Advertisment

முல்லைப் பெரியாரில் மரங்களை வெட்ட தமிழக அரசுக்கு கேரளா அனுமதி மறுத்தது ஏன்?

பெரியாறு புலிகள் சரணாலயத்தில் இருந்து மரங்களை வெட்டுவது மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் மற்றும் பிற சட்ட அமைப்புகளின் அனுமதிக்கு உட்பட்டது என்பதை சுட்டிக்காட்டி இந்த உத்தரவு முடக்கப்பட்டது.

author-image
WebDesk
New Update
Mullaiperiyaru, mullaiperiyar, முல்லைப்பெரியாறு அணை, நீர் தேக்கம்

Shaju Philip

Advertisment

Mullaperiyar dam : முல்லைப் பெரியாறு அமைந்துள்ள கேரளாவுக்கும் அதன் மீது உரிமை கொண்டுள்ள தமிழகத்திற்கும் இடையே அணை தொடர்பான புதிய பிரச்சனை ஒன்று சமீபத்தில் ஏற்பட்டுள்ளது. 126 ஆண்டுகள் பழமை வாய்ந்த முல்லைப் பெரியாறு அணையின் ஒரு பகுதியான பேபி அணைக்கு கீழே உள்ள மரங்களை வெட்டுவது தொடர்பாக புதிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது. . நவம்பர் 5, 2021 அன்று, கேரளா 15 மரங்களை வெட்ட தமிழகத்திற்கு அனுமதி வழங்கியது, ஆனால் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள மாநிலங்களுக்கு இடையேயான மோதலில் அத்தகைய நடவடிக்கை கேரளாவின் நலன்களைக் கெடுக்கும் என்ற அச்சத்தின் பின்னணியில் இரண்டு நாட்களுக்குப் பிறகு அந்த முடிவு முடக்கப்பட்டது.

மேலும் படிக்க : சென்னை பெருவெள்ளம்: தவறான நீர்நிலை மேலாண்மையே இன்னல்களுக்கு காரணம்

பேபி அணை

முல்லைப் பெரியாறு அணையானது பிரதான அணை, மண் அணை என்று கூறப்படும் பேபி அணை மற்றும் கசிவுப்பாதை ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும். பிரதான அணையின் நீளமானது 1200 அடிகள். பேபி அணையின் நீளமானது 240 அடிகளாக உள்ளது. மொத்த நீர்நிலையின் முழுமையான கொள்ளளவானது 152 அடியாக உள்ளது. அதில் அதிகபட்ச நீர்தேக்க மட்டம் 152 அடி மட்டுமே. நீர்மட்டத்தை 118 அடிகளில் இருந்து உயர்த்த பேபி அணை கட்டப்பட்டது. தற்போது உச்ச நீதிமன்றத்தின் 2014ம் ஆண்டு தீர்ப்பின் படி அணையில் 142 அடி நீர் சேமிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அணையின் வயது மற்றும் அதிகரித்துவரும் பாதுகாப்பு தொடர்பான கேள்விகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக குறைக்க வேண்டும் என்று கேரளா கோரிக்கை வைத்துள்ளது.

பேபி அணையை பலப்படுத்தும் முயற்சியில் தமிழக அரசு

தமிழகத்தைப் பொறுத்தமட்டில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து 152 அடியாக உயர்த்த பேபி அணையை பலப்படுத்துவது மிகவும் முக்கியமானதாகும். அணையை பாதுகாப்பானதாகவும், அதிக நீரைத் தேக்கி வைப்பதற்கு ஏற்றதாகவும் மாற்றுவதற்கான தமிழகத்தின் பல்வேறு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்தத் திட்டம் உள்ளது. எனவே, முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக மாநிலங்களுக்கு இடையேயான விவாதத்தின்போதும், உச்ச நீதிமன்றத்திலும் தமிழகம் இந்த விவகாரத்தை எழுப்பி வருகிறது. அணையை பலப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக கேரளாவிடம் இருந்து வனத்துறை அனுமதி, முக்கியமாக மரங்களை வெட்ட அனுமதிக்க தமிழகம் கோரிக்கை விடுத்துள்ளது. அணையின் முழுமையான கட்டுப்பாடு தமிழகத்திடம் இருந்தாலும் மரங்களை வெட்ட, அணை அமைக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்தின் அனுமதி அவசியமாகிறது.

கனமழைக்கு பின் மீண்டும் விஸ்வரூபம் எடுத்த முல்லைப் பெரியாறு விவகாரம்; இதுவரை நடைபெற்றது என்ன?

மரங்களை வெட்ட அனுமதி

தமிழக நீர்வளத்துறை பேபி அணையின் கீழே இருக்கும் 23 மரங்களை வெட்ட கேரள அரசை வலியுறுத்தியது. கேரளாவின் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் முதன்மை வனவிலங்கு காப்பாளர் நவம்பர் 5ம் தேதி அன்று 15 மரங்களை வெட்ட அனுமதி அளித்தனர். அடுத்த நாள் தமிழக முதல்வர் இதற்கு நன்றி தெரிவித்து கேரள முதல்வருக்கு கடிதம் எழுதினார். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள இந்த கோரிக்கை, பேபி அணை மற்றும் மண் அணையை வலுப்படுத்துவதற்கு முக்கியமானது, மேலும் இந்த அனுமதி இந்த கட்டமைப்புகளை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்க எங்களுக்கு உதவும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

அனுமதி திரும்பப் பெறப்பட்டது

நவம்பர் 7ம் தேதி அன்று, கேரள வனத்துறை அமைச்சர் ஏ.கே. சசீந்திரன் இந்த முடிவு குறித்து தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். அணை விவகாரத்தில் கேரளாவின் நலன்களை இந்த நடவடிக்கை சீர்குலைக்கும் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியதால், முதலமைச்சர் மற்றும் வனம் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்களின் பார்வைக்கு வராமல் மேற்கொள்ளப்பட்டது என்றும் கூறினார். நவம்பர் 7ம் தேதி அன்று, வனத்துறை அந்த உத்தரவை நிறுத்தி வைத்தது. பெரியாறு புலிகள் சரணாலயத்தில் இருந்து மரங்களை வெட்டுவது மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் மற்றும் பிற சட்ட அமைப்புகளின் அனுமதிக்கு உட்பட்டது என்பதை சுட்டிக்காட்டி இந்த உத்தரவு முடக்கப்பட்டது. தேசிய வனவிலங்கு வாரியத்தின் நிலைக்குழுவிடம் தமிழகம் அனுமதி பெற வேண்டும். அதுமட்டுமின்றி, 1980-ம் ஆண்டு வனப் பாதுகாப்புச் சட்டத்தின்படி இந்த அனுமதியை பெற வேண்டும். மரங்களை வெட்டுவதற்கு முன்பு தேவையான இந்த அனுமதியை தமிழக அரசு பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மரங்களை வெட்டுவதற்கு எதிராக கேரளா இருக்க காரணம் என்ன?

மரங்களை வெட்டினால் பேபி அணையை பலப்படுத்தும் நடவடிக்கைகளை தமிழகம் மேற்கொள்ள முடியும். தமிழகத்தை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதித்தால், தற்போதுள்ள கட்டமைப்பை நீக்கிவிட்டு புதிய அணை கட்ட வேண்டும் என்ற கேரளாவின் கோரிக்கை வலுவிழந்துவிடும் என அம்மாநிலம் அஞ்சுகிறது. அணையின் கீழே வாழும் லட்சக்கணக்கான மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டுக்கு தண்ணீர், கேரளாவுக்குப் பாதுகாப்பு” என்ற பிரச்சாரக் கோட்டுடன் புதிய அணைக்கட்டுக்காக கேரளா வாதிடுகிறது. பேபி அணை மற்றும் பிற கட்டமைப்புகளை பலப்படுத்துவதன் மூலம், நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை தமிழகம் வைக்க முடியும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Kerala Mullaiperiyaru
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment