14 மாதங்கள் தான் வாழ்ந்திருக்கிறான் அந்த குழந்தை. ஆனாலும், தான் இறந்தாலும் தன்னுடைய வாழ்வை அர்த்தப்படுத்தியிருக்கிறான் 14 மாத குழந்தை சோம்நாத் ஷா. மூளைச்சாவு அடைந்த அக்குழந்தையின் சிறுநீரகம் 15 வயது சிறுவனுக்கும், இதயம் 3 வயது சிறுமிக்கும் பொருத்தப்பட்டிருக்கிறது. இருவருடைய வாழ்விலும் சோம்நாத் ஷா என்றும் வாழ்ந்து கொண்டிருப்பான்.
பிஹார் மாநிலம், சிஸ்வான் மாவட்டத்தை சேர்ந்த சோம்நாத் குடும்பத்தினர் சமீபத்தில் சூரத்துக்கு குடிபெயர்ந்தனர். இந்நிலையில், கடந்த 2-ஆம் தேதி 14 மாத குழந்தை சோம்நாத் ஷா, தன் அக்காவுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, மாடிப்படியில் இருந்து கீழே விழுந்தான்.
இதையடுத்து, அவனை பெற்றோர் அருகாமை மருத்துவரிடம் அழைத்துச் சென்று காட்டியபோது குழந்தை மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்தார். அந்த குடும்பமே நொறுங்கி விட்டது.
இந்நிலையில் தான் ’டொனேட் லைஃப்’ என்ற அமைப்பு குழந்தையின் பெற்றோரை சமாதானப்படுத்தி அவனது உறுப்பு தானம் செய்ய சம்மதிக்க வைத்தனர்.
இதையடுத்து, சோம்நாத் ஷாவின் சிறுநீரகம், கடந்த 10 வருடங்களாக டயாலிசிஸ் சிகிச்சை செய்துவந்த 15 வயது சிறுவனுக்கு பொருத்தப்பட்டது. அதேபோல், குழந்தையின் இதயம் மும்பையை சேர்ந்த 3 வயது சிறுமி ஆரத்யாவுக்கு பொருத்தப்பட்டது. ஆரத்யா, கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் இதயத்துக்கான காத்திருப்போர் பட்டியலில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சோம்நாத் ஷாவின் பெற்றோர், தங்கள் மகன் இறந்தாலும், அவன் இருவரது உயிரிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.