குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் தோசையும் ஒன்று. ஆனால், பல நேரங்களில் வீட்டிலிருக்கும் குழந்தைகள் கிரிஸ்பி ஆன தோசை கேட்டு அடம்பிடிப்பார்கள். ஆனால், அது ஒன்றும் பெரிய ரகசியமில்லை. கிரிஸ்பி தோசைக்கான ஒரு சிம்பிள் டிரிக் இங்கே உள்ளது. தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்..
வழக்கமாக நாம் இட்லிக்கு அரைக்கும் மாவில் தான், சிறிது தண்ணீர் சேர்த்து தோசை ஊற்றுவது வழக்கம். ஆனால், இட்லி மாவில் தோசை ஊற்றுவதை விட, தோசைகென தனி மாவு அரைப்பது நல்ல யோசனை.
அப்படி, உளுந்து சேர்க்காமல் வெறும் அரிசியை கொண்டு தோசை மாவு தயாரிக்கலாம். அதற்கு வெறும் ரேஷன் அரிசி மட்டும் போதும்.
முதலில் ரேஷன் புழுங்கல் அரிசியை, ஒரு ஸ்பூன் கல் உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி 4-5 முறை நன்கு கழுவுங்கள்.
பிறகு சுத்தமான தண்ணீரில் அரிசியை குறைந்தது ஆறு மணி நேரம் ஊற வைக்கவும். அதேபோல, ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை நன்கு கழுவி ஊறவைக்கவும். வெந்தயம் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றினால் போதும்
ஆறு மணி நேரம் கழித்து மிக்சியில் வெந்தயம், ஊறவைத்த தண்ணீர் சேர்த்து பேஸ்டாக அரைக்கவும். அதனுடன் ஏற்கெனவே ஊறவைத்த அரிசியையும் சேர்த்து மையாக அரைக்க வேண்டும். இந்த மாவை வேறொரு பாத்திரத்துக்கு மாற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து எட்டு மணி நேரம் நன்கு ஊற வைக்கவும்.
எப்போதும் போல தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு கரண்டி மாவு எடுத்து, கல்லில் ஊற்றவும். சுற்றிலும் எண்ணெய் விட்டு நன்கு வேக விடவும். மொறுமொறு கிரிஸ்பி தோசை ரெடி.
குறிப்பு: தோசைக்கு அரைக்கும் மாவில் கொஞ்சம் வெந்தயம், ஒரு பங்கு பச்சரிசி, இரண்டு பிடி அவல் சேர்த்து அரைத்தால் தோசை மொறுமொறுவென்றும் வரும்.
அதை போல இட்லி மாவில் தோசை ஊற்றும் போது, மாவில் சிறிதளவு தண்ணீர், ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கிய பின்பு தோசை ஊற்றினால் நன்றாக கிரிஸ்பியாக வரும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“