Advertisment

எலுமிச்சை விலை கிடுகிடு உயர்வு… என்ன காரணம்?

பல சந்தைகளில் ஒரு எலுமிச்சை 10-15 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்தியாவின் எலுமிச்சை உற்பத்தியின் அளவு என்ன? விலை உயர்வுக்கான காரணங்களும், எப்போது அதன் விலை சரிவை சந்திக்கும் போன்ற பல தகவல்களை இங்கே காணலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
எலுமிச்சை விலை கிடுகிடு உயர்வு… என்ன காரணம்?

கடந்த சில வாரங்களாக, எலுமிச்சை பழத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளது. பெரும்பாலான சந்தைகளில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனையாகிறது. நாட்டில் எலுமிச்சம்பழம் எவ்வளவு விளைகிறது? திடீர் விலை உயர்வுக்கான காரணத்தை இங்கு காணலாம்.

Advertisment

நாட்டில் எவ்வளவு எலுமிச்சை விளைகிறது? எங்கு விளைகிறது?

எலுமிச்சை பழம் நாடு முழுவதும் 3.17 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் உள்ள பழத்தோட்டங்களில் விளைகிறது. எலுமிச்சம் மரங்கள் வருடத்திற்கு மூன்று முறை பூத்து காய்க்கும். ஆந்திரப் பிரதேசம் 45,000 ஹெக்டேர் பரப்பளவில் எலுமிச்சை பயிரிடுவதில் முக்கிய மாநிலமாக திகழ்கிறது. மகாராஷ்டிரா, குஜராத், ஒடிசா மற்றும் தமிழ்நாடு ஆகிய மற்ற மாநிலங்களிலும் எலுமிச்சை பயிரிடப்படுகிறது.

இந்தியில் நிம்பு என்று அழைக்கப்படும் எலுமிச்சையானது, லேமன் மற்றும் லைம் என இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது.

சிறிய, வட்டமான மற்றும் மெல்லிய தோல் கொண்ட எலுமிச்சை பொதுவாக வளர்க்கப்படும் எலுமிச்சை ஆகும். மறுபுறம், லைம் என்பது வட இந்தியா மற்றும் வடகிழக்கில் வணிக ரீதியாக வளர்க்கப்படும் கரும் பச்சை பழங்களைக் குறிக்கிறது. மேற்கு வங்காளத்தில் உள்ள கோண்டோராஜ் போன்ற வகைகள் உள்நாட்டில் நன்கு அறியப்பட்டவை ஆகும்.

ஆண்டுக்கு, இந்தியா 37.17 லட்சம் டன் எலுமிச்சை பழங்களை உற்பத்தி செய்கிறது. முழுவதுமாக உள்நாட்டில் விளைவிக்கப்படுகிறது. இந்த பழங்களை ஏற்றுமதியோ அல்லது இறக்குமதியோ செய்யப்படவில்லை.

எலுமிச்சை பழம் விளைய சூடான, மிதமான மற்றும் ஈரமான காலநிலை மிகவும் ஏற்றது. ஏனென்றால், அதிக மழைப்பொழிவு பழத்தோட்டங்களில் பாக்டீரியா நோய்களைத் ஏற்படுத்துகிறது.

நாக்பூரை தலைமையிடமாகக் கொண்ட ICAR மத்திய சிட்ரஸ் ஆராய்ச்சி நிறுவனம் (CCRI) மற்றும் பல்வேறு மாநில விவசாய நிறுவனங்கள், தரமான வேர் இருப்புகளைப் பராமரித்து வருகின்றன. விவசாயிகள் பொதுவாக ஒரு ஏக்கரில் 210-250 எலுமிச்சை மரங்களை நடுவார்கள்.

பழத்தோட்டங்கள் நடவு செய்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு முதல் அறுவடையைத் தருகின்றன. சராசரியாக, ஒரு மரத்தில் 1,000-1,500 பழங்கள் கிடைக்கும்.

publive-image

எலுமிச்சை பழத்தின் சுழற்சி என்ன?

bahar treatment எனப்படும் பூக்களை தூண்டுவதன் (inducing flowering) மூலம் விவசாயிகள் ஆண்டு முழுவதும் பழங்களை வழங்குகிறார்கள் என்று CCRI இன் முதன்மை விஞ்ஞானி டாக்டர் ஏ ஏ முர்குடே கூறினார்.

இந்த முறையில், விவசாயிகள் நீர்ப்பாசனத்தை நிறுத்திவிட்டு, ரசாயனங்களைத் தெளித்து, பழத்தோட்டங்களின் கிளைகளை நறுக்கித் திருத்தம் செய்கிறார்கள். இதைத் தொடர்ந்து, உரம் சுத்திகரிப்பு மற்றும் நீர்ப்பாசனத்தை மீண்டும் தொடங்குகிறார்கள். இது பூக்கும் மற்றும் பழங்கள் உருவாக வழிவகுக்கிறது.

எலுமிச்சை விவசாயிகள் ஒரு வருடத்தில் மூன்று பஹார்களை எடுத்துக்கொள்கிறார்கள். அவை அம்பே, மிரிக் மற்றும் ஹஸ்தா என அழைக்கப்படுகின்றன. பூக்கும் பருவத்தின் அடிப்படையில் பெயரிடப்படுகின்றன.

அம்பே பஹாரின் போது, ​​ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் பூக்க தொடங்கி ஏப்ரலில் பழங்கள் உருவாகும். மிருக் பஹாரின் போது, ​​ஜூன்-ஜூலை மாதங்களில் பூக்கும், அறுவடை அக்டோபரில் நடைபெறும். ஹஸ்தா பஹாரானது, செப்டம்பர்-அக்டோபரில் பூக்கும், அவை மார்ச் மாதத்திற்குப் பிறகு அறுவடை நடைபெறும். இந்த பஹார்கள் அடுத்ததடுத்து நடைபெறுவதால், சந்தைக்கு ஆண்டு முழுவதும் பழங்கள் விவசாயிகளுக்கு கிடைத்திடும்.

சந்தைக்கு உணவளிக்கும் பயிர்களில் கிட்டத்தட்ட 60% அம்பே பஹாரிலிருந்து அறுவடை செய்யப்படுவதாகவும், மிருக் பஹார் 30% பங்களிப்பதாகவும், மீதமுள்ளவை ஹஸ்தா பஹார் என்றும் டாக்டர் முர்குடே கூறினார். பெரும்பாலான மிருக் பஹார் பழங்கள் ஆரம்பத்தில் குளிர்பதனக் கிடங்குக்கு அனுப்பப்படுகின்ற. மற்ற இரண்டு பஹார்களின் புதிய பழங்கள் சில்லறை விற்பனை செய்யப்படுகின்றன.

விலை எவ்வளவு உயர்ந்துள்ளது?

புனேயின் மொத்த விற்பனை சந்தையில், 10 கிலோ எடையுள்ள எலுமிச்சை மூட்டை, 1,750 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அந்த பையில், தோரயமாக 350-380 எலுமிச்சை பழங்கள் இருக்கும். எனவே ஒரு எலுமிச்சையின் விலை ரூ.5 ஆக உள்ளது. புனேவில் ஒரு எலுமிச்சையின் சில்லறை விலை ரூ.10-15 ஆக உள்ளது.

இதுவே, இந்த சந்தையில் எலுமிச்சை பழத்திற்கு நிர்ணயித்துள்ள மிக உயர்ந்த விலை என்றும், பழத்தின் மிகக் குறைந்த வரத்து காரணமாக விலை அதிகரித்திருப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

புனேயின் சந்தையில் பொதுவாக தலா 10 கிலோ எடையுள்ள 3,000 பைகள் இருக்கும். ஆனால் தற்போது 1,000 பைகள் மட்டுமே வருகின்றன.

மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா போன்ற சந்தைகளில், ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு கிலோ ரூ.100, ரூ.40 மற்றும் ரூ.90 ஆக இருந்த பழம், முறையே ரூ.120, ரூ.60, மற்றும் ரூ.180 என மொத்த விலையில் விற்கப்படுகிறது.

விலை உயர்வுக்கான காரணம் என்ன?

ஹஸ்தா பஹாரின் தோல்வியும் அதைத் தொடர்ந்து நடந்த அம்பே பஹாரும் முக்கிய காரணங்களில் ஒன்றாகும். நாடு முழுவதும், கடந்தாண்டு பருவமழை சிறப்பாக இருந்தது, ஆனால் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் எதிர்பாராத வகையில் கனமழை பெய்தது. எலுமிச்சை பழத்தோட்டங்கள் அதிகப்படியான ஈரப்பதத்திற்கு அதிக உணர்திறன் கொண்டவை. அதிக மழைப்பொழிவு காரணமாக, பஹார் சிகிச்சை தோல்வியடைந்தது, பூக்கள் பூக்கவில்லை. இந்த பழம் பொதுவாக குளிர்பதன கிடங்குகளில் வைக்கப்பட்டு, அம்பே பஹாரிலிருந்து அடுத்த பழம் வரும் வரை சந்தைப்படுத்தப்படும்.

இந்த முறை மகசூல் கணிசமாக குறைந்ததால், விவசாயிகள் சேமித்து வைக்க குறைந்த மகசூலே கிடைத்தது.

அம்பே பஹார் பழமும் பருவமழையால் பாதிக்கப்பட்டதில், ஆரம்ப கட்டங்களில் பூக்கள் அளவு குறைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். பிப்ரவரி மாத இறுதியில் இருந்து, அதிக வெப்பநிலையும் பயிரை தாக்கியதில், இளம் பழங்கள் உதிர்ந்து விடும். கோடையில், எலுமிச்சையின் தேவை ஆண்டு முழுவதும் அதிகமாக இருக்கும் போது, ​​சேமித்து வைக்கப்படும் ஹஸ்தா பஹார் மற்றும் புதிய அம்பே பஹார் பழங்கள் சந்தைக்கு உணவளிக்கின்றன. ஆனால் இந்த முறை தயாரிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கூறுகையில், தொடர்ச்சியாக இரண்டு பஹார்கள் தோல்வியடைந்த அரிதான ஆண்டுகளில் இதுவும் ஒன்றாகும். நாடு முழுவதும், எலுமிச்சை வரத்து குறைந்ததால், விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளதாக தெரிவித்தனர்.

எப்போது எலுமிச்சை விலை குறையும்?

உடனடி விலை திருத்தத்திற்கான வாய்ப்புகள் குறைவாக தான் உள்ளன. சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் அடுத்த பயிர் அக்டோபர் மாதத்திற்குப் பிறகுதான் தயாராகும். அப்போதுதான் வரத்து கணிசமாக மேம்படும். தற்போது, பூக்கள் அதிகளவில் பாதிக்கப்படாத பகுதிகளில் இருந்து அம்பே பஹாரின் சில வருகை எதிர்பார்க்கப்படுகின்றன. இருப்பினும், அந்த வரவு தேவையை பூர்த்தி செய்ய போதுமானதாக இருக்காது என்று கருதப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lemon
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment