நம் வீடுகளில் பெரும்பாலும் காலை, இரவு உணவு தோசை, இட்லியாகத் தான் இருக்கும். அதிலும் குறிப்பாக தோசை குழந்தைகள் விரும்பி உண்பர். மொறுமொறு தோசை வேண்டும் என்று அடம் பிடிப்பர். எப்போதும் ஒரே மாதிரியாக செய்து சாப்பிடாமல் சற்று வித்தியாசமாக செய்து சாப்பிட்டால் உண்பதற்கு நன்றாக இருக்கும். ஒருவித மகிழ்ச்சி தரும். அந்த வகையில் இங்கு தக்காளி தோசை எப்படி செய்வது என்பது குறித்து பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
புழுங்கல் அரிசி - 1 கப்
பச்சரிசி - 1 கப்
உளுத்தம்பருப்பு - அரை கப்
காய்ந்த மிளகாய் - 8
சோம்பு - 1 டீஸ்பூன்,
தக்காளி - 5
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை
அரிசியையும், பருப்பையும் நன்றாக கழுவி 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் ஊற வைத்த அரிசி, உளுத்தம்பருப்புடன் காய்ந்த மிளகாய், சோம்பு, தக்காளி, தேவையான அளவு உப்பு என அனைத்தையும் சேர்த்து மாவு போல் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். கொஞ்சமாக செய்தால் மிக்ஸியில் கூட போட்டு அரைக்கலாம்.
இப்போது அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் மாற்றி 2 மணி நேரத்திற்கு வைத்து விடுங்கள். இரண்டு மணி நேரத்திற்கு பின், அடுப்பில் தோசைக்கல் வைத்து சூடானதும் எப்போதும் போல் இந்த மாவில் தோசை ஊற்றி சுற்றி எண்ணெய் ஊற்றி சுட்டெடுக்கவும். அவ்வளவு தான் சுவையான தக்காளி தோசை ரெடி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/