குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நல்ல முடிவு எடுப்பார் என்று காத்திருப்பதாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.
அதிமுக-வில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிகள் இணைந்துவிட்டன என்றபோதிலும், டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இந்த நிலையில், டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் கடந்த 22-ஆம் தேதி ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து தனித்தனியாக கடிதம் கொடுத்திருந்தனர். அப்போது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் அதிமுக-வில் தான் இருக்கின்றனர் என்றும், உட்கட்சிகளில் இருக்கும் பிரச்சனையில் தலையிட முடியாது என்று ஆளுநர் கூறியதாக தகவல் வெளியானது.
சட்டமன்றதில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட கோரி திமுக எம்பிக்கள் இன்று குடியரசுத் தலைவர் ராம்நாம் கோவிந்தை சந்தித்தனர். அவர்களுடன் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சித் தலைவர்களும் குடியரசுத் தலைவரை சந்தித்துப் பேசினர்.
இந்த சந்திப்பிற்கு பின்னர் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கூறும்போது: முன்னதாக, தமிழக ஆளுநரை சந்தித்துள்ள ஆளும்கட்சி எம்.எல்.ஏ-க்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தங்களது ஆதரவு இல்லை என்பதனை தெரிவித்துள்ளனர். அதுவும் தனித்தனியாக கடிதம் அளித்துள்ளனர். எனவே, அதனை உட்கட்சி விவகாரம் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. குடியரசுத் தலைவர் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பது குறித்து கால அவகாசம் கேட்டுள்ளார். தற்போது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றால், திமுக-வின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் முடிவு செய்வார் என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி ராஜா தெரிவிக்கும் கூறும்போது: திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் குடியரசுத் தலைவரை சந்தித்துப் பேசினோம். தமிழ்நாடு தற்போது ஆழமான அரசியல் நெருக்கடியில் இருக்கிறது. தமிழ்நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மை, மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. இந்த சூல்நிலையில், ஆளுநரின் நடவடிக்கை குறித்து ஜயப்பாடுகள் பல எழுந்துள்ளன.
இதுவரை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அழைத்து சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் கேட்கவில்லை. ஆளுநர் ஏன் இதனை செய்யாமல் இருக்கிறார் என்ற கேள்வி எழுகிறது. இந்த பின்னணியில் தான் குடியரசுத் தலைவரை சந்தித்தோம். அரசியல் சட்டத்தின் காவலன் என்கிற முறையில், இந்தியாவின் தலைமகன் என்கிற முறையில் குடியரசுத் தலைவர் இதில் தலையிட வேண்டும். இந்த பிரச்சனையில் தலையிட்டு, தமிழக மக்களுக்கு உதவ முன்வர வேண்டும் என்பதனை நாங்கள் வலியுறுத்தியிருக்கிறோம். நாங்கள் கூறிய வாதங்களை கேட்டுவிட்டு, கால அவகாசம் தேவைப்படுகிறது என்று கூறியிருக்கிறார். ஒரு மாநிலத்தின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படுமானால், மாநிலத்திற்கும், மக்களுக்கும் நல்லதல்ல என்று அவர் குறிப்பிட்டுச் சொன்னார். எனவே, நல்ல முடிவு வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.