Advertisment

நீதிபதிகளை தேர்வு செய்யும் குழுவில் அரசுப் பிரதிநிதி; கிரண் ரிஜிஜூ கடிதம் சொல்வது என்ன?

இந்திய தலைமை நீதிபதிக்கு மத்திய சட்ட அமைச்சர் கடிதம்; நீதிபதிகளை தேர்வு செய்யும் குழுவில் அரசாங்க பிரதிநிதியைச் சேர்க்க வலியுறுத்தல்; தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தில் இருந்து இது எவ்வாறு வேறுபட்டது?

author-image
WebDesk
New Update
நீதிபதிகளை தேர்வு செய்யும் குழுவில் அரசுப் பிரதிநிதி; கிரண் ரிஜிஜூ கடிதம் சொல்வது என்ன?

இந்திய தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட்டுக்கு எழுதிய கடிதத்தில், மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, நீதிபதிகளின் தேர்வுப் பட்டியலில், முடிவெடுக்கும் பணியில், அரசு பிரதிநிதியைச் சேர்க்க பரிந்துரைத்துள்ளதாக, இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் உயர் மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கான "மதிப்பீட்டுக் குழுவில்" அரசு பிரதிநிதி சேர்க்கப்பட வேண்டும் என்பது பரிந்துரை. அந்தக் கடிதம் இன்னும் கொலீஜியத்தால் விவாதிக்கப்படவில்லை.

Advertisment

உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமன முறை தொடர்பாக மத்திய அரசுக்கும் உச்ச நீதிமன்றத்துக்கும் இடையே நடந்து வரும் மோதலின் அடுத்த கட்ட நிகழ்வு இதுவாகும். கொலிஜியம் பரிந்துரைத்த நியமனங்களை மத்திய அரசு "நியமனம்" செய்யாமல் இருக்கும் நிலையில், கிரண் ரிஜிஜூவின் கடிதம், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி பெங்களூரு வழக்கறிஞர்கள் சங்கம் செய்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்த பின்னர் வந்துள்ளது.

இதையும் படியுங்கள்: டால்பின்களின் தொடர்பு திறனை பாதிக்கும் ஒலி மாசுபாடு: புதிய ஆய்வு என்ன சொல்கிறது?

நீதிபதிகள் நியமனம் தொடர்பான நடைமுறை குறிப்பாணை இன்னும் "இறுதிப்படுத்தப்படாமல் நிலுவையில் உள்ளது" மற்றும் "எவ்வளவு சிறந்த முறையில் அதை நெறிப்படுத்தலாம் என்பதற்கான பரிந்துரைகளை" வழங்கியது ஆகியவற்றை கடிதம் சுட்டிக் காட்டியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.

மத்திய அரசின் சமீபத்திய பரிந்துரை, கடந்த கால கட்டங்களிலிருந்து எவ்வாறு வேறுபட்டது என்பதை இந்தியன் எக்ஸ்பிரஸ் விளக்குகிறது.

கிரண் ரிஜிஜுவின் கடிதம் என்ன சொல்கிறது?

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜுவின் கடிதத்தின்படி, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற கொலீஜியங்களில் அரசாங்கப் பிரதிநிதிகள் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். கொலீஜியம் மூத்த நீதிபதிகளை மட்டுமே உள்ளடக்கிய தற்போதைய அமைப்பிலிருந்து இது ஒரு பெரிய மாற்றமாக இருக்கும்.

உச்ச நீதிமன்ற கொலீஜியம் தலைமை நீதிபதி மற்றும் உச்ச நீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகளைக் கொண்டுள்ளது. உயர் நீதிமன்ற கொலீஜியம் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மற்றும் குறிப்பிட்ட நீதிமன்றத்தின் இரண்டு மூத்த நீதிபதிகளைக் கொண்டுள்ளது. முக்கியமாக, கொலீஜியத்தால் செய்யப்பட்ட பரிந்துரைகள் பிணைக்கப்பட்டுள்ளன: அரசாங்கம் கவலைகளைக் சுட்டிக் காட்டலாம் மற்றும் கொலீஜியத்தை மறுபரிசீலனை செய்யும்படி கோரலாம், கொலீஜியம் அதன் பரிந்துரைகளை மீண்டும் வலியுறுத்த விரும்பினால், அவை நடைமுறைப்படுத்தப்படும்.

கிரண் ரிஜிஜுவின் பரிந்துரை, நடைமுறைக்கு வந்தால், கொலீஜியத்திலேயே அரசாங்கப் பிரதிநிதியை அமர்த்துவதன் மூலம் கொலீஜியத்தின் அமைப்பை மாற்றியமைக்கும். இந்த பிரதிநிதிக்கு என்ன குறிப்பிட்ட அதிகாரங்கள் இருக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், நீதித்துறை அல்லாத ஒரு உறுப்பினரின் இருப்பு விஷயங்களை பெருமளவு மாற்றும். கிரண் ரிஜிஜுவின் கூற்றுப்படி, நீதிபதிகளைத் தேர்ந்தெடுப்பதில் அரசாங்கத்தின் பங்கு முக்கியமானது, ஏனெனில் நீதிபதிகள் தாங்களே அறிக்கைகள் மற்றும் அரசாங்கம் செய்யும் பிற தகவல்களை அணுக முடியாது.

NJAC இலிருந்து ஒரு மாற்றம்

நீதித்துறை நியமனங்களில் அதிக நிர்வாகச் செல்வாக்கிற்கு வாதிடும் அதே வேளையில், மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜுவின் பரிந்துரைகள் தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் (NJAC) குறித்த அரசாங்கத்தின் முந்தைய நிலைப்பாட்டிலிருந்து விலகுவதைக் குறிக்கின்றன. முன்னதாக, உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்வதில் மத்திய அரசு மிகப்பெரிய கருத்தைக் கொண்ட NJAC-ஐ அமைப்பதற்கு மோடி அரசாங்கம் தீவிரமாக வாதிட்டது.

நவம்பர் 2022 இல், மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கொலீஜியம் அமைப்பை "வெளிப்படைத் தன்மையற்றது" என்று அழைத்தார், இது டிசம்பரில் குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கரின் கருத்துகளில் பிரதிபலித்தது. NJAC பற்றி "சிந்திப்பதற்கு ஒருபோதும் தாமதமாகவில்லை" என்று அவர் கூறினார்.

கொலீஜியத்தை நீக்குவதற்கான நீண்டகால முன்மொழிவின் மைய அம்சம் NJAC ஆகும். 2014 ஆம் ஆண்டில், அரசியலமைப்பின் 99 வது திருத்தத்தின் மூலம், அரசாங்கம் NJAC ஐ அமைக்கும் ஒரு மசோதாவை நிறைவேற்றியது, இது நீதிபதிகள் நியமனத்தில் குறிப்பிடத்தக்கதாக உள்ளது.

NJAC ஆனது, இந்திய தலைமை நீதிபதியை பதவிவழித் தலைவராகவும், இரண்டு மூத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பதவிவழி உறுப்பினர்களாகவும், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் பதவிவழி உறுப்பினராகவும், சிவில் சமூகத்தைச் சேர்ந்த இரண்டு முக்கிய நபர்களை உறுப்பினர்களாகவும் கொண்டிருக்க வேண்டும். தலைமை நீதிபதி, பிரதமர் மற்றும் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரைக் கொண்ட குழுவால் பரிந்துரைக்கப்படுபவர், மற்றவர்கள் SC/ST/OBC/ சிறுபான்மை சமூகங்கள் அல்லது பெண்களிடமிருந்து பரிந்துரைக்கப்படுவார். எவ்வாறாயினும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்த புதிய திருத்தத்தை நிராகரித்த பிறகு, அரசாங்கம் சட்டத்தை ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

கிரண் ரிஜிஜுவின் சமீபத்திய பரிந்துரை குறிப்பிடத்தக்க வகையில் வேறுபட்டது, ஒரு புதிய அமைப்பை முற்றிலுமாக முன்மொழிவதற்குப் பதிலாக, மத்திய அரசின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய நீதித்துறை நியமனங்களின் தற்போதைய வழிமுறையை மாற்றுமாறு அவர் பரிந்துரைக்கிறார்.

எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

கிரண் ரிஜிஜூவின் முன்மொழிவைக் குறிப்பிட்டு, "இதன் தீர்வு ஒரு சுதந்திர நீதித்துறைக்கு ஒரு விஷ மாத்திரை" என்று காங்கிரஸ் தகவல் தொடர்புத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார். ஜெய்ராம் ரமேஷின் கூற்றுப்படி, “இவை அனைத்தும் நீதித்துறையை மிரட்டி, அதை முழுவதுமாக கைப்பற்றுவதற்காக திட்டமிடப்பட்ட மோதல். கொலீஜியத்தில் சீர்திருத்தம் தேவை. ஆனால், இந்த அரசாங்கம் விரும்புவது முழு அடிபணியலையே” என்று கூறினார்.

இந்த உணர்வு மற்ற தரப்பினராலும் எதிரொலிக்கப்படுகிறது, அவர்கள் கொலீஜியம் அமைப்பின் குறைபாடுகளை ஒப்புக்கொண்டாலும், நீதித்துறையில் அதிக மத்திய அரசின் தலையீடுகளில் வேறுபடுகின்றன.

"இது முற்றிலும் அதிர்ச்சியளிக்கிறது. இது நீதித்துறையின் சுதந்திரம் பற்றிய யோசனையை அடியோடு குறைமதிப்பிற்கு உட்படுத்தப் போகிறது மற்றும் அரசியலமைப்பின் மூலம் எதிர்பார்க்கப்படும் சமநிலையை சீர்குலைக்கும். ‘உறுதியான நீதித்துறை’ என்ற சோதனையை அரசாங்கத்தால் எதிர்க்க முடியவில்லையா?” என்று ஆர்.ஜே.டி கட்சியின் ராஜ்யசபா எம்.பி மனோஜ் குமார் ஜா கூறினார்.

காங்கிரஸ் லோக்சபா எம்.பி.யும், வழக்கறிஞருமான மணீஷ் திவாரியும், "அரசின் பிரதிநிதி மட்டும் ஏன்?" என்று கேள்வி எழுப்பினார்.

முன்மொழியப்பட்ட NJAC இந்தியாவின் அரசியல் தலைவர்களின் பெரிய மற்றும் பலதரப்பட்ட பிரதிநிதித்துவத்தை உள்ளடக்கியிருந்தாலும், ஆளும் அரசாங்கத்தின் பிரதிநிதியை மட்டுமே சேர்ப்பது நீதித்துறையின் சுதந்திரத்தின் மீது மட்டுமல்ல, ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான போட்டி சமநிலையின் மீதும் ஒரு மோசமான தாக்குதலாக பலரால் பார்க்கப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Supreme Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment