Advertisment

யார் இந்த அனில் ஜெய்சிங்கனி; சட்டப்பேரவையில் இவர் பெயரை ஃபட்னாவிஸ் குறிப்பிட்டது ஏன்?

டிசைனர் மீது அம்ருதா பட்னாவிஸ் வழக்கு; டிசைனரின் தந்தை அனில் ஜெய்சிங்கனி பந்தய வழக்குகளில் மூன்று முறை கைது மற்றும் 5 மாநிலங்களில் ஏழுக்கும் மேற்பட்ட வழக்குகளில் தேடப்பட்டு வருகிறார்

author-image
WebDesk
New Update
anil jaishingani

தேவேந்திர ஃபட்னாவிஸால் சட்டப்பேரவையில் பெயரிடப்பட்ட அனில் ஜெய்சிங்கனி

Sagar Rajput , Devendra Pandey

Advertisment

மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மாநில சட்டப் பேரவையில் குறிப்பிட்ட அனில் ஜெய்சிங்கனி, 'ஆடை வடிவமைப்பாளர்' அனிக்ஷாவின் தந்தை என்று அறியப்படுகிறார். அனிக்‌ஷாவுக்கு எதிராக அம்ருதா ஃபட்னாவிஸ் மிரட்டல் மற்றும் சதி செய்ததாகக் கூறி போலீசில் புகார் அளித்துள்ளார், ஐந்து மாநிலங்களில் ஏழுக்கும் மேற்பட்ட வழக்குகளில் தேடப்பட்டுவரும் உல்ஹாஸ்நகரைச் சேர்ந்த புக்கியான அனில் ஜெய்சிங்கனி, தற்போது எட்டு ஆண்டுகளாக காவல்துறையினரிடமிருந்து தலைமறைவாக உள்ளார்.

அம்ருதா ஃபட்னாவிஸ் அளித்த புகாரின் பேரில் மலபார் ஹில்ஸ் காவல் நிலையம் பிப்ரவரி 20 ஆம் தேதி எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து, அனிக்ஷா மற்றும் அவரது தந்தையை இரண்டு குற்றவாளிகளாகக் குறிப்பிட்டது. ”அனில் ஜெய்சிங்கனி கடந்த ஏழு முதல் எட்டு ஆண்டுகளாக தலைமறைவாக உள்ளார். அவர் மீது 14 முதல் 15 வழக்குகள் உள்ளன. அவருக்கு ஒரு மகள் (அனிக்ஷா) உள்ளார், அவர் புத்திசாலி மற்றும் நன்கு படித்தவர். அவர் 2015-2016 இல் அம்ருதாவுடன் தொடர்பு கொண்டார், ஆனால் அதன் பிறகு அவர் எல்லா தொடர்புகளையும் நிறுத்திவிட்டார்; ஆனால் 2021 இல், அவர் மீண்டும் என் மனைவியை அணுகினார், ”என்று தேவேந்திர ஃபட்னாவிஸ் சட்டசபையில் கூறினார்.

இதையும் படியுங்கள்: ‘எனது அரசியல் வாழ்க்கையை அழிக்க அச்சுறுத்தல்’ டிசைனர் மீது மனைவி அம்ருதா வழக்கு: ஃபட்னாவிஸ் விளக்கம்

பந்தய வழக்குகளில் மூன்று முறை கைது செய்யப்பட்ட அனில் ஜெய்சிங்கனி மீது, மொத்தம், 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. உண்மையில், அவரைக் கண்டுபிடிக்க கோவா காவல்துறை மே 11, 2019 அன்று லுக் அவுட் சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.

ஏறக்குறைய எட்டு ஆண்டுகளுக்கு முன்பு மே 2015 இல், குஜராத் அமலாக்க இயக்குநரகம் (ED) அனில் ஜெய்சிங்கனியின் இரண்டு வீடுகளில் சோதனை நடத்தியது மற்றும் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்தது. உடல் நலக்குறைவு காரணமாக அவர் தொடர்ந்து தலைமறைவாக ஓடிவருகிறார். அடுத்த ஆண்டு, மும்பையில் உள்ள ஆசாத் மைதான் மற்றும் சகினாகா ஆகிய இரண்டு காவல் நிலையங்களிலும் அவர் மீது மோசடி மற்றும் முறைகேடு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

சுமார் எட்டு ஆண்டுகளாக சட்டத்தில் இருந்து தப்பி ஓடிக்கொண்டிருக்கும் அனில் ஜெய்சிங்கனி, பி.சி.சி.ஐ.,யின் ஊழல் எதிர்ப்பு மற்றும் பாதுகாப்புப் பிரிவின் (ACSU) ரேடாரில் உள்ளார். சட்டவிரோத பந்தயத்திற்கு பெயர்போன மும்பையின் உல்ஹாஸ்நகரில் இருந்து கிரிக்கெட் புக்கியாக அவர் செயல்பட்டு வந்ததாக தெரிந்தவர்கள் கூறுகின்றனர். இதுதொடர்பாக ACSU நிபுணர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது, இதனையடுத்து அவர் கண்காணிப்பின் கீழ் இருந்தார்.

பெயர் வெளியிட விரும்பாத ACSU அதிகாரி ஒருவர் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம், “அவர் (அனில்) எங்களால் தேடப்பட்டு வரும் நபர். 2015 ஆம் ஆண்டில் அவர் தீவிரமாக செயல்பட்டு வந்தார், ஆனால் பின்னர் அவர் தலைமறைவாகிவிட்டார். மேலும் தகவலுக்கு ACSU உள்ளூர் காவல்துறையுடன் தொடர்பில் இருந்து வருகிறது,” என்று கூறினார். அனில் ஜெய்சிங்கனி தலைமறைவானதைத் தொடர்ந்து அவரது மகன் பின்னர் புக்கியாக செயல்பட ஆரம்பித்தாக கூறப்படுகிறது. “அவர் (மகன்) இப்போது மற்ற புக்கிகளுடன் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். ஆனால் நாங்கள் இன்னும் அனில் ஜெய்சிங்கனியையும் தேடி வருகிறோம்,” என்று ACSU அதிகாரி கூறினார்.

மும்பை போலீஸ் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “அகமதாபாத் செஷன்ஸ் நீதிமன்றம் அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பித்துள்ளது. ஆரம்பத்தில், உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகக் கூறி, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், ஆனால் பின்னர் அவரது மனைவி கரிஷ்மா ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறி போலி மருத்துவ சான்றிதழை சமர்ப்பித்தார்,” என்று கூறினார்.

பின்னர் லீலாவதி மருத்துவமனையில் டாக்டரின் கையெழுத்தை அவர் போலியாக போட்டதாக ஆசாத் மைதான போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, 2016ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி அனில் ஜெய்சிங்கனி மீது ஏமாற்றுதல் மற்றும் மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மூன்று ஆண்டுகளாக போலீஸாரால் அவரைக் கண்டுபிடிக்க முடியாததால், அவரை உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக அறிவித்தது.

அனில் ஜெய்சிங்கனி முக்கியமாக உல்ஹாஸ்நகரில் உள்ளதாகவும், புக்கிங் சர்க்யூட்டைப் பற்றி நன்கு தெரிந்தவர்களுக்கு அவரை நன்கு தெரியும் என்றும் ஒரு போலீஸ் அதிகாரி கூறினார். “செப்டம்பர் 2018 இல் உயர் நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளி என்ற அறிவிப்பு வெளியிடப்பட்ட பிறகு, அவருடைய இருப்பிடம் குறித்து யாராவது எங்களுக்குத் தெரிவிப்பார்கள் என்ற நம்பிக்கையில் நாங்கள் பேனர்களை ஒட்டினோம். அவரை கண்டுபிடிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம்,'' என்றார். செப்டம்பர் 2018 இல், அனில் ஜெய்சிங்கனியின் உல்ஹாஸ்நகர் இல்லத்திற்கு ஆசாத் மைதான காவல்துறை சீல் வைத்தது.

குஜராத் அமலாக்கத்துறை அதிகாரிகள் மற்றும் மும்பை, தானே, கோவா, அசாம் மற்றும் மத்தியப் பிரதேச காவல்துறை அதிகாரிகள் அனில் ஜெய்சிங்கனியைத் தேடி வருகின்றனர்.

அனில் ஜெய்சிங்கனிக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட பல வழக்குகளில் புகார்தாரரின் உறவினர் தீபக் கேஸ்வானி கூறுகையில், “அனில் ஜெய்சிங்கனி மக்கள் மீது பொய்யான புகார்களைப் பதிவுசெய்து அவர்களிடம் பணம் பறிப்பதில் பெயர் பெற்றவர். என் மாமா மீது கோவா மற்றும் அசாம் காவல்துறையில் முறையே பலாத்காரம் மற்றும் போதைப்பொருள் வைத்திருந்ததாக பொய் வழக்கு பதிவு செய்துள்ளார். எனது மாமா எந்த குற்றமும் செய்யவில்லை என்று நிரூபணமானது, பின்னர் அனில் ஜெய்சிங்கனி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது,” என்று கூறினார்.

கோவாவில் உள்ள பம்பாய் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவிற்கு பதிலளித்த கோவா காவல்துறை, ஜூலை 2019 இல், “தலைமறைவான குற்றம் சாட்டப்பட்ட அனில் ஜெய்சிங்கனி மற்றும் அவரது மகள் அனிக்ஷா ஜெய்சிங்கனி குறித்து, அவர்களைக் கண்டுபிடிக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. முக்கிய குற்றவாளியான அனில் ஜெய்சிங்கனியைப் பொறுத்தவரை, குற்றம் சாட்டப்பட்ட அனில் ஜெய்சிங்கனியைக் கண்டறிய 11/05/2019 அன்று லுக் அவுட் சுற்றறிக்கை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. அவரது மகள் அனிக்ஷா ஜெய்சிங்கனியைப் பொறுத்தவரை, பி.எஸ்.ஐ விலேஷ் துர்பத்கர் தலைமையிலான குழு 22/06/2019 முதல் 29/06/2019 வரை அகமதாபாத் குஜராத் மற்றும் உல்ஹாஸ்நகர், மகாராஷ்டிராவிற்கு அனுப்பப்பட்டது, இருப்பினும் அவர் கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்கு முன், பத்து தடவைகள், தலைமறைவான குற்றவாளி அனில் ஜெய்சிங்கனியைக் கண்டுபிடிக்க போலீஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டன. குஜராத் மற்றும் மகாராஷ்டிராவின் உள்ளூர் போலீசார் ஏற்கனவே உஷார்படுத்தப்பட்டுள்ளனர். தலைமறைவான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டதும், கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்,” என்று தெரிவிக்கப்பட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Maharashtra
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment