இந்தியாவின் முன்னாள் பிரதமரும், பா.ஜ.க-வின் மூத்த தலைவருமான அடல் பிஹாரி வாஜ்பாய், உடல்நலக்குறைவு காரணமாக நீண்ட காலமாக அரசியலில் இருந்து விலகி, ஓய்வெடுத்துவருகிறார். 93 வயதான இவர், இன்று டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது, வழக்கமாக நடைபெறும் ஒரு மருத்துவப் பரிசோதனை என்றும், சோதனை முடிந்த பிறகு அவர் விரைவில் வீடு திரும்புவார் எனவும் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
இந்த நிலையில் சிகிச்சை பெற்று வரும் வாஜ்பாயை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்து அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார். இதையடுத்து, பாஜக தலைவர் அமித் ஷா சென்று உடல்நலம் விசாரிக்க, பிரதமர் நரேந்திர மோடியும் வாஜ்பாயை சந்தித்து உடல் நிலை குறித்து கேட்டறிந்தார்.
இந்தச் சூழ்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "முன்னாள் பிரதமர் வாஜ்பாய், உடல் பரிசோதனைக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் சீராக இருக்கிறார். எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநரும் மூத்த மருத்துவருமான ரன்தீப் குலேரியா தலைமையிலான மருத்துவர்கள் அவருக்கு சோதனைகள் நடத்தி வருகின்றனர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.