் முக்கிய வணிக நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை மையங்கள் உள்ளன. இது சமீப காலங்களில் அதிமுக கோட்டையாகவும் கருதப்படுகிறது. மேலும், மாநிலத்தில் இந்த பகுதியில் பாஜகவின் செல்வாக்கு குறிப்பிட்ட அளவில் உள்ளது.
இந்த சர்ச்சை எப்படி தொடங்கியது?
பாஜக வெளியிட்டுள்ள பட்டியலில் ஒவ்வொரு புதிய அமைச்சருக்கும் அவர்கள் எந்த இடத்தைச் சேர்ந்தவர் மற்றும் மாநிலத்தின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, மேற்கு வங்கம், ஜல்பைகுரி-ஐச் சேர்ந்த அமைச்சர் ஜான் பார்லா, குஜராத்தின் சுரேந்திரநகரில் இருந்து டாக்டர் முஞ்சபரா மகேந்திரபாய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் எல்.முருகனை “கொங்குநாடு, தமிழ்நாடு” என்று குறிப்பிடுகிறது.
மாநிலத்தை பிளவுபடுத்தும் முயற்சி தொடர்பாக சமூக ஊடகங்களில் விவாதத்தில் ஈடுபட்டபோது, சில பாஜக தளங்கள் 'கொங்குநாடு' என்ற கருத்தை ஆதரிப்பதைக் காண முடிந்தது - அண்மையில் அவர்கள் அதிமுகவுடன் கூட்டணியில் வென்ற இடங்களைத் தவிர, ஒரு மாநிலத்தில், தங்கள் கட்சிக்கு அதிக செல்வாக்கு இல்லாத நிலையில் இப்படியான கருத்து காண முடிந்தது.
திட்டமிடப்பட்ட பிளவுபடுத்துதல் என்ற குற்றச்சாட்டுகளுக்கு ஏதேனும் ஆதாரம் உள்ளதா?
தெலங்கானா அல்லது உத்தரகாண்ட் மாநிலங்கள் போல இல்லாமல், தமிழ்நாட்டின் நவீன அரசியல் வரலாற்றில் தனி கொங்குநாடு பற்றி ஒருபோதும் கோரிக்கை அல்லது விவாதங்கள் இருந்ததில்லை. எனவே, விவாதத்தில் எந்த அரசியல் அல்லது சமூக பொருத்தங்களும் இல்லை. இருப்பினும், மத்திய அரசு என்பதை விட ஒன்றிய அரசு என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிற திமுகவின் உறுதியான நிலைப்பாட்டிற்கு பா.ஜ.க.விடம் இருந்து வெளிப்படும் பதிலடி என்று பலரும் இதைப் பார்க்கிறார்கள்.
“இதில் உடனடி திட்டம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. அவர்கள் உண்மையில் ஒரு விதையை நட்டு, அந்த விவாதத்தைத் தூண்டியுள்ளனர். இனிமேல், ‘கொங்குநாடு’ கோரிக்கை ஒரு புதிய பிரச்சினையாக இருக்காது ”என்று முன்னாள் அதிமுக அமைச்சர் ஒருவர் கூறினார். மற்றொரு அதிமுக அமைச்சர், ‘கொங்குநாடு’ என்ற கருத்து பாஜக வாக்குகளுக்காக முன்னெடுத்தால் பாஜகவுக்கே திரும்ப பாதிப்பை ஏற்படுத்தும்.
இருப்பினும், தேர்தல் அரசியலில், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-க்கு ஓரளவு செல்வாக்கு உள்ள ஒரே மண்டலமாக இது கருதப்படுகிறது. அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாஜக வென்ற நான்கு இடங்களில் இரண்டு இடங்கள் மேற்கு தமிழகத்தில் உள்ளன.
இந்த குற்றச்சாட்டுகளை பாஜக மறுத்துள்ளதா?
பாஜக உண்மையில் மாநிலத்தை பிரிக்கும் எந்த நடவடிக்கையையும் மறுத்துள்ளது. இருப்பினும், இது ஆந்திரா மற்றும் உத்தரபிரதேசம் மாநிலங்களைப் பிரித்ததைக் குறிக்கிறது.
“வல்லநாடு எனது பகுதிக்கு அருகில் உள்ளது. வருசநாடு தேனிக்கு அருகில் உள்ளது. இந்த அனைத்து நாடுகளிலிருந்தும் (மண்டலங்களிலிருந்தும்) மாநிலங்களை உருவாக்க முடியுமா? கொங்குநாடு விவாதத்திற்கு திமுக ஏன் பயப்படுகிறது? எல்லாமே தமிழ்நாடுதான். கவலைப்பட ஒன்றுமில்லை” என்று பாஜக சட்டப்பேரவை கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். மேலும், “ஆனால், அதே நேரத்தில், ஆந்திரா, உ.பி. இரண்டாகப் பிரிக்கப்பட்டது என்பதையும் மனதில் வைக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, இது மக்களின் விருப்பமாக இருந்தால், அதை நிறைவேற்றுவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்” என்று கூறினார்.
பாஜக மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜனிடம் மாநிலத்தை இரண்டாகப் பிரிக்க மையம் திட்டமிட்டுள்ளதா என்று ஊடகவியலாளர்கள் கேட்டபோது, “இது முதல் கட்டம்” என்றார். "மற்ற மாநிலங்களிலும் இதுபோன்று நடந்துள்ளது. தெலங்கானா ஒரு உதாரணம். ஒன்றிய அரசு (மத்திய அரசு) பற்றி பேசுவது அவர்களின் விருப்பம் என்றால், அதை மக்கள் ‘கொங்குநாடு’ என்று அழைக்க வேண்டும் என்பதும் மக்கள் விரும்புகிறார்கள்” என்றார்.
கரு.நாகராஜன் பின்னர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், “இது வெறும் சமூக ஊடக விவாதம். இந்த விவாதத்தின் தோற்றம் குறித்து கூட எனக்குத் தெரியவில்லை. ‘கொங்குநாடு’ பற்றிப் பேசுவது, தமிழ் கட்சிகளைப் பேசுவது போன்றது. யுபிஏ மற்றும் என்.டி.ஏ உடன் மத்தியில் கூட்டணி வைத்திருந்துவிட்டு இப்போது அதை ‘ஒன்றிய அரசு’ என்று அழைக்கிறது. பாஜகவிடம் அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் இல்லை. எப்படியிருந்தாலும், இதுபோன்ற பிரச்சினையில் மக்களின் விருப்பம் முக்கியம்.” என்று கூறினார்.
பாஜகவை எதிர்ப்பவர்கள் இதை எவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளனர்?
தமிழ்நாட்டில் ஆளும் கூட்டணி கட்சி தலைவர்கள் தமிழ்நாட்டை பிரிக்க முடியாது என்று கூறியுள்ளனர். இபாஜகவின் இந்த திட்டத்தை காங்கிரஸ் கண்டித்துள்ளது.
“இதுபோன்ற அறிக்கைகள் குறித்து யாரும் கவலைப்படத் தேவையில்லை. தமிழ்நாடு இப்போது திமுக அரசாங்கத்தின் கீழ் பாதுகாப்பாக உள்ளது” என்று திமுக எம்.பி. கனிமொழி கூறினார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியும் தமிழ்நாட்டை பிரிக்க முடியாது என்று கூறினார். “அது நடந்தால், அது ஒரு முன்னுதாரணத்தை அமைத்து, இதுபோன்ற பல மாநிலங்களை உருவாக்க வழிவகுக்கும். தமிழ்நாட்டைப் பிரிப்பது என்பது ஒரு சாத்தியமற்ற கனவு, சுயநலத்துக்காக சில அரசியல் கட்சிகள் அதற்காக அழுத்தம் கொடுக்க விரும்பினாலும்… பாஜகவின் இந்த திட்டம் வெற்றிபெறாது; நாங்கள் இதை கடுமையாக கண்டிக்கிறோம்” என்று கே.எஸ்.அழகிரி கூறினார்.
அமமுக தலைவர் டிடிவி தினகரன், இதுபோன்ற “ஆபத்தான குரல்களை” அரசாங்கம் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்றார். எந்தவொரு பிரிவினரிடமிருந்தும் புதிய மாநிலத்திற்கான கோரிக்கை இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.
அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமியும், மாநிலத்தைப் பிளவுபடுத்துவது குறித்த விவாதங்களைத் தூண்டுவோரை கண்டித்தார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.