Advertisment

ஜே.என்.யு மாணவர் மீது ஐந்து மாநிலங்களில் தேச துரோக வழக்கு... தேடப்பட்டு வருகிறார் இமாம்!

நவீன இந்திய வரலாற்றில் பிஎச்டி படித்து வரும் இமாம், கணினி அறிவியலில் ஐ.ஐ.டி-மும்பையில் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
5 states charge JNU Sharjeel Imam with sedition case

5 states charge JNU Sharjeel Imam with sedition case

5 states charge JNU Sharjeel Imam with sedition case :  டெல்லி அலிகார் பல்கலைக்கழகத்தில் சி.ஏ.ஏவுக்கு எதிராக பேசிய ஜே.என்.யு மாணவர் ஷர்ஜீல் இமாம் மீது ஐந்து மாநிலங்களில் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜே.என்.யு-வில் பி.எச்.டி படித்து வருகிறார் ஷர்ஜீல் இமாம். 16ம் தேதி அலிகார் பல்கலைக்கழகத்தில் அரசுக்கு எதிராகவும், சி.ஏ.ஏவுக்கு எதிராகவும் பேசிய அவர் மீது ஏற்கனவே அசாம் மற்றும் உத்திரப்பிரதேச மாநிலங்களில் தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது அருணாச்சலப்பிரதேசம், மணிப்பூர், மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களிலும் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

டெல்லி மற்றும் உ.பியில் இவரை தேடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது காவல்துறை. அலிகார் எஸ்.எஸ்.பி. அகாஷ் குல்ஹாரி கூறும் போது டெல்லியின் பல்வேறு பகுதிகளிலும் ஷர்ஜீல் இமாம் குறித்து விசாரணை செய்யவும், தேடவும் இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் டெல்லி காவல்துறையினருடன் இணைந்து இவரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

டெல்லி காவல்துறை இமாமை தேடி பிஹாருக்கு சென்றுள்ளது. ஜெஹனாபாத் எஸ்.பி. மணீஷ் இது குறித்து கூறும் போது பிகார் காவல்துறை, டெல்லியில் இருந்து வரும் காவல்துறைக்கு உதவி வருகிறது என்றும், ஞாயிற்றுக் கிழமை காலை ஷர்ஜீலின் கிராமமான கக்கோவில் விசாரணை நடத்தப்பட்டது என்றும், அவருடைய உறவினர்கள் மூவரை காவல் துறையினர் விசாரணை செய்து நான்கு மணி நேரம் கழித்து வீட்டுக்கு அனுப்பினோம் என்றும் அவர் கூறினார்.

இதற்கு முன்பும் இதே போன்று ஜாமியா பல்கலைக் கழகத்தில் டிசம்பர் 13ம் தேதி சி.ஏ.ஏ மற்றும் என்.ஆர்.சிக்கு எதிராக பேசியுள்ளார். தற்போது இவர் பேசிய தூண்டுதலுக்கு உள்ளாக்கும் பேச்சு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது என்று டெல்லி டி.சி.பி. க்ரைம் பிராஞ்ச் காவல்துறை அதிகாரி ராஜேஷ் டியோ அறிவித்துள்ளார். ஷர்ஜீலின் இந்த பேச்சு பல்வேறு மதத்தினரை தூண்டும் வகையிலும், அவர்களுக்கு இடையே பிரச்சனையை உருவாக்கும் வகையிலும், இந்திய ஒற்றுமைக்கு எதிராகவும் உள்ளது என்றும் டியோ அறிவித்தார்.

ஷர்ஜீல் பேசியது என்ன?

ஷர்ஜீலின் வீடியோவில் “கன்ஹையா குமாரின் பேச்சினை கேட்க 5 லட்சம் நபர்கள் கூடினார்கள். இந்த 5 லட்சம் நபர்கள் இருந்தால் இந்தியாவில் இருந்து வடகிழக்கு மாநிலங்களை தனியாக துண்டித்துவிடலாம். நிரந்தரமாக இல்லையென்றாலும் குறைந்தது ஓரிரண்டு மாதங்களுக்காக அதை செய்யலாம். சாலைகளையும் தண்டவாளங்களையும் உடைத்து நொறுக்குவோம். அப்போது தான் நம்முடைய பேச்சை இவர்கள் கேட்பார்கள்” என்று பேசியது தெரியவந்துள்ளது. தற்போது இது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.

மேலும் டெல்லியில் பல்வேறு சாலைகளையும் நாம் முடக்க வேண்டும். அரசுக்கு நாம் அழுத்தம் தரவேண்டும் என்றும் அவர் கூறியது தொடர்பாக அவரிடம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தொடர்பு கொண்டது. அப்போது அவர் அமைதியான முறையில் சாலைகளை முடக்க வேண்டும் என்றும் அசாமிற்கு செல்லும் சாலைகளை முடக்க வேண்டும் என்றும் நான் கூறினேன். சக்கா ஜாம் போன்ற அது ஒரு அடிப்படையான போராட்டம் தான் என்றும் அவர் கூறினார்.

அவர் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகள்

இவரின் கீழ் சிறப்பு விசாரணை குழு அரசுக்கு எதிராக பேசியதற்காக ஐ.பி.சி 124, மதவெறியை தூண்டும் வகையில் பேசியதற்காக 153ஏ, மற்றும் மக்கள் மத்தியில் தூண்டுதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதற்காக 505 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அருணாச்சலப் பிரதேசம் முதல்வர் பெமா காண்டு இது குறித்து ட்விட்டரில் வெளியிட்ட கருத்தில் “இந்த வகையான பேச்சுகள் அஸ்ஸாம் மற்றும் பிற வடகிழக்கு மாநிலங்களை இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து பிரிக்க தூண்டுகிறது, வகுப்புவாதத்தை உருவாக்குகிறது.  இந்தியாவின் இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் குலைக்கும் வகையில் பேசப்படும் எதனையும் ஏற்றுக் கொள்ள இயலாது.  இட்டாநகர் குற்றப்பிரிவு  காவல்துறையினர் ஐபிசி U/S124(A)/153(A)153(B) I பிரிவுகளின் பதிவு செய்துள்ளனர் ” என்று கூறியுள்ளார்.

மணிப்பூர் முதல்வர் எம் என் பிரேன் சிங் "ஷாஹீன் பாக் போராட்டங்களின் இணை அமைப்பாளர் ஷர்ஜீல் இமாமின் ஆட்சேபனைக்குரிய வீடியோவில் வடகிழக்கு மாநிலங்களை நாட்டின் பிற பகுதிகளிலிருந்து பிரிக்கும்படி பேசியுள்ளார். மணிப்பூர் காவல்துறை 121/121-A/124-A/ 120-B /153 ஐ.பி.சி பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.  நவீன இந்திய வரலாற்றில் பிஎச்டி படித்து வரும் இமாம், கணினி அறிவியலில் ஐ.ஐ.டி-மும்பையில் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment