நம் வீடுகளில் பெரும்பாலும் காலை, இரவு உணவு இட்லி, தோசையாக இருக்கும். அதற்கு தொட்டு சாப்பிட தேங்காய் சட்னி, கார சட்னி, சாம்பார் வைத்து சாப்பிடுவோம். எப்போதும் இதே வைத்து சாப்பிடுவது சலிப்பாக இருக்கும். புதிதாக செய்தால் சுவையாக, டேஸ்டாக, சாப்பிட ஆர்வமாக இருக்கும். அந்தவகையில் இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிட குடைமிளகாய் சாம்பார் செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு - 1/2 கப்
குடைமிளகாய் - 2
சாம்பார் பொடி - 1/2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம், தக்காளி - தலா 1
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
புலி பேஸ்ட் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 5
உப்பு - தேவையான அளவு
நெய் - 1 டீஸ்பூன்
செய்முறை
துவரம் பருப்பை நன்றாக வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒன்றரை கப் தண்ணீரில் புளி, சாம்பார் பொடி சேர்த்து நன்றாக கரைத்து வைத்து கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம், காய்ந்த மிளகாய் போட்டு தாளிக்கவும். பின்னர் அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வேக வைக்கவும்.
அடுத்து அதில் குடைமிளகாயை சேர்த்து வதக்கவும். பின்னர் அதில் கரைத்து வைத்துள்ள புளி, சாம்பார் பொடி கரைசலை ஊற்றி பொடி வாசனை போகும் வரை கொதிக்க விடவும். இப்போது வேகவைத்த துவரம் பருப்பு, தேவையான அளவு உப்பு சேர்த்து 1 நிமிடம் கொதிக்க விடவும். கடைசியாக கொத்தமல்லி சேர்த்து 1 டீஸ்பூன் நெய் சேர்த்தால் கம கம குடைமிளகாய் சாம்பார் ரெடி. இட்லி, தோசைக்கு வைத்து சாப்பிடலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/