10.5 lakh Indians have returned from foreign countries under Vande Bharat Mission : கொரோனா வைரஸ் நோய் தொற்றின் காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடு சென்ற இந்தியர்கள் ஆங்காங்கே முடங்கும் சூழல் உருவானது. அவர்கள் நலனை கருத்தில் கொண்டு, இந்தியா கொண்டு வர வந்தே பாரத் திட்டம் துவங்கப்பட்டது.
மே 7ம் தேதி துவங்கிய இந்த திட்டம் 4 கட்டங்களை நிறைவு செய்துள்ளது. 300 சர்வதேச விமானங்கள் மற்றும் 70 உள்நாட்டு விமானங்கள் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கடந்த 11ம் தேதி வரை வெளிநாடுகளில் இருந்து சுமார் 10.50 லட்சம் இந்தியர்களை வெளிநாடுகளில் இருந்து தாயகம் அழைத்து வந்துள்ளது மத்திய அரசு.
அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பியா, வளைகுடா மற்றும் மத்திய கிழக்காசிய நாடுகளில் இருந்து இந்தியர்கள் வான் வழியாகவும், கடல்மார்க்கமாகவும் (சமுத்துர சேது) தாயகம் திரும்பியுள்ளனர் என்று வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா அறிவித்துள்ளார்.
5ம் கட்ட வந்தே பாரத் மூலம் அர்மீனியா, ஜப்பான், நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, இஸ்ரேல், உக்ரைன், இலங்கை ஆகிய நாடுகள் உள்ள இந்தியர்கள் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட உள்ளனர். வருகின்ற செப்டம்பர் 1ம் தேதி முதல் பிரிட்டனுக்கு செல்ல விமான போக்குவரத்து துவங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil