கொரோனா வைரஸ் கட்டுபடுத்துவதற்காக போடப்பட்ட முடக்க நிலையில் இருந்து வெளிவருவதற்கான பல்வேறு சாத்தியக்கூறுகளை மத்திய அரசு யோசித்து வரும் வேளையில், தினக்கூலி தொழிலாளர்கள், சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்தோர் போன்ற அத்தியாவசிய மக்கள் இயக்கத்திற்கு சிறப்பு ரயில்கள் ஏதேனும் தேவையா என்பதைப் புரிந்துகொள்ள இந்திய ரெயில்வேத் துறை மாநிலங்களுடன் பேச இருக்கிறது.
நேற்று நடைபெற்ற அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில், வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்த முடக்கநிலை காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று மாநிலங்கள், மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் நிபுணர்கள் ஆலோசனை கூறிவருகின்றனர் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார். எனவே, ரெயில்வேயின் இந்த முயற்சி, சில மாநிலங்கள் பொது முடக்க காலத்தை,ஏப்ரல் 14க்குப் பின் நீட்டிக்க உதவி புரியும்.
அந்தந்த மாநில தலைமைச் செயலாளர்களுடன், இது குறித்து பேச ரயில்வே மண்டல பொது மேலாளர்களுக்கு ரயில்வே வாரியம் அங்கீகாரம் அளித்துள்ளது.
முன்னதாக, ஊரடங்கு தொடர்பான பல விவாதங்களில், தொலைதூர பகுதிகளில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு போக்குவரத்தை ஏற்பாடு செய்ய மாநில அரசுகள் வலியுறித்தி வந்தன. இதுதவிர, பெரும்பாலான புலம்பெயர்ந்த மக்கள் தங்கள் சொந்த கிராமங்களுக்கு சென்று விட்டதால், பல்வேறு பகுதிகளில் இயங்கும் தொழிற்சாலைகள் கோவிட்-19 தொடர்பான உற்பத்தியை செயல்படுத்த முடியாமல் திணறி வருகிறது. இதுதவிர, அறுவடை காலம் நெருங்கி வருவதால் வயல்களில் உழைப்பு தேவைப்படுகிறது.
எங்கும் நிறுத்தம் இல்லாத, சமூக விலகளை தக்க வைத்துக் கொள்ளும் குறைந்த எண்ணிக்கையிலான பயணாளிகளை கொண்டு செல்லும் சிறப்பு ரயில் சேவைகள் சில வழித்தடங்களில் செயல்படுத்த திட்டமிட்டு வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அடித்தட்டு மக்களுக்கு தேவைப்படும் பொருளாதார நடவடிக்கை குறித்து ஆராய உருவாக்கப்பட்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு, தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் விதமாக ரயில்வே போன்ற வெகுஜன போக்குவரத்து வசதிகள் இப்போது செயல்படுத்த வேண்டாம் என்று அரசாங்கத்திற்கு பரிந்துரைத்துள்ளது.
பாஜக தேசிய தலைவர் ஜே.பிநட்ட தலைமையிலான இந்த குழு, தனது பரிந்துரையில், தொழிலாளர்கள் ஒருமுறை தங்கள் கிராமங்களுக்கு சென்றால், குறைந்தது தீபாவளி வரை நகரங்களுக்கு திரும்ப மாட்டார்கள். இதனால், பொருளாதார நடவடிக்கைகளை கடுமையாக பாதிப்படையும். உற்பத்தி பிரிவுகளின் செயல்பாடுகள் முடங்கும் சூழ்நிலைக்கு வழிவகுக்கும். மேலும், கிராமப்புறங்களில் போதுமான வேலைவாய்ப்புகள் இல்லாத காரணத்தால், ஆபத்தான சூழ்நிலையாக உருவாகக்கூடும்,”என்று தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஏப்ரல் 14க்குப் பிறகு பொது முடக்க காலம் நீக்கப்பட்டால், ரயில்வே பின்பற்றப்பட வேண்டிய மூலோபாயம் குறித்து அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளிடமிருந்து இதுவரை எந்த தகவலும் வரவில்லை. கொரோனா வைரஸ் பரவலின் விகிதத்தைப் பார்க்கும் பொழுது, ரெயில்வே துறை தனது சேவைகளை ஒரே நாளில் தொடங்க அனுமதிக்காது என்றும் அதிகாரிகள் கருதுகின்றனர்.
ரயில்வே அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “இதுவரை நடைபெற்ற விவாதங்களில், பயணிகள் சேவைகளை முழுமையாகத் தொடங்குவது பற்றி பேசப்படவில்லை. ஏனெனில், அதற்கு நாங்கள் தற்போது முன்னிரிமை கொடுக்கவில்லை. அதிகப்படியான விவரங்களுக்கு மாநிலங்களுடன் பேசுவோம். ரயில்களை இயக்க விரும்பாத அல்லது மாநிலங்களுக்கு இடையேயான ரயில் பயணத்தை தொடர விரும்பாத மாநிலங்களில் ரயில் சேவைகள் இயக்குவது குறித்து யோசிப்பது தேவையற்றது" என்றும் அந்த அதிகாரி கூறினார்.
21 நாள் பொது முடக்க முடக்கம் அறிவிக்கப்படுவதற்கு முன்பே, மாநிலங்களுக்கு இடையிலான ரயில் சேவைகளை அனுமதிக்க வேண்டாம் என்று மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்கள் கேட்டுக் கொண்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
பொது முடக்க காலநிலைக்குப் பின்பு, ரயில்கள் இயக்கத்தால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் வருவார்கள் என்று எதிர்பார்ப்பில் இருக்கும் பல மாநிலங்கள், அதே தொழிலாளர்கள், நகரங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மைல்கள் நடந்து சென்று தங்களது கிராமத்திற்கு திரும்பிச் செல்லும் நேரத்தில் ஏன் எந்த ஆர்வத்தையும் காட்டவில்லை என்ற கேள்வியும் அதிகாரிகள் மத்தியில் எழுப்பப்பட்டு வருகிறது.
முன்னதாக, நாட்டில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கல் சுமுகமாக பராமரிக்கப்படுவதற்கென அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய அவசர நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாநில அரசுச் செயலர்களுக்கும் மத்திய உள்துறைச் செயலர் திரு அஜய் குமார் பல்லா கடிதம் எழுதியிருக்கிறார். அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் 1955ன்படி அவர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். பல்வேறு காரணங்களால், குறிப்பாக தொழிலாளர் பற்றாக்குறை போன்ற காரணங்களால் உற்பத்தி இழப்பு ஏற்பட்டிருப்பதாகத் தெரிய வந்துள்ளது. இந்தச் சூழலில் பதுக்கல், கருப்புச் சந்தை, கொள்ளை லாப விற்பனை, எதிர்ப்பார்ப்பு வர்த்தகம் ஆகியவற்றுக்கான சாத்தியக் கூறுகளால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும். எனவே. பொது மக்களுக்கு நியாயமான விலையில் இந்தப் பொருட்கள் கிடைக்கச் செய்ய மாநிலங்கள் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 17ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சிதராமனால் உருவாக்கப்பட்ட, ஜே.பி நட்டா தலைமையிலான எம்.பி.க்கள் குழு, பொது முடக்க காலத்தில் கிராமப்புறங்களில் செயல்படுத்தப்படக்கூடிய குறைந்த பட்ச நடவடிக்கைகள் குறித்து நேற்று நிதி அமைச்சருக்கு பவர் பாயிண்ட் மூலம் சில விளக்கத்தை கொடுத்தது.
வெகுஜன போக்குவரத்து வசதிகளை செயல்படுத்த வேண்டாம் என்பதை தாண்டி, எம்.எஸ்.எம்.இ கடன்களுக்கான வட்டிகளை மூன்று மாதங்களுக்கு தள்ளுபடி செய்ய வேண்டும், பஞ்சாயத்துகளுக்கு அதிக பணம் வழங்கப்பட வேண்டும், அதிக வேலை வாய்ப்புகளை வழங்க வகையில் விவசாயத் துறையில் தளர்வு ஏற்படுத்த வேண்டும், மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி மேம்பாட்டு திட்டத்தின் வேலை நாட்கள் 100- ல் இருந்து 150 நாட்களாக உயர்த்தப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளையும் முன்மொழிந்தது வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த குழுவில் ஜெயந்த் சின்ஹா, சிவகுமார் உதாசி, சஞ்சய் ஜெய்ஸ்வால், மனோஜ் கோட்டக் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் வினய் சகஸ்ரபுத்தே, ராஜீவ் சந்திரசேகர் மற்றும் ஸ்வபன் தாஸ்குப்தா ஆகியோர் அடங்குவர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.